search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கீழக்கரை அருகே கடலில் தவறி விழுந்து வாலிபர் மரணம்

    கீழக்கரை அருகே கடலில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழக்கரை:

    ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடியை சேர்ந்த முருகராஜா மகன் தினேஷ் (வயது18). இவர் நேற்று மாலை ஏர்வாடி கொடிமர பள்ளி அருகில் இருந்து போயா மூலம் மீன் பிடிக்க தனி நபராக கடலுக்குள் சென்றார்.

    நேற்று இரவு வரை அவர் கரை திரும்பாததால் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். இதுகுறித்து மரைன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீனவர்களுடன் இணைந்து கடலுக்குள் சென்று தினேசை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அவர் மீன்பிடிக்கச் செல்ல பயன்படுத்திய போயா மட்டும் நிற்பதை அவர்கள் பார்த்தனர். இதனால் மீனவர்கள் நேற்று இரவு ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

    இன்று காலை மீனவர்கள் கடலில் மூழ்கி தினேசை தேடும் பணியில் மீண்டும் ஈடுபட்டனர். அப்போது அவர் நிறுத்தியிருந்த போயா அருகே தினேஷ் உடல் மீட்கப்பட்டது.

    இது குறித்து தேவிபட்டினம் மரைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தினேஷ் தவறி கடலில் விழுந்து இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    Next Story
    ×