search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை: குடிபோதை தகராறில் நண்பரை கொலை செய்த வாலிபர் கைது
    X

    கோவை: குடிபோதை தகராறில் நண்பரை கொலை செய்த வாலிபர் கைது

    மது அருந்தும் போது ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் நண்பரை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (வயது 27). கூலி தொழிலாளி. இவர் கோவை சாய்பாபா காலனி பகுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். அப்போது சாய்பாபா காலனி கே.கே. புதூரை சேர்ந்த வன்னீஸ் என்ற வன்னியராஜ்(28) நண்பராக பழகினார். இவர்கள் இரவு நேரங்களில் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். நேற்று காலை சாய்பாபா காலனி எம்.ஜி.ஆர். மார்க்கெட்டின் பின்புறத்தில் உள்ள சாக்கடையில் ஆவுடையப்பன் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    சம்பவஇடத்துக்கு சென்ற போலீசார் ஆவுடையப்பனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் இறந்தார். அவரை தலையில் பலத்த காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் நேற்று முன் தினம் இரவு ஆவுடையப்பனுடன் வன்னீஸ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த காந்தி என்ற காந்திவேல், அய்யனார் ஆகியோர் சேர்ந்து மது அருந்தியது தெரியவந்தது. இதையடுத்து வன்னீசை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது மது அருந்தும் போது ஆவுடையப்பன் என்னையும், எனது நண்பர்களையும் ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் அவரை மரக்கட்டையால் அடித்ததாக வன்னீஸ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இந்த கொலை தொடர்பாக காந்திவேல், அய்யனார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். நண்பர்களுக்கு இடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறு மட்டும் தான் கொலைக்கு காரணமா? அல்லது முன் விரோதம் எதுவும் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×