search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை
    X

    கள்ளக்குறிச்சி அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை

    கள்ளக்குறிச்சி அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் ரூ.4½ லட்சம் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராப்பாளையம் மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 45). முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவர் நேற்று இரவு வீட்டின் முன்பகுதியில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.4½ லட்சம் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம்.

    பின்னர் கொள்ளையர்கள் அந்த பகுதியில் உள்ள கட்டிடத்தொழிலாளி கருத்தாப்பிள்ளை வீட்டிற்கு சென்றனர். வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.25 ஆயிரத்தை சுருட்டிக்கொண்டு தப்பி விட்டனர்.

    காலையில் விழித் தெழுந்து ராஜன் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கச்சிராப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். தலைமறைவான கொள்ளையர்களை தேடும் பணி முடிக்கிவிடப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 வீடுகளில் மர்ம மனிதர்கள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    தற்போது கச்சிராப்பளையம் பகுதியில் 2 வீடுகளில் கொள்ளை நடைபெற்றுள்ளது. விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி பகுதியில் தொடர்ந்து கொள்ளை நடப்பது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×