search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து காரணமாக காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து பாய்ந்தோடும் தண்ணீர்.
    X
    ஒகேனக்கல்லில் நீர்வரத்து காரணமாக காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து பாய்ந்தோடும் தண்ணீர்.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

    கொரோனா ஊரடங்கு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆறு மற்றும் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, உத்தர கன்னடாஹாசன், மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 17,384 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று மாலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்று நீருடன் மழைநீரும் சேர்ந்து கரைபுரண்டு ஓடியது. ஒகேனக்கல்லில் உள்ள மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து குறைந்த போது வெளியே தெரிந்த பாறை திட்டுகள் அனைத்தும் மூழ்கிவிட்டன.

    மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கிளை ஆறான சின்னாற்றில் கரையோர பகுதிகளான கோவில் பள்ளம், யானைக்கால் மடுவு, முத்தூர்மலை, கெம்பாகரை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் தொடர்ந்து 3-வது நாளாக சின்னாற்றில் நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    கொரோனா ஊரடங்கு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆறு மற்றும் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு களை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×