என் மலர்
தெலுங்கானா
- அவரது காரை வழிமறித்து துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- சி.பி.ஐ (கம்ம்யூனிஸ்ட்) மாநில கவுன்சில் உறுப்பினர் கே. சந்து நாயக் (47) கொல்லப்பட்டார்.
தெலுங்கானாவில் மேடக் மாவட்டத்தில் காங்கிரஸ் பட்டியலின பிரிவு செயலாளர் எம். அனில், காரில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திங்கள்கிழமை இரவு, அவரை இரு கார்களில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவரது காரை வழிமறித்து துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அனில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதால், பண தகராறு காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கு ஒரு நாள் முன்னதாக, மாலக்க்பேட்டில் காலை நடைப்பயிற்சி சென்ற சி.பி.ஐ (கம்ம்யூனிஸ்ட்) மாநில கவுன்சில் உறுப்பினர் கே. சந்து நாயக் (47), அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட பகையால் இக்கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், ஒரு துப்பாக்கி மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- சாய்னா 2023-ல் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
- ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெண்கலம் வென்றுள்ளார்.
ஐதராபாத்,
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (35), பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார்.
ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் 1 வெள்ளி, 1 வெண்கலம் என பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். 2023-ம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாய்னா அறிவித்தார்.
இதற்கிடையே, சாய்னா நேவாலுக்கும் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரரான பருபுல்லி காஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சாய்னா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் செய்தியில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவுசெய்து பிரிகிறோம் என பதிவிட்டுள்ளார். பிரிவதற்கான காரணம் குறித்து சாய்னா எதுவும் தெரிவிக்கவில்லை.
- வெளிநாட்டு பட்டங்கள் திறமையை அதிகரிக்கின்றன என்பது ஒரு கட்டுக்கதை.
- வெளிநாட்டு பட்டங்களுக்காக குடும்பங்களுக்கு கடன் சுமையை ஏற்படுத்த வேண்டாம்.
தெலுங்கானா ஐதராபாத்தில் உள்ள NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கலந்து கொண்டார். முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
நீதிபதி கவாய் தனது உரையில், இளம் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத் தொழிலில் நுழையும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.
சட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெளிநாட்டு பட்டங்களுக்காக கடனில் மூழ்க வேண்டாம் என்று எச்சரித்தார்.
இந்தியா தரமான சட்டக் கல்வியை வழங்குகிறது, வெளிநாட்டு பட்டங்கள் திறமையை அதிகரிக்கின்றன என்பது ஒரு கட்டுக்கதை என்றும், ஒருவரின் திறமை அவர்களின் பணி மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எனவே வெளிநாட்டு பட்டங்களுக்காக குடும்பங்களுக்கு கடன் சுமையை ஏற்படுத்த வேண்டாம் என்று அவர் மாணவர்களை அறிவுறுத்தினார்.
மேலும் தற்காலத்தில் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்களையும் கவாய் எடுத்துரைத்தார். இந்தியா பல்வேறு சட்ட சவால்களை எதிர்கொள்கிறது என்றும், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத் தொழிலில் உள்ளவர்கள் அனைவரும் கவனமாக இருப்பது முக்கியம் என்றும் கூறினார்.
- குறைந்தபட்சம் 30 நிமிட இடைவேளை வழங்கப்பட வேண்டும்
- ஆந்திரப் பிரதேசத்தில் அண்மையில் இதேபோன்ற 10 மணி நேர வேலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் அரசின் தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் துறையின் முதன்மைச் செயலாளர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த புதிய உத்தரவின்படி, கடைகளைத் தவிர்த்து மற்ற வணிக நிறுவனங்களில் தொழிலாளர்களின் தினசரி வேலை நேரம் 8 மணியிலிருந்து 10 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது.
