search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வடகிழக்கு பருவமழையால் குடிமங்கலம் பகுதியில் நிரம்பி வழியும் தடுப்பணைகள்

    குடிமங்கலம் ஒன்றியத்தின் மேற்குப்பகுதியில் துவங்கும் பல்வேறு மழை நீர் ஓடைகள் உப்பாறு ஓடையுடன் இணைகின்றன.
    குடிமங்கலம்:

    கோவை சுற்றுப்பகுதியில் பெய்யும் மழையால் நொய்யல் ஆற்று நீரை ஆதாரமாக கொண்டுள்ள திருப்பூர் சுற்றுப்பகுதி குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கோவை மாவட்ட எல்லையாக உள்ள செந்தேவிபாளையம் அணைக்கட்டில் இருந்து நீர் ஆதாரம் பெறும் சாமளாபுரம் குளத்துக்கு ராஜவாய்க்கால் மூலம் நீர் வந்து குளம் நிரம்பியுள்ளது. 

    இந்த குளம் நிரம்பிய நிலையில் வெளியேறிய உபரி நீர், ராஜ வாய்க்கால் வழியாக பள்ளபாளையம் குளத்துக்கு செல்கிறது. தற்போது இந்த குளமும் நிரம்பி உபரி நீர் வெளியேறி மீண்டும் நொய்யலுக்கு செல்கிறது.

    நொய்யல் ஆற்றில் மங்கலம் தடுப்பணையில் இருந்து நீர் வரத்து பெறும் சின்னாண்டிபாளையம் குளமும் தற்போது நிரம்பியுள்ளது. திருப்பூர் அடுத்த மாணிக்காபுரம் குளத்துக்கு காசிபாளையம் அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் மூலம் நீர் செல்கிறது. 

    கடந்த சில நாட்கள் முன் இந்த வாய்க்காலில் நீர் திறக்கப்பட்ட போது வாய்க்கால் பெருமளவு ஆக்கிரமித்து குவிக்கப்பட்டிருந்த குப்பை கழிவுகளால் நீர் செல்வது தடைப்பட்டது. 

    இதில் தற்போது நீர் செல்வதால் இக்குளத்துக்கு தண்ணீர் செல்ல தொடங்கியுள்ளது. நொய்யல் ஆற்றில் அணைமேடு பகுதியில் உள்ள அணைக்கட்டிலிருந்து மண்ணரை குளத்துக்கு நீர் கொண்டு செல்லும் வாய்க்கால் உள்ளது. தற்போது இந்த வாய்க்காலில் கட்டுமான பணி நடைபெறுகிறது. 

    இதனால் இந்த குளத்துக்கு தற்போது நீர் செல்வது தடைபட்டுள்ளது. முன்னர் குளத்தில் தேங்கிய நீர் தற்போது குளத்தில் பாதியளவுக்கு மேல் தேங்கி நிற்கிறது. அவிநாசி வழியாக வரும் நல்லாற்றில் இருந்து நஞ்சராயன்குளம் நீர் ஆதாரம் பெறுகிறது. 

    அவிநாசி சுற்றுப்பகுதியில் பெய்த மழை காரணமாக தற்போது இந்த குளத்துக்கு நீர் வந்து தற்போது குளம் முற்றிலும் நிரம்பி நிற்கிறது. உபரி நீர் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஷட்டர் வழியாக வெளியேற்றப்படுகிறது. திருப்பூரை சுற்றியுள்ள குளங்கள் மழையால் நிரம்பி வரும் நிலையில் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும். 

    விவசாய கிணறுகள் மற்றும் பாசனப் பகுதிகளுக்கும் நீர் ஆதாரம் அதிகரித்துள்ளது. இதனால் பல தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் வட்டாரத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. 

    மழைக்காலங்களில் மட்டும் நீரோட்டம் இருக்கும் உப்பாறு ஓடை மட்டுமே அப்பகுதியின் நிலத்தடி நீராதாரமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போதிய மழை இல்லாதது  உள்ளிட்ட காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து நீண்ட கால பயிரான தென்னை மரங்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

    மேலும் நிலத்தடி நீரும் உவர்ப்பாக இருப்பதால் காய்கறி சாகுபடி மேற்கொள்ள முடிவதில்லை. இதனால் பல ஆயிரம் ஏக்கரில் விவசாய சாகுபடி கேள்விக்குறியாக இருந்தது. ஆயிரம் அடி வரை போர்வெல் அமைத்தும் போதிய தண்ணீர் கிடைக்காத நிலை தற்போது மாறி வருகிறது.

    குடிமங்கலம் ஒன்றியத்தின் மேற்குப்பகுதியில் துவங்கும் பல்வேறு மழை நீர் ஓடைகள் உப்பாறு ஓடையுடன் இணைகின்றன. இந்த மழை நீர் ஓடைகள் போதிய பராமரிப்பின்றி முட்காடாக மாறியிருந்தன. பருவமழை காலத்தில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி வைக்கவும் வழியில்லாத சூழல் இருந்தது.

    இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக  உப்பாறு உட்பட மழை நீர் ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி தண்ணீரை தேக்கி வைத்து நிலத்தடி நீரை மேம்படுத்த அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதன்படி அனிக்கடவு, சிந்திலுப்பு உட்பட பல்வேறு இடங்களில் ஓடையின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பி.ஏ.பி., பாசனத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து 5 சுற்றுகளாக தண்ணீர் வழங்கப்படுகிறது.

    மேலும் வடகிழக்கு பருவமழையும் தற்போது குடிமங்கலம் வட்டாரத்துக்கு கை கொடுத்துள்ளது. நடப்பு சீசனில் பெய்து வரும் தொடர் மழையால் ஓடைகளுக்கு நீர்வரத்து கிடைத்துள்ளது. உப்பாறு மற்றும் இதர ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பியுள்ளன.

    தொடர் மழையால் தடுப்பணைகள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குடிமங்கலம் ஒன்றியம் அனிக்கடவு சுற்றுப்பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட மழைநீர் ஓடைகள் அமைந்துள்ளன.

    இதில் அதிக நீர் வரத்துள்ள விருகல்பட்டி முதல் அனிக்கடவு வழியாக சிந்திலுப்பு செல்லும் ஓடை தேர்வு செய்யப்பட்டு 6 தடுப்பணைகள் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் பணிகள் துவங்க உள்ளது. இத்தடுப்பணைகள் கட்டப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×