search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனியில் மாற்றுத் திறனாளிகள் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
    X

    பழனியில் மாற்றுத் திறனாளிகள் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை

    பழனியில் மாற்றுத் திறனாளிகள் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    பழனி:

    பழனியில் இன்று 40 சதவீத ஊனமுற்றவர்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி உதவித்தொகை வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட மற்றும் புதிதாக விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க வலியுறுத்தி பழனி தாலுகா அலுவலகத்தில் சமூக நலத்துறை வட்டாட்சியரை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.

    மாநில செயலாளர் நம்புராஜன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டம் இரவு வரை நீடித்த நிலையிலும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி எவ்வித முடிவுக்கும் வரவில்லை. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பழனி-புது தாராபுரம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வட்டாட்சியர் ராஜேந்திரன், டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் மறியலை கை விடாததால் 200 பேர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து பின்னர் விடுதலை செய்தனர்.

    இன்று 2-வது நாளாக மாற்றுத் திறனாளிகள் பழனி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் தமிழக அரசு பிப்ரவரி மாதம் 40 சதவீத மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குமாறு ஆணை வெளியிட்டும் பழனியில் இதுவரை யாருக்கும் உதவித் தொகை வழங்கப்படவில்லை என்றும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    அப்போது அலுவலகத்திற்கு வந்த சப்-கலெக்டர் வினித்தையும் மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேசிய சப்-கலெக்டர் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனையில் உள்ளது. அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.

    இருப்பினும் அதில் சமாதானம் அடையாத மாற்றுத் திறனாளிகள் கோ‌ஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.
    Next Story
    ×