search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    வால்பாறையில் யானை தாக்கி காவலாளி பலி

    கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று அதிகாலையில் யானை தாக்கியதில் காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்.

    அந்த பகுதியில் உள்ள பங்களாவில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் தனது வீட்டில் இருந்து சைக்கிளில் பங்களாவுக்கு வேலைக்கு செல்வார். நேற்று இரவும் வழக்கம் போல் பங்களாவுக்கு வேலைக்கு சென்றார்.

    இன்று காலை வெகு நேரமாகியும் மாணிக்கம் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன அவரது மனைவி, கணவருக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் என வந்தது.

    இதையடுத்து அவர் நேரில் சென்று பார்ப்பதற்காக மாணிக்கம் வேலை பார்க்கும் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பு மாணிக்கம் இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடலை பார்த்து மனைவி கதறி அழுதார்.

    இதுகுறித்து வால்பாறை போலீசார் மற்றும் வனத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் வனசரகர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், இந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை யானை சுற்றி திரிவதாகவும், இன்று காலை மாணிக்கம் வீட்டிற்கு கிளம்பிய போது பங்களா முன்பு வந்த ஒற்றை யானை அவரை தாக்கியுள்ளது. இதில் மாணிக்கம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

    Next Story
    ×