search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலைக்கு முயன்று உயிருடன் மீட்கப்பட்ட முருகேசன்
    X
    தற்கொலைக்கு முயன்று உயிருடன் மீட்கப்பட்ட முருகேசன்

    குளித்தலை அருகே குடும்பத்தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை - தந்தை கைது

    குடும்பத் தகராறில் அப்பாவி குழந்தைகளை கிணற்றில் வீசி தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    குளித்தலை:

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது ஆதனூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 30). இவரது மனைவி பிரியா (27). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ருதுர்திலாயி (4) என்ற மகளும், கிருஷ்ணன் (2) என்ற மகனும் இருந்தனர்.

    முருகேசன் விவசாய கூலித்தொழிலோடு, ஜே.சி.பி. டிரைவராகவும் வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே முருகேசனுக்கும், அவரது மனைவி பிரியாவுக்கும் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் பிரியா கணவரை பிரிந்து அவ்வப்போது தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதும், பின்னர் அவரை உறவினர்கள் சமரசம் செய்து மீண்டும் குடும்பம் நடத்த அனுப்பி வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவும் வழக்கம்போல் கணவன்-மனைவி இருவரும் குடும்பத்தகராறில் சண்டையிட்டு கொண்டனர். இதில் மன விரக்தியுடன், ஆத்திரம் அடைந்த முருகேசன் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

    பின்னர் இருசக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் புறப்பட்டார். கோபத்தில் வெளியில் சென்றிருக்கலாம், சில மணி நேரங்களில் வந்து விடுவார் என்று பிரியா நீண்ட நேரமாக காத்திருந்தார். ஆனால் அவர் வராததால் பதட்டம் அடைந்த பிரியா, அக்கம்பக்கத்தினரை அழைத்து தகவல் கூறினார்.

    அவர்கள் இரவு முழுவதும் உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் முருகேசன் மற்றும் குழந்தைகள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை தோகைமலையில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள ஆவுடையாப்பட்டி கிராமத்தில் சாலையோரம் முருகேசனுக்கு சொந்தமான இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது.

    அந்த வழியாக சென்றவர்கள் சந்தேகத்தின் பேரில் சென்று பார்த்தபோது, அங்குள்ள குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இரண்டு குழந்தைகள் பிணமாக மிதந்தன. அதேநேரம் முருகேசன் கிணற்றின் ஒரு கரையில் தவித்துக் கொண்டிருந்தார்.

    உடனடியாக பொதுமக்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் முசிறி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றில் பிணமாக மிதந்த 2 குழந்தைகளையும், உயிருடன் இருந்த முருகேசனையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், குடும்பத்தகராறில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் முருகேசன் குழந்தைகளை வீட்டில் இருந்து அழைத்து வந்ததும், முதலில் கிணற்றில் குழந்தைகளை வீசி கொலை செய்த முருகேசன், தானும் கிணற்றில் குதித்துள்ளார்.

    ஆனால் சாவும் முடிவை கைவிட்ட அவர் அங்குள்ள கரையில் ஏறி தப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முருகேசனை கைது செய்தனர்.

    Next Story
    ×