search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஒரே நாளில் 11 பேர் உயிரிழப்பு : மதுரையில் 828 பேருக்கு புதிதாக பாதிப்பு

    தொற்று பாதிக்கப்பட்டவர்களை காட்டிலும் அதிகமாக நேற்று ஒரே நாளில் 853 பேர் குணம் அடைந்தனர்.
    மதுரை:

    தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 16 பேர் கொரோனா நோய் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மதுரையை பொறுத்தமட்டில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதமாக உயர்ந்து வந்தது.

    அதில் நேற்று ஒரே நாளில் 828 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று 10,250 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 828 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 625 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 63 ஆயிரத்து 419 ஆக உயர்ந்துள்ளது.

    இதுபோல், நேற்று 853 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 580 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். குணம் அடைந்து வீட்டிற்கு சென்றுள்ளவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் அனைவரும் தொடர்ந்து 7 நாட்களுக்கு டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள் என அதிகாரி தெரிவித்தனர்.

    நேற்றுடன் மதுரையில், இதுவரை 46 ஆயிரத்து 512 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 38 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா கேர் சென்டர்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மதுரையை சேர்ந்த 69,73, 66, 74 வயது முதியவர்கள், 36,58, 57 வயது ஆண்கள், 38, 48, 58, 55 வயது பெண்கள் ஆகிய 11 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதில் 4 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 7 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 869 ஆக உயர்ந்துள்ளது.

    மதுரையில் கடந்த 2 தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மதுரை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் நேற்று ஆயிரத்திற்கும் குறைவாக பாதிப்பு பதிவாகியிருப்பது மருத்துவர்களிடையே சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே பொதுமக்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடித்து, நோய் பாதிப்பு குறைய தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மருத்துவத் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×