search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி விவகாரம்: தமிழக எம்.பி.க்கள் ஒன்றுபட்டு பாராளுமன்றத்தை முடக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
    X

    காவிரி விவகாரம்: தமிழக எம்.பி.க்கள் ஒன்றுபட்டு பாராளுமன்றத்தை முடக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

    காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிடவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்தவிடாமல் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
    தர்மபுரி:

    பாட்டாளி இளைஞர் சங்க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தர்மபுரி ரெயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலாவது நடைமேடை, நடை மேம்பாலம், சரக்கு லாரிகள் நிறுத்தும் இடம் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து ரெயில்வே முதன்மை பொறியாளர் ஜெயசீலன் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தர்மபுரி ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தின் வழியாகத்தான் பெரும்பாலான ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் வசதிக்காக முதலாவது பிளாட்பாரம் வழியாக ரெயில்களை இயக்க வேண்டும். ரெயில்நிலையத்திற்கு செல்லும் சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்கவும் அந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து மத்திய அரசு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும். விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை நிவாரண நிதி வழங்கவேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்தால் இந்த மாவட்டத்தில் உள்ள நீர்பாசன திட்டங்களை முழுமையாக நிறைவேற்றலாம்.

    தமிழக அரசு தற்போது ஐ.சி.யு. வார்டில் உள்ளது. மாநிலத்தில் எந்த வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை. காவிரி பிரச்சினையில் கூட அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினாலும் எந்த பயனும் இல்லை. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிடவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்தவிடாமல் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்ய வேண்டும்.

    பாராளுமன்ற மேல் சபையிலும் கூட்டத்தொடரை தமிழக எம்.பி.க்கள் நடத்தக்கூடாது. இதுதொடர்பாக அ.தி.மு.க, தி.மு.க. எம்.பி.க்களை சந்தித்து பேச உள்ளேன். தமிழகத்தில் நடைபெற உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 12-ந்தேதி முதல் 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளேன்.

    இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
    Next Story
    ×