search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்டலூர், கேளம்பாக்கத்தில் புயல் பாதித்த பகுதிகளை ஓ.பன்னீர்செல்வம் பார்த்தார்
    X

    வண்டலூர், கேளம்பாக்கத்தில் புயல் பாதித்த பகுதிகளை ஓ.பன்னீர்செல்வம் பார்த்தார்

    வார்தா புயலால் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார். புயலால் பாதிக்கப்பட்ட 43 பேர்களுக்கு நிவாரணத் தொகையாக 13,94,200 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ‘வார்தா’ புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பார்வையிட்டார். ‘வார்தா’ புயல் சென்னையில் கரையைக் கடக்கும் என்ற அறிவிப்பு வந்தவுடன், தமிழக அரசு விரைந்து மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, விலங்குகள் அனைத்தும் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்பட்டதன் விளைவாக, விலங்குகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    எனினும், புயலின் காரணமாக அடித்த சூறாவளிக் காற்றில் 10,000-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன; 950 மீட்டர் நீளத்திற்கு பூங்காவின் வெளிப்புறப் பாதுகாப்புச் சுற்றுச்சுவர் விழுந்து விட்டது. விலங்குகள் இருப்பிட நிழற்கூரைகள், பார்வையாளர் ஓய்விடங்கள், இருக்கைகள் போன்றவை சேதமடைந்துள்ளன.

    குடிநீர்க் குழாய்கள், இணைப்புக் குழாய்கள் ஆகியவையும் சேதமடைந்துள்ளன. மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின் விநியோக அறைகள், இணைப்புச் சாலைகள், குடியிருப்புக் கட்டடங்கள், அலுவலகக் கட்டடங்கள் ஆகியவையும் சேதமடைந்துள்ளன.

    இவற்றை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உடனடியாக சீரமைப்புப் பணிகளை விரைந்து செய்திட வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் மாம்பாக்கம் என்னுமிடத்தில் 250 கிலோவாட் மின்மாற்றி கீழே விழுந்து சேதமடைந்துள்ளதை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பார்வையிட்டார்.

    மாம்பாக்கத்திலிருந்து கேளம்பாக்கத்திற்கு 33 கேவி மின்பாதையில் விழுந்து விட்ட மின்கம்பங்களை மின்சார வாரிய ஊழியர்கள் சீர் செய்வதை பார்வையிட்டு மின்சார வாரிய ஊழியர்களின் பணியை பாராட்டி ஊக்கப்படுத்தினார்.

    மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் ‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்ட 43 பேர்களுக்கு நிவாரணத் தொகையாக 13,94,200 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் குறித்து விரிவான ஆய்வினை நடத்தி பணிகளை விரைந்து முடிக்க முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவுரை வழங்கினார்.
    Next Story
    ×