search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை நிரூபிக்க தயாரா?: தி.மு.க.வுக்கு மேயர் சவால்
    X

    சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை நிரூபிக்க தயாரா?: தி.மு.க.வுக்கு மேயர் சவால்

    சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை நிரூபிக்க தயாரா என்று தி.மு.க.வுக்கு மேயர் சைதை துரைசாமி சவால் விடுத்தார்.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கடைசி கூட்டம் இன்று 3-வது நாளாக நடந்தது. மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

    இன்று கடைசி கூட்டம் என்பதால் அனைத்து உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    சுபாஷ் சந்திரபோஸ் (தி.மு.க.):- சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டுவது எனது கடமை. சென்னையில் டெங்கு பாதிப்பு இல்லை என்று கூறுகிறீர்கள். பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என்பதை அதிகாரிகள், பத்திரிகையாளர்களை அழைத்து சென்று ஆய்வு நடத்த வேண்டும்.

    மேயர் சைதை துரைசாமி:- தனியார், அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு, எலி காய்ச்சல், ஜிகா வைரஸ் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை உடனடியாக மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் அவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்ததால் அவர் எந்த பகுதியை சேர்ந்தவர், எங்கு சென்றார் என்று ஆய்வு செய்து தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் ஆய்வு செய்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்கிறோம். சென்னையில் டெங்கு காய்ச்சலால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. அப்படி இருப்பதாக நிரூபித்தால் நீங்கள் சொல்வதை நான் செய்ய தயாராக இருக்கிறேன்.

    கணபதி (தி.மு.க.):- சென்னை விரிவாக்க பகுதிகளில் மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை, குடிநீர் திட்டம் பணிகள் இன்னும் முழுமை அடையாமல் பாதியிலேயே நிற்கின்றன.

    மேயர்:- இந்த பணிகளையும் ஒருங்கிணைத்து ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளன. பல ஒப்பந்ததாரர்கள் பணியை சரிவர செய்வதில்லை. புவியியல் அமைப்பு காரணமாக பணி காலதாமதம் ஆகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    தொடர்ந்து நடந்த விவாதத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் தமிழ்ச்செல்வன் எழுந்து பேசுவதற்கு அனுமதி கேட்டார். மக்கள் பிரச்சனை பற்றி பேசாமல் முதல்வர் புகழையே பாடுவதாக கூறி அவர் வெளிநடப்பு செய்தார்.
    Next Story
    ×