என் மலர்
செய்திகள்

தஞ்சை அருகே வீடு புகுந்து பெண்களிடம் நகை பறிப்பு
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த வல்லம் பழைய அக்ரகாரம் தெருவை சேர்ந்தவர் மரியபிரான்சிஸ் (வயது33). டிரைவர். இவருடைய மனைவி டெய்சி. மரியபிரான்சிஸ் சகோதரர் அடைக்கலராஜ். விவசாயி.
சம்பவத்தன்று இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை பூட்டாமல் சாத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவு மரியபிரான்சிஸ் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பின்பக்க வாசல் வழியாக உள்ளே புகுந்து டெய்சியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்தனர்.
பின்னர் மற்றொரு அறையில் படுத்திருந்த அடைக்கலராஜின் மனைவியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்தனர். இதைக்கண்டு திடுக்கிட்ட அவர்கள் திருடன், திருடன் என சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் 7 பவுன் நகையுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து மரியபிரான்சிஸ் வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியய்யா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.