search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கணவர், மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு பெண் தற்கொலை - ஊரடங்கால் வறுமையில் வாடியதால் விபரீதம்

    நாகர்கோவிலில் ஊரடங்கால் வேலை இழந்து வறுமையில் வாடியதால் கணவர், மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கீழபுத்தேரி பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 39), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு சுதன் (13), மதன் (10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    முத்து தனது குடும்பத்துடன் கீழபுத்தேரியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு அவருடைய இடது கை மற்றும் கால் செயலிழந்து படுத்த படுக்கையானார். இதற்காக அவருக்கு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதனால் லட்சுமி நாகர்கோவிலில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வேலைக்கு சென்று, குடும்ப செலவுகளை கவனித்து வந்தார். இதற்கிடையே கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக முழு ஊரடங்கால் கடை அடைக்கப்பட்டதை தொடர்ந்து அவருடைய வேலை பறிபோனது.

    கணவனும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானதாலும், தானும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாலும் வருமானம் இன்றி தவித்தார். ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், குடும்பத்தினருடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

    அதன்படி நேற்று முன்தினம் இரவு உணவில் விஷத்தை கலந்து தானும் சாப்பிட்டு தனது கணவர் முத்து மற்றும் மூத்த மகன் சுதன் ஆகியோருக்கு லட்சுமி விஷத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. இளைய மகன் மதன் தூங்கி விட்டதால் அவனுக்கு விஷம் கொடுக்கவில்லை என தெரிகிறது. விஷம் அருந்திய 3 பேரும் வீட்டுக்குள் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

    நேற்று காலையில் 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள், லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முத்துவும், சுதனும் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குடும்பம் வறுமையில் வாடியதால் கணவர், மகனுக்கு விஷம் கொடுத்து பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×