search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் வி.ஏ.ஓ. நகரில் குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சி.
    X
    விழுப்புரம் வி.ஏ.ஓ. நகரில் குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சி.

    விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் கனமழை - குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு

    விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. விழுப்புரம் நகரில் நேற்று முன்தினம் காலையில் இருந்து மாலை வரை பரவலாக சாரல் மழை பெய்த நிலையில் இரவு 11 மணிக்கு மேல் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. அதன்பிறகும் நள்ளிரவில் அவ்வப்போது விட்டுவிட்டு கனமழை வெளுத்து வாங்கியது.

    இதேபோல் திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணம், வானூர், கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது.

    இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர், வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. குறிப்பாக விழுப்புரம் சித்தேரிக்கரை, மகாராஜபுரம், தாமரைக்குளம், கணேஷ்நகர், கே.கே.சாலை அண்ணா நகர், சாலாமேடு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

    மேலும் விழுப்புரம் அருகே வாணியம்பாளையம், புருஷானூர், மழவராயனூர், காணை, பெரும்பாக்கம், திருவாமாத்தூர், அய்யங்கோவில்பட்டு, சொர்ணாவூர் கீழ்பாதி, சொரப்பூர், செஞ்சி அருகே கல்லாலிப்பட்டு, வீரணாமூர், வல்லம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

    பலத்த மழையின் காரணமாக விழுப்புரம் பகுதியில் உள்ள பம்பை ஆற்று வாய்க்கால், ஆழாங்கால் வாய்க்கால், பானாம்பட்டு வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. அதுபோல் எல்லீஸ்சத்திரம், தளவானூர் ஆகிய பகுதிகளில் உள்ள தென்பெண்ணையாற்றின் அணைக்கட்டுகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடுவதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வீடூர் அணை ஏற்கனவே அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் நள்ளிரவில் பெய்த கனமழையினால் அணைக்கு வினாடிக்கு 800 கனஅடி நீர் வரத்து வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி அந்த தண்ணீர் முழுவதையும் அப்படியே மதகுகள் வழியாக பொதுப்பணித்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    விழுப்புரம் - 77

    திண்டிவனம் - 74

    கோலியனூர் - 70

    வளவனூர் - 69

    வானூர் - 58

    மரக்காணம் - 54

    கெடார் - 50

    கஞ்சனூர் - 47

    சூரப்பட்டு - 40

    முகையூர் - 40

    முண்டியம்பாக்கம்- 37

    அவலூர்பேட்டை- 35

    செஞ்சி - 33

    நேமூர் - 32

    வளத்தி - 32

    அனந்தபுரம் - 31

    வல்லம் - 30

    அரசூர் - 28

    செம்மேடு - 26

    மணம்பூண்டி - 26

    திருவெண்ணெய்நல்லூர் - 16

    Next Story
    ×