search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெங்கு படையாட்சி
    X
    கெங்கு படையாட்சி

    ஆத்தூர் அருகே முதியவர் அடித்துக்கொலை - மகனுக்கு போலீஸ் வலைவீச்சு

    ஆத்தூர் அருகே முதியவர் அடித்துக்கொலை செய்த சம்பவம் குறித்து அவரது மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் லட்சுமண சமுத்திரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கெங்கு படையாட்சி (வயது 80). இவருக்கு சிவமாலை என்ற மனைவியும், சக்திவேல், வெங்கடேசன் என்ற 2 மகன்களும், சரஸ்வதி என்ற மகளும் உள்ளனர். 

    இந்தநிலையில் கெங்கு படையாட்சி அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் உணவு மற்றும் தின்பண்டங்களை யாரிடமாவது கேட்டு வாங்கி சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது. இதனை அவரது மகன் சக்திவேல் பலமுறை கண்டித்துள்ளார். 

    இதுபோல் வீடு, வீடாக சென்று உணவு வாங்கி சாப்பிடுகிறாயே, உறவினர்கள் என்ன நினைப்பார்கள்? எனக்கூறி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு கெங்கு படையாட்சி தனது வீட்டின் அருகே ஒருவரது வீட்டில் இருந்து உணவு வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

    இதனிடையே அங்கு வந்த அவரது மகன் சக்திவேல் எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டாயா? எனக்கூறி கைகளால் தனது தந்தை என்று கூட பாராமல் சரமாரியாக அடித்துள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். 

    இதைப்பார்த்த சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உடனே படுகாயம் அடைந்த கெங்கு படையாட்சியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

    தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய சக்திவேலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×