search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருவாரூரில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த தீயணைப்புப்படை வீரர் திடீர் பலி

    திருவாரூரில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த தீயணைப்புப்படை வீரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் திருவாரூர் அருகே கிடாரங் கொண்டான் பகுதியில் உள்ள திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் போலீசார் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் மையத்தில் மத்திய துணை ராணுவப்படையினர் 100 பேர் மற்றும் 300 போலீசார் மற்றும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் 3 பிரிவுகளாக பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் திருமக்கோட்டை தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த அற்புதம் என்பவர் திருவாரூர் வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை குளிப்பதற்காக சென்ற அவர் வெகு நேரமாகியும் வராததை அடுத்து உடன் பணியாற்று வோர் குளியலறைக்கு சென்று பார்த்தபோது அங்கு அற்புதம் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவர்கள் சோதனை செய்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. அதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அற்புதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வாக்கு எண்ணும் மையத்தில் தீயணைப்புப் படை வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×