இருப்பினும், வாராந்திர வேலை நேரம் 48 மணி நேர வரம்பை தாண்டக் கூடாது என்ற விதிமுறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
தொழிலாளர்கள் தொடர்ச்சியாக 6 மணி நேரம் வேலை செய்த பிறகு, குறைந்தபட்சம் 30 நிமிட இடைவேளை வழங்கப்பட வேண்டும் என்று இந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் அண்மையில் இதேபோன்ற 10 மணி நேர வேலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைப் பின்பற்றி, தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த மாற்றங்கள், தெலங்கானா மாநிலத்தில் வணிகச் செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு, தொழிலாளர் நலனையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.
- காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்துவதற்காக நாடு தழுவிய பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
- கிராம அளவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
ஐதராபாத்:
காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்துவதற்காக நாடு தழுவிய பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் இன்று மாலை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்குகிறார்.
இந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 40,000 காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பங்கேற்கின்றனர். இதில் கிராம அளவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. நேற்று தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ.க்கள் சிலர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தனர். அப்போது விரிவாக்கம் செய்யப்பட உள்ள அமைச்சரவையில் தங்களுக்கு இடம் வேண்டும் என கேட்டு அடம் பிடித்தனர். இதற்கு மல்லிகார்ஜுன கார்கே எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. இது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
- முதல் கட்டமாக உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்துப் பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில், தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி சம்பவ பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஆலை நிர்வாகத்திடம் பேசி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத்தர உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்.
ரூ.1 கோடி வழங்குவதற்காக அரசு மற்றும் நிறுவனம் தரப்பில் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளேன். தீவிர காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சைக்கு பின் குணமடைந்து பணிக்கு திரும்பக்கூடிய அளவுக்கு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் கிடைக்கும்.
முதல் கட்டமாக, அரசுத்தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது 143 பேர் பணியில் இருந்தனர். அதில் 56 பேர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. வேலை செய்தவர்களில் பலர் ஒடிசா, பீகார், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- என். ராமசந்தர் ராவ் தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல்.
- தகுதியான பல தலைவர்கள் இருப்பதாக எம்.எல்.ஏ. எதிர்ப்பு.
தெலங்கானா மாநில பாஜக-வின் அடுத்த தலைவராக என். ராமசந்தர் ராவ் நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலிடத்தின் இந்த முடிவுக்கு தெலங்கானா எம்எல்ஏ டி. ராஜா சிங் எதிர்ப்பு தெரிவித்து கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது கட்சிப் பதவி ராஜினாமா கடிதத்தை மத்திய அமைச்சர் மற்றும் தற்போதைய தலைவர் ஜி. கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளார். அதில் "ராமசந்தர் ராவ் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. எனக்கு மட்டுமல்ல, கட்சியின் ஏற்றத்தாழ்வில் நின்ற லட்சக்கணக்கான தொண்டர்கள், தலைவர்கள், வாக்காளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானாவில் பாஜக தனது முதல் அரசாங்கத்தை அமைக்கும் வாசலில் நிற்கும் நேரத்தில், இதுபோன்ற ஒரு தேர்வு நாம் செல்லும் திசை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது. பதவிக்கு பொறுத்தமான ஏராளமான தலைவர்கள் உள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
- பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
தெலங்கானாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சங்காரெட்டி மாவட்டம் பசமைலாரத்தில் சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
- ரெயில் தும்மலச்செருவை அடைந்தவுடன், ஒரு கும்பல் ரெயிலுக்குள் நுழைந்து கொள்ளையடிக்கத் தயாரானது.
- பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே இயங்கும் கும்பல்கள் சில காலமாக ரெயில்களில் கொள்ளையடித்து வருகிறது.
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற விசாகா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சில மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர்.
ரெயில் தும்மலச்செருவை அடைந்தவுடன், ஒரு கும்பல் ரெயிலுக்குள் நுழைந்து கொள்ளையடிக்கத் தயாரானது. அதைக் கவனித்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர்.
