என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரசில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின.
    • காங்கிரசும், பி.ஆர்.எஸ்சும் ஒன்றுதான். இரண்டும் ஊழல் கட்சிகள் என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

    ஐதராபாத்:

    ஆந்திர மாநில முதல் மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமாக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.

    இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில், சர்மிளா காங்கிரசில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவரான கிஷன் ரெட்டி கூறுகையில், காங்கிரஸ் கட்சியும், பி.ஆர்.எஸ் கட்சியும் ஒன்றுதான். இரு கட்சிக்கும் ஒரே டி.என்.ஏ உள்ளது. இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள். காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது காளேஸ்வரம் திட்ட ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரியிருந்தது.

    இன்று காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் அதே கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதவேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். அப்படி கடிதம் எழுதினால், 48 மணி நேரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு எங்கள் அரசு உத்தரவிடும் என உத்தரவாதம் அளிக்கிறேன் என தெரிவித்தார்.

    • வட இந்திய மாநிலங்களிலும் இந்த பறவை இனங்கள் வர தொடங்கியுள்ளன.
    • குளிர்காலம் என்பதால் இறைதேடி தெலுங்கானா மாநிலத்திற்கு வந்துள்ளன.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் மோமின் பேட்டை மண்டலத்தில் உள்ள வனப்பகுதியில் அரிய வகை பறவை ஒன்று தென்பட்டது.

    இந்த பறவை மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் வாழக்கூடியதாகவும். தற்போது வட இந்திய மாநிலங்களிலும் இந்த பறவை இனங்கள் வர தொடங்கியுள்ளன.

    தற்போது குளிர்காலம் என்பதால் இறைதேடி தெலுங்கானா மாநிலத்திற்கு வந்துள்ளன. கடந்த 2023-ம் ஆண்டில் தெலுங்கானாவில் காணப்பட்ட பறவைகளின் பட்டியலில் இது இடம்பெற்றுள்ளது.

    • ஓட்டல் ஊழியர்கள் உருட்டு கட்டைகளை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை தாக்கினர்.
    • வாடிக்கையாளர்களை ஓட்டல் ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    ஐதராபாத் அமிட்சில் பழமை வாய்ந்த பிரபல ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் ஐதராபாத் பிரியாணி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    புத்தாண்டு தினத்தையொட்டி ஓட்டலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது வாடிக்கையாளர்கள் கும்பலாக பிரியாணி சாப்பிட வந்தனர்.

    அவர்களுக்கு பிரியாணி பரிமாறப்பட்டது. அந்த பிரியாணி சூடாக இல்லை. மேலும் ருசியாகவும் இல்லை என வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

    இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கும் ஓட்டல் ஊழியர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    திடீரென அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஓட்டல் ஊழியர்கள் உருட்டு கட்டைகளை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை தாக்கினர்.

    மேலும் சேர்களை தூக்கி அவர்கள் மீது வீசினர். இதனைக் கண்ட பொதுமக்கள் ஓட்டலில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் அனைத்து சென்று விசாரித்தனர்.

    ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.அதில் ஓட்டல் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் மீது கட்டை மற்றும் சேர்களை கொண்டு தாக்குவது பதிவாகி இருந்தது.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்:

    பிரியாணி சூடாக இல்லை என்றதால் இந்த பிரச்சனை நடந்துள்ளது.முதலில் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது திடீரென இந்த வாடிக்கையாளர் ஓட்டல் ஊழியரை தாக்கியதால் நிலைமை மோசமாகியுள்ளது.

    இது தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    வாடிக்கையாளர்களை ஓட்டல் ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • செல்போன் மூலம் கணவன் மனைவிக்கு இடையே கூட தற்போது தகராறு ஏற்பட்டு வருகின்றன.
    • போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போன் நவீன காலத்தில் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. எந்த நேரத்திலும் செல்போனோடு தான் பொழுதை கழிக்கிறார்கள்.

    செல்போன் மூலம் கணவன் மனைவிக்கு இடையே கூட தற்போது தகராறு ஏற்பட்டு வருகின்றன.

    சினிமா பாடல் கேட்பதற்காக செல்போன் கேட்ட கணவர் கண்ணை மனைவி குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஹவுசிங் டெவலப்மென்ட் காலனியை சேர்ந்தவர் அங்கித். இவருடைய மனைவி பிரியங்கா. வீட்டில் இருந்த பிரியங்கா செல்போனில் சினிமா பாடல் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அங்கித் மனைவியிடம் தான் பாடல் கேட்க வேண்டும் என கூறி செல்போனை கேட்டார்.

