search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நடுவழியில் இறக்கி விட்டதால் 3.கி.மீ., மழையில் நனைந்தபடி ஊருக்கு சென்ற பள்ளி மாணவர்கள் - அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது புகார்

    குண்டடத்தில் இருந்து காங்கயம் செல்லும் கே- 8 வழித்தட அரசுப் பேருந்தில் 20 மாணவ, மாணவிகளும் ஏறியுள்ளனர்.
    காங்கயம்:

    காங்கயம் அருகே தாயம்பாளையம் கிராமத்தில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சூரியநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட மரவபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். 

    இதற்காக காலை மற்றும் மாலையில் இந்த கிராமத்திற்கு வரும் அரசுப்பேருந்து மூலம் பள்ளிக்கு சென்று வருகின்றனர். சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்த பின்னர் தங்கள் ஊருக்குச் செல்லும் வழக்கமான பேருந்தான குண்டடத்தில் இருந்து காங்கயம் செல்லும் கே- 8 வழித்தட அரசுப் பேருந்தில் 20 மாணவ, மாணவிகளும் ஏறியுள்ளனர். 

    பேருந்து கிளம்பும்போது பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இந்தப் பேருந்து மரவாபாளையத்துக்கு செல்லாது எனக் கூறி, அந்த மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். இதையறிந்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இது குறித்து பேருந்தின் ஓட்டுநரிடம் கேட்டபோது, அவர்களிடமும் இதே பதிலைக் கூறிவிட்டு, மாணவர்களை இறக்கி விட்டு பேருந்து காங்கயம் சென்றுள்ளது.

    இதனால் வேறு வழியில்லாமல் அந்த 20 மாணவ, மாணவிகள் மழையில் நனைந்து கொண்டே 3 கி.மீ. தூரம் நடந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். மேற்கண்ட பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவ்வப்போது இந்த மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விடுவது வழக்கம் என மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசுப் போக்குவரத்துக் கழக காங்கயம் பணிமனையின் கிளை மேலாளரிடம் ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் பவுத்தன் புகார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அரசுப் போக்குவரத்துக்கழக காங்கயம் பணிமனை கிளை மேலாளர் நடராஜன் கூறியபோது, சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநரிடம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
    Next Story
    ×