search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய சாலை. (கோப்புப்படம்)
    X
    சென்னையில் ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய சாலை. (கோப்புப்படம்)

    இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு

    இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சமூக இடைவெளியை மறந்து பொருட்கள் வாங்க நேற்று கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விழிப்புணர்வுகளை மேற்கொண்டு, அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை. ஊரடங்கு விதித்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த சில வாரங்களில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

    தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் சாலை, திருவல்லிக்கேணியில் உள்ள நடேசன் தெரு உள்பட பெரம்பூர், புரசைவாக்கம், ராயபுரம் உள்பட சென்னையின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மளிகை பொருட்கள், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக குவிந்தனர். அரசு எவ்வளவோ, விழிப்புணர்வு செய்தும் கொரோனா குறித்து மக்களிடம் துளியும் பயம் இல்லை.

    ஊரடங்கு விலக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பியது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. கடைகளில் ஒருவருக்கொருவர் முந்தியடித்துக்கொண்டு, மளிகை பொருட்கள், காய்கறி உள்ளிட்டவற்றை வாங்கிச்சென்றனர். இதனால் சமூக இடைவெளி என்பது காற்றில் பறந்துபோனது. சில கடைக்காரர்கள் வியாபாரத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்ததால், வாடிக்கையாளர்களை அவர்கள் ஒழுங்குப்படுத்தவில்லை.

    சமூக இடைவெளியை மறந்து கடைகளில் குவிந்தவர்கள் சிலர், சிறிதளவும் பயம் இன்றி பச்சிளம் குழந்தைகளை கூட தூக்கிக்கொண்டு வந்திருந்தனர். இது மிகவும் வேதனை அளிப்பதாக இருந்தது. பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே, கொரோனாவை முழுவதும் ஒழித்து கட்டமுடியும். எனவே அரசு வகுத்த விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் கொரோனா ஒழியவில்லை. மேலும், மேலும் பரவத்தான் செய்கிறது என்று விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் சொல்வது ஒருபோதும் நியாயம் இல்லை. எனவே தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, அரசுக்கு முறையான ஒத்துழைப்பு கொடுத்து, பொறுப்பு உணர்வோடு செயல்பட்டால் மட்டுமே கொரோனாவை அழிக்கமுடியும்.
    Next Story
    ×