search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

    இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    இந்திய கடலோர பகுதியில் மீன்பிடித்துவரும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை தொடர்ந்து 3 நாட்கள் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

    இதனால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பினார்கள். இதன் மூலம் அவர்கள் வருமானம் இல்லாமல் தவிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    வழக்கம்போல் கச்சத்தீவு பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் கடலில் செல்லும் மோட்டார் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    திடீரென மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர், இந்த பகுதியில் மீன் பிடிக்க கூடாது உடனே இங்கிருந்து காலி செய்து மாற்று பகுதிக்கு செல்லுங்கள் என எச்சரித்தனர். இதனால் உயிருக்கு பயந்த மீனவர்கள் அந்த பகுதியில் விரித்திருந்த வலைகளை எடுத்து கொண்டு மாற்று பகுதிக்கு செல்ல முயன்றனர்.

    அப்போது திடீரென இலங்கை கடற்படையினர் மீனவர்களின் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசி எறிந்தனர்.

    பின்னர் அவர்களை விரட்டியடிக்க தொடங்கினர். இதில் சில மீனவர்கள் தாமாகவே மீன்பிடி வலைகளை வெட்டிவிட்டு அந்த பகுதியில் இருந்து படகுகளை மட்டும் எடுத்துக்கொண்டு ராமேசுவரம் வந்து சேர்ந்தனர்.

    இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் 30-க்கும் மேற்பட்ட படகுகளுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதம் அடைந்ததாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மீனவர் பாரதி

    இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியைச் சேர்ந்த மீனவர் பாரதி கூறியதாவது:-

    சம்பவத்தன்று இந்தியா- இலங்கை சர்வதேச கடலோர பகுதியில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தோம்.

    அப்போது கடலில் செல்லும் 20-க்கு மேற்பட்ட பைக்கில் இலங்கை கடற்படையினர் நாங்கள் மீன்பிடித்த பகுதிக்கு வந்தனர். அவர்கள் இரும்பால் அடிக்கப்பட்ட கத்திகளை வைத்து மீன் பிடிக்க விரிக்கப்பட்ட மீன்பிடி வலைகளை அறுத்து விட்டனர்.

    நாங்கள் அவர்கள் கையில் இருந்த ஆயுதத்தை பார்த்து விட்டு உயிருக்கு பயந்து அந்த பகுதியில் இருந்து படகுகளை எடுத்துக் கொண்டு ராமேசுவரம் வந்தோம்.

    வழக்கம்போல் மீன் பிடித்துக்கொண்டு இன்று அதிகாலையில் வருவோம். ஆனால் நேற்று நள்ளிரவே வந்து சேர்ந்து விட்டோம். இதனால் எங்களுடைய படகு உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஆனது. இதுபோல 30-க்கும் மேற்பட்ட படகுகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

    இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    Next Story
    ×