search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    103 கிலோ தங்கம் திருட்டு போன நிறுவனத்தில் தடய அறிவியல் அதிகாரிகள் 3 பேர் ஆய்வு

    சென்னையில் சி.பி.ஐ. போலீசார் பறிமுதல் செய்த 103 கிலோ தங்கம் திருட்டுபோன நிறுவனத்தில் தடய அறிவியல் துறை அதிகாரிகள் 3 பேர் ஆய்வு செய்தனர்.
    சென்னை:

    சென்னை பாரிமுனையில் செயல்படும் தனியார் தங்க ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் 400.47 கிலோ தங்கத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கம், அதே குறிப்பிட்ட நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரில் பத்திரமாக வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அந்த லாக்கரின் 72 சாவிகள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் குறிப்பிட்ட லாக்கரை திறந்து பார்த்தபோது, 400.47 கிலோ தங்கத்தில், 103.864 கிலோ தங்கம் மாயமாகி விட்டது.

    இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், சத்தியசீலன் மற்றும் 2 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை இதற்காக அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லாக்கரில் வைக்கப்பட்ட 400.47 கிலோ தங்கத்தை பாதுகாக்க சென்னை ஐகோர்ட்டு, ராமசுப்பிரமணியன் என்ற பொறுப்பு அதிகாரியை நியமித்தது. அவர்தான் தங்கம் காணாமல் போனதை கண்டுபிடித்தார். தற்போது அவர் கொடுத்த புகார் அடிப்படையில்தான் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தங்கம் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரி ராமசுப்பிரமணியன் மற்றும் தங்கம் திருட்டு போன நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். தனிப்படை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தங்கம் திருடு போன குறிப்பிட்ட நிறுவனத்தில் சோதனை நடத்தி முக்கிய வீடியோ ஆதாரங்களை கைப்பற்றி உள்ளார். திருட்டு போன தங்கம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் கள்ளச்சாவி மூலம் திறக்கப்பட்டதா? அல்லது லாக்கர் உடைக்கப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

    சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி.பிரதீப் வி பிலீப், ஐ.ஜி.சங்கர் ஆகியோரும் தங்கம் திருட்டு போன நிறுவனத்தில் நேரடியாக விசாரணை நடத்தினர்.

    குறிப்பிட்ட நிறுவனத்தில், தடய அறிவியல் துறை தலைவர் ஹேமலதா தலைமையில் நேற்று காலை முதல் மாலை வரை 3 அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தங்கம் திருடப்பட்ட லாக்கரை பார்வையிட்டு அவர்கள் ஆய்வு செய்தனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசாரும் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர். கள்ளச்சாவி மூலம் தங்கம் திருட்டு போனதா? என்பது பற்றி அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.

    பல்வேறு கேள்விகள் கேட்டு விளக்கம் கேட்டதாகவும், தடய அறிவியல் துறையினர் அதற்கு விளக்கம் அளித்து அறிக்கை கொடுப்பார்கள் என்றும், அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×