search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 மாணவிகள் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு கல்லூரி நிர்வாகம் வழக்கு
    X

    3 மாணவிகள் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு கல்லூரி நிர்வாகம் வழக்கு

    3 மாணவிகள் மர்மமான முறையில் கிணற்றில் இறந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி விழுப்புரம் எஸ்.வி.எஸ். கல்லூரி தொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படித்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் கல்லூரிக்கு அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தனர். இதுகுறித்து பதிவான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கின்றனர். இந்த வழக்கில், கல்லூரி தாளாளர் எஸ்.வாசுகி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில், மாணவிகள் மர்மச்சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கல்லூரி தாளாளர் வாசுகி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், ‘மாணவிகள் பிணமாக கிடந்த கிணற்றில் தண்ணீர் குறைவாகத்தான் இருந்தது. நீச்சல் தெரிந்த அந்த மாணவிகள் அதில் மூழ்கி இறக்க வாய்ப்பு இல்லை. எங்கள் கல்லூரியை சிலர் விலைக்கு கேட்டனர். அதற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை என்பதால், அவர்களுடன் முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் எங்களை பழிவாங்க வேண்டுமென்பதற்காக ஒரு கும்பல் அந்த மாணவிகளை கொலை செய்துள்ளது. தற்போது அந்த கும்பல் எங்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இறந்து போன மாணவிகளின் உடல் மீட்கப்பட்டபோது அவர்களது கைகள் கட்டப்பட்டிருந்தது. இந்த கொலையில் போலீஸ் அதிகாரிகள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளதால், நாங்கள் கூறும் குற்றச்சாட்டை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க மறுக்கின்றனர். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 வாரத்துக்குள் பதிலளிக்கவேண்டும் என்று என்று கோரி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
    Next Story
    ×