search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கர்ப்பிணியை கொன்று தற்கொலை என நாடகமாடிய கணவர்- 10 மாதங்களுக்கு பின்னர் குட்டு அம்பலம்

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கர்ப்பிணியை கொன்று தற்கொலை நாடகமாடிய கணவரை போலீசார் 10 மாதங்களுக்கு பின்னர் கைது செய்தனர்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 30). இவரது மனைவி வெண்ணிலா (21). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    தங்கதுரை கோவில்பட்டியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் குடும்பத்துடன் அங்கு தங்கி இருந்தார். கடந்த ஆண்டு அவர் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்தார்.

    இந்நிலையில் கர்ப்பமாக இருந்த வெண்ணிலா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கோப்புப்படம்

    இதுகுறித்து தங்கதுரை போலீசில் கூறும்போது குடும்ப பிரச்சனை காரணமாக வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டதாக கூறி இருந்தார். அதன் பேரில் தற்கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

    திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ.தலைமையிலும் விசாரணை நடைபெற்றது. தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில், தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவர் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என வெண்ணிலாவின் தந்தை ராஜூ போலீசில் புகார் செய்திருந்தார். இதன் அடிப்படையிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் வெண்ணிலாவின் பிரேத பரிசோதனை அறிக்கை சமீபத்தில் வெளிவந்தது. அதில் வெண்ணிலா தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் தெரியவந்தது.

    இதன்பேரில் தங்கதுரை மீது சந்தேகமடைந்த போலீசார் நேற்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் வெண்ணிலாவை கொலை செய்ததும் அதனை மறைக்க தற்கொலை நாடகமாடியதும் தெரியவந்தது.

    தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காததை மனைவி கண்டித்ததாகவும், அது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது.

    அதன்படி சம்பவத்தன்று நடைபெற்ற தகராறில் ஆத்திரம் அடைந்த தங்கதுரை மனைவியை கீழே தள்ளி உள்ளார். அதில் பலத்த காயம் அடைந்த வெண்ணிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த தங்கதுரை கொலையை மறைக்க தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×