search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டியதால் சிறுமி தீக்குளிப்பு- போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது

    உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டியதால் தீக்குளித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக 5 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூரை அடுத்த புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 27). கூலித்தொழிலாளி. இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து, 17 வயது சிறுமியை செல்போனில் தொடர்பு கொண்டு உல்லாசத்துக்கு வருமாறு அழைத்து கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதனால் மனமுடைந்த சிறுமி தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவளை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், குளத்தூர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சரவணகுமார் உள்ளிட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்தநிலையில் விளாத்திகுளம் அருகே துளசிபட்டியில் பதுங்கி இருந்த சரவணகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடைய நண்பர்களான புளியங்குளத்தைச் சேர்ந்த வேல்சாமி (29), உதயகுமார் (19), கருப்பசாமி (19) மற்றும் சிறுவன் ஆகியோர் வைப்பார் பஸ் நிறுத்தத்தில் பதுங்கி இருந்தபோது அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதுதொடர்பாக தலைமறைவான மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×