search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
    X
    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் பள்ளி முடிந்த பிறகு மாலை நேரங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
    மதுரை:

    மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் விழிப்புணர்வு கலை பயண பிரசார வாகனத்தை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கல்வி மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு போதாது என்று முதல்-அமைச்சரின் பொருளாதார ஆலோசனை நிபுணர் குழுவும், சட்டமன்ற உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர்.

    மாணவிகள்


    அதன் அடிப்படையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி திறனை மேம்படுத்துவதற்காக ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் என்ற புதிய திட்டத்தை உருவாக்கி அதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளிகளில் உள்ள மாணவ-மாணவிகளின் விவரங்கள் மட்டுமின்றி பிறப்பு சான்றிதழ் அடிப்படையிலும் தகவல்களை திரட்டி மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு கல்வி போதிப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.

    இதன் அடிப்படையில் 30 லட்சம் மாணவர்கள் இருப்பதாக தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இந்த மாணவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று அங்குள்ள மந்தை, சமூதாய கூடங்கள், பள்ளிகளில் மாலைநேர வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

    20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற அடிப்படையில் 1½ லட்சம் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அதற்கான இணைய தளம் மூலம் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    முதல் கட்டமாக மதுரை உள்பட 9 மாவட்டங்களில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கு தேவையான அனைத்து நிதியும் ஒதுக்கப்படும்.

    திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் பள்ளி முடிந்த பிறகு மாலை நேரங்களில் இந்த கல்வி புகட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×