search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் கழுத்தை இறுக்கி தொழில் அதிபர் படுகொலை - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

    கோவையில் தொழில் அதிபர் கழுத்தை இறுக்கி படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை சிங்காநல்லூர் ராஜலட்சுமி பஸ் நிறுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 85). தொழில் அதிபர். இவரது மனைவி, மகன் ஆகியோர் இறந்து விட்டனர். மகள் கனடாவில் வசித்து வருகிறார். இதனால் கிருஷ்ணசாமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவருடைய வீட்டு பாதுகாப்புக்கு வந்த காவலாளி வீடு பூட்டி கிடப்பதை பார்த்து அருகில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது வீட்டுக்குள் கிருஷ்ணசாமி பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தொழில்அதிபர் கிருஷ்ணசாமி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த போது ஒரு கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. அந்த கும்பல் அவரை உருட்டு கட்டையால் தாக்கி, கேபிள் ஒயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். மேலும் வீட்டில் நகை, பணம் திருட்டுபோனதா? என்பது தெரியவில்லை. அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினால் தான் அதுபற்றிய விவரங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அவர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி அதன்பின்னர் நின்றது. மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணசாமி பணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த போது காவலாளிகள் பணியில் இருந்தார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கெம்பட்டி காலனியில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் துப்பு துலங்காத நிலையில் சிங்காநல்லூரில் மேலும் ஒருவர் கொலை செய்யப்பட்ட தொடர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×