மர்ம நபர்களை கலைக்க அவர்கள் வானத்தில் மூன்று சுற்றுகள் சுட்டனர். துப்பாக்கி சத்தம் கேட்டு பயந்துபோன திருடர்கள், கொள்ளையடிக்க கொண்டு வந்த பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு இருளில் தப்பி ஓடிவிட்டனர்.
பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே இயங்கும் கும்பல்கள் சில காலமாக ரெயில்களில் கொள்ளையடித்து வருவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கும்பல்கள் ஒரு வார காலத்தில் இரண்டு கொள்ளைச் சம்பவங்களைச் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைமறைவான மர்ம நபர்களைத் தேடும் பணிகளை ரெயில்வே போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
- பெற்றோரை பிரிந்து காதலன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுக் தேவ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜவகர் நகர் ஆர்.டி.சி கிராஸ் சாலையை சேர்ந்தவர் சுக்தேவ் வோடர்கர் (வயது 40). இவர் பிரபல தெலுங்கு டி.வி.யில் தொகுப்பாளராக வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்தார். பார்சிகுடா, ஒய்.எஸ்.ஆர் பூங்கா அருகே தனது பெற்றோர் மற்றும் 14 வயது மகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சுக்தேவிற்கு மற்றொரு நபருடன் காதல் ஏற்பட்டது. இதனால் பெற்றோரை பிரிந்து காதலன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
நேற்று காலை தன்னுடன் வசித்து வந்த காதலனுடன் சுக்தேவுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவரது காதலன் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார்.
நேற்று இரவு வீட்டு படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சுக்தேவ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது மகள் இது குறித்து தனது தாத்தா, பாட்டிக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் சிக்கட்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுக் தேவ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மூத்த மகள் பி.டெக் படிக்கிறார். இரண்டாவது மகள் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வி படிக்க காத்திருக்கிறார்.
- படம்பிடித்து பதிவேற்றியதற்காக அவர்களுக்கு ரூ.500 சம்பளம் வழங்கப்பட்டது. தவிர நேரடி ஒளிபரப்புக்கு ரூ.2,000 வசூலிக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலம் அதிராபாத்தில் ஒரு தம்பதியினர் தங்கள் மகளின் கல்லூரி கட்டணத்தை செலுத்துவதற்காக பாலியல் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்த தம்பதியினர் தங்கள் இரண்டு மகள்களின் கட்டணத்தை செலுத்த சிரமப்பட்டனர். மூத்த மகள் பி.டெக் படிக்கிறார். இரண்டாவது மகள் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வி படிக்க காத்திருக்கிறார். இந்நிலையில் தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுகளைச் சமாளிக்க முடியாததால், பெற்றோர் மொபைல் செயலி மூலம் தங்கள் இருவரின் அந்தரங்க காட்சிகளை ஒளிபரப்பி பணம் ஈட்டியுள்ளனர்.
சிறுமிகளின் தந்தை ஆட்டோரிக்ஷா ஓட்டுநராக இருப்பதால், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக வேலைக்குச் செல்ல முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். வீடியோவைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் காட்சிகளைப் படம்பிடித்து பதிவேற்றியதற்காக அவர்களுக்கு ரூ.500 சம்பளம் வழங்கப்பட்டது. தவிர நேரடி ஒளிபரப்புக்கு ரூ.2,000 வசூலிக்கப்பட்டதாகபோலீசார் தெரிவித்தனர். உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் அவர்களின் வீடு சோதனை செய்யப்பட்ட பின் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- கணவரின் நடமாட்டத்தைக் கண்காணிக்க பைக்கில் ஜிபிஎஸ் சாதனத்தைப் பொருத்தியிருந்தார்.
