search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி டைரக்டர் கைது
    X
    போலி டைரக்டர் கைது

    சினிமா ஆசை காட்டி பெண்களிடம் உல்லாசமாக இருந்து ஆபாச வீடியோ எடுத்த போலி டைரக்டர் கைது

    ராமேசுவரத்தில் சினிமா ஆசை காட்டி பெண்களிடம் உல்லாசமாக இருந்து ஆபாச வீடியோ எடுத்த போலி டைரக்டர் கைது செய்யப்பட்டார்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு 2 பெண்களுடன் ஒரு வாலிபர் அறை எடுத்து தங்கியுள்ளார். தன்னை சினிமா டைரக்டர் எனக்கூறிய அவர் அந்த பெண்களை வைத்து நாடகம் மற்றும் குறும்படம் எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் கடந்த 15 நாட்களில் அவர் அடிக்கடி தங்கும் விடுதிகளை மாற்றி தங்கியுள்ளார். இது பற்றிய தகவல் ராமேசுவரம் நகர் போலீசாருக்கு கிடைத்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விடுதிக்குச் சென்று வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். இதில் அவர் கோவில்பட்டி பசுவந்தனை ரோடு, ராஜீவ் நகர் 6-வது தெருவைச் சேர்ந்த இமானுவேல் ராஜா என்ற சக்தி (வயது 43) என தெரியவந்தது. இவருடன் தங்கியிருந்தது சென்னையைச் சேர்ந்த 2 பெண்கள் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

    இமானுவேல் ராஜா பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெண்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக வரவழைத்துள்ளார். அப்போது அவர்களை ஏமாற்றி தங்கும் அறையில் வைத்து உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் ரகசியமாக வீடியோ எடுத்து அதனை காட்டி பெண்களிடம் மிரட்டி பணம் பெற்றுள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட பெண்களை, இமானுவேல் ராஜா ஏமாற்றியதாகவும், அவர்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும் அதை வீடியோ எடுத்து மிரட்டி வருவதாகவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது.

    கைதான இமானுவேல் ராஜாவிடம் இருந்து செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சினிமா ஆசை காட்டி இமானுவேல் ராஜா எத்தனை பெண்களை சீரழித்தார்? என்பது தெரியவில்லை. இதில் வேறு யாரும் உடந்தையாக இருந்தார்களா? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது.

    போலி டைரக்டர் கைதான சம்பவம் ராமேசுவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×