search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயப்பேட்டையில் பூட்டிய வீட்டுக்குள் மனைவி-3 மகள்கள் படுகொலை: கணவர் தப்பி ஓட்டம்
    X

    ராயப்பேட்டையில் பூட்டிய வீட்டுக்குள் மனைவி-3 மகள்கள் படுகொலை: கணவர் தப்பி ஓட்டம்

    ராயப்பேட்டையில் பூட்டிய வீட்டுக்குள் மனைவி-3 மகள்கள் படுகொலையான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டை பழைய போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள முத்து தெருவை சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மனைவி பாண்டியம்மாள் (38). இவர்களுக்கு பரிமளா (18), பவித்ரா (18), சினேகா (16) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் பரிமளா, பவித்ரா இருவரும் இரட்டையர்கள்.

    சின்ராஜ் வீட்டில் இருந்து நேற்று நள்ளிரவு திடீரென்று துர்நாற்றம் வீசியது. இது பற்றி அக்கம் பக்கத்தினர் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு கதவு வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்தது. போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் பாண்டியம்மாள், அவரது மகள்கள் பரிமளா, பவித்ரா, சினேகா ஆகிய 4 பேரும்பிணமாக கிடந்தனர்.

    அவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர்கள் இறந்து 4 நாள் இருக்கும் என்று தெரிகிறது. பாண்டியம்மாளின் கணவர் சின்ராஜ் மாயமாகி இருந்தார்.

    போலீசார் 4 பேரின் பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சின்ராஜ் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் சின்ராஜின் மோட்டார் சைக்கிள் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள ஒரு சுவீட் கடை முன்பு நின்றது. சின்ராஜ் சுவீட் கடைகளுக்கு சுவீட் செய்து கொடுக்கும் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இதனால் அவர் தனக்கு பழக்கமான சுவீட் கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மாயமாகி இருக்கலாம் என்று தெரிகிறது.

    சின்ராஜ் கடந்த 19-ந் தேதி தனது மனைவி, மகள்களுடன் சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்று விட்டு திரும்பினார். அவரது மனைவி, மகள்கள் இது பற்றி அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் கூறும்போது மீண்டும் ஒரு முறை சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று கூறி இருந்தனர். அதற்குள் 4 பேரும் இறந்து விட்டனர்.

    மேலும் சின்ராஜின் வீடு எப்போதும் பூட்டியே இருக்கும். அக்கம் பக்கத்தினரிடம் அவர்கள் அதிகமாக பழகுவதில்லை. எனவே கடந்த 4 நாட்களாக வீடு பூட்டப்பட்டிருப்பதை யாரும் கவனிக்கவில்லை. வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்த பின்னரே சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    குடும்ப தகராறு காரணமாக சின்ராஜ், மனைவி மற்றும் 3 மகள்களையும் கொலை செய்து விட்டு வீட்டை வெளியே பூட்டி விட்டு வெளியேறி இருக்கலாம்.

    பின்னர் மோட்டார் சைக்கிளை தனக்கு தெரிந்த சுவீட் கடையில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். சின்ராஜ் பிடிபட்டால்தான் இது பற்றிய முழு விவரமும் தெரிய வரும்.

    Next Story
    ×