search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிணமாக மீட்கப்பட்ட  ஜெகன்.
    X
    பிணமாக மீட்கப்பட்ட ஜெகன்.

    திருப்பூர் அருகே 2 குழந்தைகளுடன் வியாபாரி கிணற்றில் குதித்து தற்கொலை - கடன் பிரச்சினையால் விபரீத முடிவு

    ஜெகன் குடும்ப பிரச்சினை காரணமாக? தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முத்தூர் அருகே உள்ள துத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 29). இவரது மனைவி காயத்ரி (27). இவர்களது மகள்கள் தேஜஸ்வி (4), சுவஸ்வி (2). ஜெகன் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள காசிப்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து ஆடுகள் வியாபாரம் செய்து வந்தார். 
     
    நேற்று அவர், தனது 2 மகள்களையும் அழைத்து கொண்டு சொந்த ஊரான  வெள்ளகோவில் துத்திக்குளத்திற்கு சென்றார். அங்கு சென்றதும் உறவினர்களிடம் குழந்தைகளுடன் வெளியே சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். 

    அதன்பிறகு இரவு ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் தேடியும்  கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் நள்ளிரவு வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் ஜெகன் மற்றும்  அவரது குழந்தைகள் தேஜஸ்வி, சுவஸ்வி பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், உடனடியாக வெள்ள கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    இதையடுத்து போலீசார் மற்றும் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

    பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு இன்று காலை ஜெகன்,தேஜஸ்வி, சுவஸ்வி உடல்களை மீட்டனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக  காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் காங்கேயம் டி.எஸ்.பி., குமரேசன் விசாரணை நடத்தினார். 
     
    ஜெகன் தனது 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    ஆனால் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. 

    ஜெகனுக்கு கடன் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் தற்கொலை செய்தாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக? தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளுடன் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×