search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு டவுன் பஸ் மீது கல்வீச்சு
    X
    அரசு டவுன் பஸ் மீது கல்வீச்சு

    தர்மபுரி அருகே அரசு டவுன் பஸ் மீது கல்வீச்சு

    தர்மபுரி அருகே அரசு டவுன் பஸ் மீது மர்மகும்பல் கல்வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு தர்மபுரி-ஈச்சம்பாடிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. பஸ்சை எம்.ஒட்டப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் சிவா என்பவர் ஓட்டி சென்றார்.

    அந்த பஸ் இரவு 10 மணியளவில் மூக்கனூர் அருகே சென்றபோது அங்கு உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நின்று கொண்டிருந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று அரசு டவுன் பஸ்சின் மீது சரமாரியாக கற்களை வீசினர்.

    இதில் பஸ்சின் பின்பக்கம் மற்றும் சைடு கண்ணாடிகள் உடைந்தது. பஸ்சில் இருந்த ஈச்சம்பாடியை அடுத்த மல்லம்மாபுரத்தை சேர்ந்த கோபிநாத் (வயது 21) என்பவர் காயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து டிரைவர் சிவா மதிகோன் பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் நேற்று இரவு தர்மபுரி மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். போலீசார் இரவு முழுவதும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.

    பஸ் மீது மர்ம கும்பல் கல்வீசியதால் நேற்று இரவு 10 மணிக்குமேல் தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லக்கூடிய டவுன் பஸ்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலை வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன.

    Next Story
    ×