search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி அமைக்க வேண்டும்- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

    பாலியல் தொல்லைகள் குறித்து மாணவ-மாணவிகள் அச்சமின்றி புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சேலம் மாவட்டத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலய வளாகத்தில் குடியிருக்கும் மதபோதகர் எஸ்.ஜெயசீலன் என்பவர், அந்த வளாகத்தில் இயங்கிவரும் பள்ளியில் படிக்கும் 12 வயது மாணவியிடம் இயேசுநாதரின் கதைகளை கூறுவதாக வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயசீலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் கோர்ட்டு, மதபோதகர் ஜெயசீலனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயசீலன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் கீழ்கோர்ட்டு தண்டனையை உறுதி செய்கிறேன். மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு அளித்தார்.

    மேலும் அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

    பொதுவாக மாணவிகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமையை வெளியில் சொல்ல பயப்படுகின்றனர்.

    பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், நிர்வாகிகள் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் அவர்கள், அதுகுறித்து புகார் அளித்தால் தங்கள் கல்வி பாதிக்கப்படும் என்று அச்சப்படுகின்றனர். எனவே, அனைத்து பள்ளிகளிலும், சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர், போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கு குறையாத பெண் போலீஸ் அதிகாரி, மாவட்ட கல்வி அலுவலர், உளவியல் பெண் நிபுணர், அரசு டாக்டர்கள் ஆகியோர் அடங்கிய குழுவை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

    சுதந்திரமாக புகார் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகளை அமைக்க வேண்டும். அந்த புகார் பெட்டியின் சாவி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வாரந்தோறும் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியுடன் சென்று புகார் பெட்டியை திறந்து புகார் எதுவும் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். புகார் தெரிவிக்கப்பட்டு, அதில் முகாந்திரம் இருந்தால், அதன் மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீசாருக்கு பரிந்துரை செய்யவேண்டும்.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
    Next Story
    ×