search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    பெரம்பலூர் அருகே வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

    பெரம்பலூர் அருகே வாலிபரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள சிலோன் காலனியை சேர்ந்தவர் சற்குணராஜா. இவரது மகன் மோகன்ராஜ் (வயது 24). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவர் மீது பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக அவர் வந்திருந்தார். இந்நிலையில் தனது நண்பர்களான துறைமங்கலத்தை சேர்ந்த கிஷோர், வேலூரை சேர்ந்த கோகுல்ராஜ், அரவிந்த் ஆகியோருடன் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி கிணறு அருகே நேற்று மதியம் மோகன்ராஜ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக சிலோன் காலனியை சேர்ந்த லோகேந்திரன் என்ற பிரபா, அவரது தம்பி ரூபன் என்ற சசிகரன் மற்றும் வேலூரை சேர்ந்த செல்லதுரை ஆகிய 3 பேரும் அங்கு வந்து மோகன்ராஜை கற்களாலும், பாட்டிலாலும் தாக்கினர். அப்போது செல்லதுரை மோகன்ராஜை கத்தியால் குத்த முயன்றார். அதனை மோகன்ராஜ் தடுத்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் காயம் அடைந்த மோகன்ராஜ் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரணை நடத்தினார். மேலும் இது குறித்து பெரம்பலூர் போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×