search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
    X

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    தென் தமிழகத்தின் மிகப் பெரியதாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் திகழ்கிறது. இங்கிருந்து தமிழகத்தின் பிற இடங்களுக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி உடுமலை, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்காயம் மற்றும் தக்காளி விலை அதிகரித்தது. வெங்காயம் கிலோ ரூ. 50 முதல் ரூ.60 வரை விலை போனது. தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது.

    இந்த விலை ஏற்றத்தினால் விவசாயிகள் அனைவரும் தக்காளி மற்றும் வெங்காயம் சாகுபடியில் ஈடுபட்டனர். இதன் விளைச்சல் தற்போது அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

    ஒரு கிலோ தக்காளி ரூ.4-க்கு விற்கப்படுகிறது. வெங்காயம் ரூ.10-க்கு விலை போகிறது. இதனால் அறுவடை கூலி கூட கிடைக்காமல் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    கத்தரிக்காய் கிலோ ரூ.12 ஆக குறைந்துள்ளது. வெண்டைக்காய் ரூ.6, கொத்தவரை ரூ.8, பூசணி ரூ.6 என அனைத்து காய்கறிகளின் விலையும் வீழ்ச்சியடைந்து விட்டதால் விரக்தியடைந்த விவசாயிகள் சிலர் காய்கறிகளை பறிக்காமல் விட்டு விட்டனர்.

    கிலோ ரூ.100-க்கு விற்பனையான முருங்கைக்காய் தற்போது ரூ.7 ஆக குறைந்து விட்டது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து மும்பை, கல்கத்தா, பரோடா ஆகிய இடங்களுக்கு ஏற்றுமதி செய்த போதிலும் இந்த விலைக்குத்தான் விற்கப்படுகிறது. வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யாவிட்டால் முருங்கைக்காய் விலை கடும் விழ்ச்சியை சந்திக்கும்.

    Next Story
    ×