- ஐஸ்வர்யாவும் ராவும் 2,000 தொலைபேசி அழைப்புகளைச் செய்திருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
மேகாலயாவில் நடந்த தேனிலவு கொலையை போல தெலுங்கானாவில் திருமணமான ஒரு மாதத்திற்குள் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தக் கொலைக்குப் பின்னணியில் இளைஞரின் மனைவி மற்றும் காதலர் இருப்பது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் தெலுங்கானா மாநிலம் கர்வால் பகுதியைச் சேர்ந்த தேஜேஷ்வர் என அடையாளம் காணப்பட்டார். அவருக்கு ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் மே 18 ஆம் தேதி திருமணம் நடந்தது.ஆனால் ஐஸ்வர்யா திருமால் ராவ் என்பவருடன் உறவில் இருந்துள்ளார்.
முக்கிய திருப்பமாக ஐஸ்வர்யாவின் அம்மா சுஜாதாவும் திருமால் ராவ்வுடன் காதல் கொண்டிருந்தார். ராவ் நடத்தும் தனியார் நிதி நிறுவனத்தில் சுஜாதா துப்புரவுப் பணியாளராக இருந்தார். இருவரும் அங்கு சந்தித்தனர்.
பின்னர், சுஜாதாவின் மகள் ஐஸ்வர்யாவை ராவ் காதலித்தார். ஆனால் ராவ் 2019 இல் வேறொரு பெண்ணை மணந்தார். ராவ் தனது மனைவியைக் கொல்லவும் முயன்றதாக கூறப்படுகிறது. ராவ் உடனான தனது உறவு பற்றி அறிந்ததும், சுஜாதா ஐஸ்வர்யாவை தன்னை விட்டு வெளியேறி தேஜேஸ்வரை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார்.
ஆனால் ஐஸ்வர்யா அதற்குத் தயாராக இல்லை. சுஜாதா வரன் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
திருமண தேதியை முடிவு செய்த பிறகு, ஐஸ்வர்யா காணாமல் போனார். இறுதியாக திரும்பிய பிறகு, ஐஸ்வர்யா தேஜேஸ்வரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். இறுதியாக, இருவரும் மேற்கூறியபடி மே 18 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு, ஐஸ்வர்யா தொடர்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். தேஜேஷ்வரின் குடும்பத்தினரை, தான் தனது தாயுடன் பேசுவதாக நம்ப வைத்தார். தேஜஸ்வரை கொலை செய்ய காதலன் ராவுடன் சேர்ந்து ஐஸ்வர்யா திட்டம் தீட்டி வந்தார்.
ஐஸ்வர்யா தனது கணவரின் நடமாட்டத்தைக் கண்காணிக்க பைக்கில் ஜிபிஎஸ் சாதனத்தைப் பொருத்தியிருந்தார். தேஜேஷ்வரின் நடமாட்டத்தைக் கண்காணிக்க மோகன் என்பவனையும் ஏற்பாடு செய்தார்.
பிப்ரவரி முதல் ஜூன் வரை ஐஸ்வர்யாவும் ராவும் 2,000 தொலைபேசி அழைப்புகளைச் செய்திருப்பதை போலீசார் கண்டறிந்தனர். திருமண நாளன்று கூட, இருவரும் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டனர்.
இதைத்தொடர்ந்து காணாமல் போன சில நாட்களுக்குப் பிறகு தேஜேஷ்வரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நேரத்தில், ஐஸ்வர்யா எந்த பெரிய சோகத்தையும் காட்டவில்லை, இது தேஜேஷ்வரின் குடும்பத்தினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஐஸ்வய்ராவின் கும்பல் தேஜேஷ்வரைக் கொல்ல பல முறை முயன்றனர். ஆனால் தோல்வியடைந்தனர். இறுதியாக, அவரைக் கொன்ற பிறகு, அவரது உடலை கால்வாயில் வீசியது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஐஸ்வர்யா, அவரது தாய் சுஜாதா மற்றும் அவரது காதலன் திருமால் ராவ் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், முன்பு காவல்துறையில் இருந்த திருமால் ராவின் தந்தையும் கொலைக்கு உதவி செய்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர்.






