search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே திருநங்கை மர்ம மரணம்
    X

    சேலம் அருகே திருநங்கை மர்ம மரணம்

    சேலம் அருகே திருநங்கை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் அல்லிக்குட்டை கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முகுந்தன் என்ற மேகா (வயது 20). திருநங்கையான இவருக்கு பத்து என்ற பெயரும் உண்டு. இவரது பெற்றோர் பொன்னம்மாபேட்டை அருகே உள்ள வாய்க்கால் பட்டறை பகுதியில் வசித்து வருகின்றனர். மேகா மட்டும் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தார்.

    நேற்று இரவு சேலம் கிச்சிப்பாளையத்தை அடுத்த சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த செல்லா (22) என்ற வாலிபர் மேகாவை சந்திக்க வந்தார். அதே போல சேலம் 5 ரோடு பகுதியைச் சேர்ந்த திருநங்கை மேகி மற்றும் சேலம் அம்மாப்பேட்டை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த நரேஷ்(25) ஆகியோரும் வந்தனர். 4 பேரும் நேற்று இரவு மது அருந்தினார்கள். மேகியும் ,நரேசும் ஒரு அறையில் தூங்க சென்று விட்டனர்.

    மேகாவும்,செல்லாவும் இன்னொரு அறையில் தங்கினர். இன்று காலை செல்லா ஓடி வந்து மேகா தூக்கில் பிணமாக தொங்குவதாக கூறினார். அவரது சத்தத்தை கேட்டு மேகி மற்றும் நரேஷ் ஆகியோர் ஓடி வந்தனர். அங்கு துப்பட்டாவால் மின்விசிறியில் திருநங்கை மேகா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு வகிக்கும் அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர்நாகராஜ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியமூர்த்தி, ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் திருநங்கையின் பிணத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது திருநங்கை மேகா சாவில் மர்மம் உள்ளது என்றனர் .இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர் .திருநங்கை மேகா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை.பிண பரிசோதனையில்தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.

    மேலும் போலீசார் திருநங்கையுடன் தங்கி இருந்த செல்லா, இன்னொரு திருநங்கை மேகி ,நரேஷ் ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×