    அப்போது பிரியங்கா நான் இன்னும் சில பாடல்களை கேட்க வேண்டும். அதனால் செல்போனை தர முடியாது என தெரிவித்தார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .

    ஆத்திரமடைந்த பிரியங்கா வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து அங்கித்தின் கண்ணில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அலறி துடித்தார்.

    சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அங்கித் தனது மனைவி பிரியங்கா மீது போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 60 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.
    • டிசம்பர் 26-ந்தேதி முதல் ஜனவரி 10-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிப்பு.

    சாலை போக்குவரத்து விதிமுறை மீறுபவர்களுக்கு போக்குவரத்துத்துறை அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படும். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியால் வாகனம் ஓட்டுவது, சிக்னலில் நிற்காமல் செல்வது, பார்க்கிங் செய்ய தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைப்பது போன்ற விதிமுறை மீறல் காரணத்திற்காக அபராதம் விதிக்கப்படும்.

    சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் தற்போது தண்டனை மற்றும் அபராதம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் அபராதம் செலுத்த முடியாமல் உள்ளனர்.

    இந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறி அபராதம் செலுத்த வேண்டிய நிலையில், அபராதம் செலுத்தாமல் இருக்கும் நபர்களுக்கு அம்மாநில அரசு 60 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி புதிதாக ஆட்சி அமைத்துள்ளது. ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவி ஏற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் பயனடையும் வகையில் தெரிவிக்கப்பட்டதன் ஒரு பகுதி இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 26-ந்தேதி (நேற்று) முதல் ஜனவரி 10-ந்தேதிக்குள் நிலுவையில் உள்ள அபராதத் தொகையை கட்டுபவர்களக்கு இந்த தள்ளுபடி சலுகை பொருந்தும்.

    தெலுங்கானா மாநில போக்குவரத்தின் e-challan இணைய தளத்தில் சென்று அவர்களுடைய வாகனத்திற்கான நிலுவை அபராதத் தொகை ரசீது உள்ளதா? என பரிசோதித்து, தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை கட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் சுமார் 2 கோடி ரசீதுக்கு இன்னும் பணம் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.

    2022-ல் நாடு முழுவதும் 7563.60 கோடி ரூபாய் அளவிற்க 4.73 ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

    தள்ளுவண்டி, தெலுங்கானா மாநில போக்குவரத்து கழகம் பேருந்துகள் நிலுவைத் தொகையில் 10 சதவீதம் மட்டுமே கட்டினால் போதும். இரு சக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் 20 சதவீதம் கட்டினால் போதும். 80 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தெலுங்கானாவில் காங்கிரஸ் 65 இடங்களில் வெற்றி பெற்றது.
    • அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.

    புதுடெல்லி:

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அங்கு முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

    மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும், துணை முதல் மந்திரியாக விக்ரமர்க மல்லு பதவியேற்றார்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்ட ரேவந்த் ரெட்டி இன்று தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். அப்போது துணை முதல் மந்திரியும் உடனிருந்தார்.

    5 மாநில தேர்தலில் ஆட்சியைப் பிடித்த மாநிலங்களின் முதல் மந்திரிகள் கடந்த சில வாரங்களாக பிரதமர் மோடியைச் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருமண நிச்சயதார்த்ததிற்கான ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்தனர்.
    • விருந்தில் நல்லி எலும்பு கறி இல்லாதது தங்களை அவமதிக்கும் செயலாக உள்ளது என மணமகன் வீட்டார் கூறியுள்ளனர்.

    மணப்பெண்ணின் வீட்டார் நிச்சயதார்த்த நிகழ்வில் நல்லி எலும்பு வழங்காததால் மணமகன் குடும்பத்தினர் கோபமடைந்து திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    நிஜாமாபாத்தை சேர்ந்த பெண்ணுக்கும், ஜக்தியாலைச் சேர்ந்தவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. விரைவில் திருமணமும் நடைபெற இருந்தது. இதையடுத்து திருமண நிச்சயதார்த்ததிற்கான ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்தனர்.

    நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மணமகளின் குடும்பத்தினர், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மணமகனின் உறவினர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு அசைவ உணவு வகைகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

    நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஆட்டிறைச்சியின் நல்லி எலும்பு வழங்கப்படவில்லை என்று விருந்தினர்கள் சுட்டிக்காட்டியதால் சண்டை வெடித்தது. விருந்தில் நல்லி எலும்பு கறி இல்லாதது தங்களை அவமதிக்கும் செயலாக உள்ளது என மணமகன் வீட்டார் கூறியதை தொடர்ந்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி, திருமணம் நிறுத்தப்பட்டது.

    • குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் நிற்காமல் வந்தது.
    • ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று வீட்டில் இருந்த போது குழந்தையை படுக்க வைத்து விட்டு தாயார் குளிக்கச் சென்றார்.

    அந்த நேரத்தில் வீட்டில் இருந்த எலி ஒன்று குழந்தை அருகில் வந்தது. திடீரென குழந்தையின் மூக்கை எலி கடித்தது.

    இதனால் குழந்தை கதறி அழுதது. சத்தம் கேட்டு குழந்தையின் தாய் மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்தனர்.

    அப்போது குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் நிற்காமல் வந்தது. இதனை தொடர்ந்து குழந்தையை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    எலி இருக்கும் வீடுகளில் குழந்தையை தரையில் படுக்க வைக்க வேண்டாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • ஆத்திரமடைந்த அசிம்கான் கண்டக்டரிடம் தகராறு செய்தார். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம், அடி சுந்தரவாடா பஸ் நிலையத்தில் இருந்து உட்னூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில் கான் என்ற கண்டக்டர் பணியில் இருந்தார்.

    அப்போது அன்ஸ்னாபூரை சேர்ந்த அசிம் கான் என்பவர் பஸ்சில் ஏறினார். அவர் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கினார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அசிம்கானுக்கு சீட் கிடைக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அசிம்கான் கண்டக்டரிடம் தகராறு செய்தார். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்.

    இதையடுத்து கண்டக்டர் பணத்தை திருப்பி கொடுத்து அசின் கானை பஸ்சிலிருந்து கீழே இறக்கினார்.

    அப்போது அசிம் கான் கண்டக்டரை தாக்கினார். அவரை கீழே தள்ளி கன்னத்தைக் கடித்து துப்பினார்.

    இதில் கண்டக்டரின் கன்னத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனைக் கண்டு பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    அசிம் கானை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தெலுங்கானாவில் 1.20 கோடி கியாஸ் இணைப்புகள் உள்ளன.
    • ஆண்கள் பெயரில் உள்ள இணைப்புகள் பெண்கள் பெயரில் மாற்ற கியாஸ் ஏஜென்சி அலுவலகம் முன்பாக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

    தெலுங்கானாவில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு ரூ.500-க்கு சமையல் கியாஸ் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்தது.

    அதன்படி வருகிற 28-ந்தேதி காங்கிரஸ் தோற்றுவித்த நாளை முன்னிட்டு தெலுங்கானாவில் பெண்கள் பெயரில் உள்ள கியாஸ் இணைப்புகளுக்கு மகாலட்சுமி என்ற புதிய திட்டத்தில் ரூ.500 மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட உள்ளது.

    தெலுங்கானாவில் 1.20 கோடி கியாஸ் இணைப்புகள் உள்ளன.

    பெண்கள் பெயரில் கியாஸ் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் மானிய விலையில் வழங்கப்படும் என தெரியவந்ததால் ஆண்கள் பெயரில் உள்ள இணைப்புகள் பெண்கள் பெயரில் மாற்ற கியாஸ் ஏஜென்சி அலுவலகம் முன்பாக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

    • ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன்காரராக மாறிய விரக்தியில் தற்கொலை.
    • வட்டிக்கு பணம் வாங்கியும் நரேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை மனைவி சைதன்யா கண்டித்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலத்தில் மனைவி, மகன், மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன்காரராக மாறிய விரக்தியில் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்பட்ட ஆயுதப்படை காவலர்.

    தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை காவலர் நரேஷ், சித்தபேட்டை ஆட்சியரின் மெய்க்காவலராக பணியாற்றி வந்தவர்.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான நரேஷ் தனது மொத்த சம்பளத்தையும் பல மாதங்களாக சூதாட்டத்தில் இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இழந்த பணத்தை பிடிக்கலாம் என்ற ஆர்வத்தில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி நரேஷ் சூதாடியுள்ளார்

    வட்டிக்கு பணம் வாங்கியும் நரேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை மனைவி சைதன்யா கண்டித்துள்ளார்.

    இந்நிலையில், மன விரக்தியில் இருந்து வந்த நரேஷ் மனைவி குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    • சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் சந்திரசேகர் ராவை சந்தித்து நலம் விசாரித்தார்.

    இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் நலம் விசாரித்தனர்.

    தற்போது அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரசேகரராவ் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    ×