search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது எடுத்த படம்.
    X
    நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது எடுத்த படம்.

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை

    எந்திரத்தில் சிக்கி கை துண்டான பெண்ணுக்கு நிவாரணம் வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி பாக்கியலட்சுமி (வயது 35). இவர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ள இயற்கை உரம் தயாரிப்பு மையத்தில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    கடந்த 28-ந்தேதி பாக்கியலட்சுமி, மக்கும் குப்பையை தனியாக பிரித்து எந்திரத்தில் போட்டு அரைத்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவரது வலது கை எந்திரத்தில் சிக்கி துண்டானது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பாக்கியலட்சுமியை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பழனிச்சாமி பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கை துண்டித்த பாக்கியலட்சுமி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி, பெருமாள்புரம் மாநகராட்சி அலகு அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று காலையில் தூய்மை பணியாளர்கள் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கிருந்து நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    அப்போது அவர்கள், நுழைவு வாயிலை தாண்டி கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடடினயாக போலீசார் நுழைவுவாயிலை மூடினர்.

    பின்னர் தூய்மை பணியாளர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். கொளுத்தும் வெயிலிலும் போராட்டம் நடந்தது. அப்போது ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்தார். உடனே மற்றவர்கள், அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தனர். பின்னர் அந்த பெண் எழுந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அப்போது போராட்டக்காரர்கள் கூறுகையில், ‘கையை இழந்து பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர் பாக்கியலட்சுமி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். பாக்கியலட்சுமியின் குழந்தையை அரசு செலவில் படிக்க வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால், தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்‘ என்றனர்.

    அவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் முத்துவளவன், ஆதித்தமிழர் பேரவை நெல்லை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனு கலெக்டர் ஷில்பாவிடம் கொடுக்கப்பட்டது.

    இந்த போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வாகனங்கள் வெளியே வர முடியாமலும், வெளியே இருந்து வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமலும் அணிவகுத்து நின்றன. இந்த போராட்டம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×