search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயமடைந்த மயிலை  மீட்ட போலீசார்.
    X
    காயமடைந்த மயிலை மீட்ட போலீசார்.

    காயமடைந்த மயிலுக்கு சிகிச்சை-போலீசாருக்கு பாராட்டு

    திருப்பூரில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறதா என சோதனை நடத்த சென்ற மதுவிலக்கு போலீசார், அடிபட்டு கிடந்த மயிலை மனிதநேயத்தோடு மீட்டு சிகிச்சை வழங்கி மீண்டும் வனத்தில் விட ஏற்பாடு செய்த செயல் பலரது பாராட்டையும் பெற்றது.
    திருப்பூர்:

    முழு ஊரடங்கு கட்டுப்பாட்டால் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் கிராமத்தின் ஒதுக்குப்புறம் மற்றும் வனத்தையொட்டிய பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக அவிநாசி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மது விலக்கு போலீசார்  அவிநாசியை அடுத்து சேயூரில் குட்டகம் சாலையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, ஒரு ஆண் மயில் ரோட்டில் சோர்ந்து போய் கிடப்பதை கண்ட மதுவிலக்கு  சப்-இன்ஸ்பெக்டர் சர்வேஸ்வரன் மற்றும் தலைமைக்காவலர் வெங்கடேஸ்வரன் ஆகிய இருவரும் அந்த மயிலை மீண்டும் பறக்கவிட முயற்சி மேற்கொண்டனர்.

    காலில் காயம் ஏற்பட்டிருந்ததால் பறக்க முடியாமல் திணறியது. உடனடியாக அந்த மயிலை மீட்டு தங்களது இருசக்கர மோட்டார் வாகனத்தில் சிகிச்சைக்காக அவிநாசி கால்நடை மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். கால்நடை டாக்டர் இளவரசு, மயிலுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கியதில் அதன் உடல்நிலை முன்னேற்றமடைந்தது. 

    இதையடுத்து வனத்துறை  பாதுகாவலர் சிவமணி புதுப்பாளையம் வனப்பகுதியில் மயிலை விட்டார்.சோதனைக்குச் சென்ற மதுவிலக்கு போலீசார் காயமடைந்து கிடந்த  மயிலை மீட்டு சிகிச்சை அளித்த மனித நேய செயலை பலரும் பாராட்டினர்.
    Next Story
    ×