search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    காவிரி ஆறு மாசுபடுவதை தடுக்க ரூ.10,700 கோடியில் திட்டம் - எடப்பாடி பழனிசாமி தகவல்

    காவிரி ஆறு மாசுபடுவதை தடுக்க ரூ.10 ஆயிரத்து 700 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரியுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சென்னை:

    மத்திய நீர்வளத்துறை (ஜல்சக்தி) மந்திரி கஜேந்திரசிங் செகாவத்துடன், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் குடிநீர் திட்டங்கள் குறித்து காணொலி காட்சி மூலம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி நேற்று கலந்துரையாடினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் நீர்வள திட்டம் தொடர்பாக பல்வேறு கருத்து களை எடுத்துரைத்தார்.

    இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தமிழகம் நீர் பற்றாக்குறை உள்ள மாநிலம். பருவமழையை நம்பித்தான் தமிழகம் இருந்து வருகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, குடிமராமத்து போன்ற சமூக பங்களிப்பு நீர் மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றி நீர் பாதுகாப்புக்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 278 குடிமராமத்து பணிகள் ரூ.1,434 கோடி செலவில் மேற்கொண்டு உள்ளோம்.

    தண்ணீரை சேமிக்க சாத்தியக்கூறு உள்ள இடங்களில் தடுப்பு அணைகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு ரூ.1,000 கோடி செலவில் இந்த பணிகள் நடந்து வருகிறது. மாநில நிதியின் கீழ் ஏராளமான ஆறுகள் மற்றும் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக மாநிலத்தில் பயிரிடப்படும் பரப்பளவு அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், நடப்பு ஆண்டில் நெல் கொள்முதல் சாதனையை எட்டி உள்ளது.

    தமிழக அரசின் சில நீர் மேலாண்மை திட்டங்களுக்கு மத்திய அரசின் ஆதரவு தேவைப்படுகிறது. காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்துக்காக தேசிய நீர் மேம்பாட்டு முகமை விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த திட்டத்தை பொறுத்தமட்டில் கோதாவரி ஆறு, கல்லணை அருகே காவிரி ஆற்றில் சேருவது போன்று திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதை மாயனூர் கதவணையில் சேருவது போன்று மாற்றி அமைக்கவேண்டும் என்று தமிழக அரசு 4-9-2019 அன்று தனது கருத்துகளை மத்திய நீர்வளத்துறைக்கு அனுப்பி உள்ளது.

    இதுதொடர்பாக பிரதமருக் கும் கடிதம் எழுதி உள்ளேன். மேலும், இந்த திட்டத்தில் இருந்து 200 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு ஒதுக்குமாறும் கேட்டுக்கொண்டேன். இந்த திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதை விரைவாக முடித்து பணிகளை தொடங்க தேசிய நீர் மேம்பாட்டு முகமையை அறிவுறுத்த கேட்டுக்கொள்கிறேன்.

    இதேபோன்று, மாநிலத்துக்கு உள்ளேயே காவிரி-குண்டாறு இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது, நதிகள் இணைப்பை மேம்படுத்தும் தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தேசிய நீர் மேம்பாட்டு முகமை தயார் செய்துள்ளது. ஆனால், தமிழக அரசுக்கு அந்த அறிக்கை இன்னும் அனுப்பப்படவில்லை. அந்த திட்ட அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்ப தேசிய நீர் மேம்பாட்டு முகமையை அறிவுறுத்தவேண்டும்.

    காவிரி ஆறு மாசுபடுவதை தடுத்து புத்துயிர் பெறுவதை உறுதி செய்ய ரூ.10 ஆயிரத்து 700 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘வாப்கோஸ்’ என்ற பொதுத்துறை நிறுவனம் இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. காவிரி விவசாயத்திற்கு மட்டுமல்ல, குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது. காவிரி, தமிழகத்தின் வாழ்வாதாரம். எனவே, இந்த திட்டத்தை, நதிகளை சுத்தப்படுத்தும் திட்டமான ‘நமாமி கங்கா’ திட்டம் போன்ற ஒரு சிறப்பு திட்டமாக அனுமதிக்கலாம் என்றும், இதை ஒரு தேசிய திட்டமாக செயல்படுத்தலாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    நீர் பற்றாக்குறையை சரி செய்ய, உலக வங்கி உதவியுடன் மத்திய அரசு 7 மாநிலங்களில் ‘அடல்புஜால் யோஜனா’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழகம் நீர் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக இருந்தபோதிலும், இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் சேர்க்கப்படவில்லை. எனவே, நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தில் தமிழகம் சேர்க்கப்படவேண்டும்.

    அணை பாதுகாப்பு மசோதாவின் உட்பிரிவுகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள தமிழக அரசு கோரியது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அணையின் பாதுகாப்பை பொறுத்தவரை அணை அமைந்திருக்கும் மாநிலத்தின் முழு கட்டுப்பாட்டில் அது இருக்கவேண்டும். எனவே, அணை பாதுகாப்பு மசோதாவில் திருத்தங்கள் செய்யவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை, மக்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக சேர்க்கவேண்டும்.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு, மத்திய அரசிடம் ஒப்புதல் கோரியது. அதன்படி, மத்திய நீர் ஆணையம் கர்நாடகாவிற்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அனுமதி வழங்கி உள்ளது. மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளது. தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் வருவதை தடுக்க முயற்சிப்பது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறுவதாகும். எனவே, கர்நாடகாவின் மேகதாது அணைக்கட்டு திட்டத்துக்கான முன்மொழிவை நிராகரிக்க மத்திய நீர் ஆணையம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அறிவுறுத்தவேண்டும்.

    இதேபோன்று, நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்களுக்கு எதிராக கர்நாடக அரசு பெண்ணையாறு ஆற்றின் குறுக்கே ஒரு அணைக்கட்டு அமைத்து வருகிறது. இதுதொடர்பாக தமிழகம் அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில், மத்திய நீர் ஆணையத்தால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளன. இதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், உடனடியாக ஒரு தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் 34 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2020-2021-ம் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 375 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ரூ.2 ஆயிரத்து 265 கோடி மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு 20 லட்சம் வீட்டு இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள 14 லட்சம் வீடுகள் பல்வேறு திட்டங்களின் நிதி மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். சுமார் 4 லட்சம் குடிநீர் இணைப்புகளை இதுவரை வழங்கி உள்ளோம். மீதமுள்ள இணைப்புகளை 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வழங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச்செயலாளர் க.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர்சிங், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் கே.எஸ்.பழனிசாமி, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×