search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்
    X
    ஒகேனக்கல்

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி மெக்கானிக் பலி

    ஒகேனக்கல்லுக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்த தனியார் நிறுவன மெக்கானிக் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தார்.
    பென்னாகரம்:

    கிருஷ்ணகிரியை அடுத்த செட்டிப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் பார்த்திபன் (வயது28). இவர் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். நேற்று பார்த்திபன் தனது நண்பர்கள் 4 பேருடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார்.

    நண்பர்கள் 5 பேரும் பல்வேறு இடங்களை சுற்றிபார்த்த பின்னர் ஊட்டமலை பரிசல்துறைக்கு சென்று காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது பார்த்திபன் திடீரென ஆற்றில் மூழ்கினார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்து விட்டார்.

    இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ஜெயசந்திரன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த பார்த்திபனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    இதையடுத்து அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தனியார் நிறுவன மெக்கானிக் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×