search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிராம மக்களிடம் கலெக்டர் மோகன் விசாரணை மேற்கொண்டபோது எடுத்த படம்.
    X
    கிராம மக்களிடம் கலெக்டர் மோகன் விசாரணை மேற்கொண்டபோது எடுத்த படம்.

    பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம்

    செஞ்சி அருகே பொண்ணங்குப்பம் பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் விசாரணை நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    விழுப்புரம்:

    விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலை ஜனநாயக முறைப்படியும், நேர்மையாகவும் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில ஊராட்சிகளில், ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியம் பொண்ணங்குப்பம் பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

    செஞ்சி அருகே பொண்ணங்குப்பம் ஊராட்சியில் துத்திப்பட்டு மற்றும் பொண்ணங்குப்பம் ஆகிய 2 கிராமங்கள் உள்ளன. இதில் துத்திப்பட்டில் 3,800 வாக்காளர்களும், பொண்ணங்குப்பத்தில் 1,472 வாக்காளர்களும் உள்ளனர். தற்போது இந்த பஞ்சாயத்து தலைவர் பதவி, ஆதிதிராவிட பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது.

    இந்த நிலையில் பொண்ணங்குப்பம் பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது. இதில் துத்திப்பட்டை சேர்ந்த ஒரு பெண் ரூ.13 லட்சத்துக்கு ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பொண்ணங்குப்பம் கிராம மக்கள் நேற்று காலை ஒன்று திரண்டு உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மோகன், பொண்ணங்குப்பத்திற்கு நேரில் சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஒவ்வொரு உள்ளாட்சி தேர்தலின்போதும் பொண்ணங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடுவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது என கிராம மக்கள் கலெக்டரிடம் கூறியதோடு, இனிவரும் காலங்களில் பொண்ணங்குப்பத்தை தனி ஊராட்சியாக மாற்றித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதற்கு கலெக்டர் மோகன், இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    இதேபோல் காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தேரி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 5 பேருக்கு மேல் போட்டியிட போவதாக கூறப்படுகிறது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் யார் அதிக பணம் தருகிறார்களோ? அவரையே பொதுமக்கள் ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான ஏலம் அக்கிராமத்தில் நடைபெற்றது.

    இதில் ரூ.1 லட்சத்தில் இருந்து ஏலம் தொடங்கியது. பின்னர் போட்டி போட்டு ஏலம் தொகை அதிகமாகிக்கொண்டே இருந்த நிலையில் வெள்ளேரிப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ.14 லட்சத்திற்கு ஏலம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏலம் நிறுத்தப்பட்டது.
    Next Story
    ×