search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது

    திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 8 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் நகர் பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மோட்டார் சைக்கிள்களை திருடிச்சென்ற மர்மநபர்களை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் திண்டுக்கல் டவுன் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், வீரபாண்டியன் மற்றும் போலீசார் ஜார்ஜ், எட்வர்ட், ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம், ஜெயராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் திண்டுக்கல் நகர் பகுதிகளில் தொடர் வாகன சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக வந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சவேரியார் பாளையத்தைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 32), பேகம்பூரை சேர்ந்த ராஜேஷ் (31) என்பதும் தொடர்ந்து அவர்கள் வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மூர்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 8 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×