என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது.
- கடந்த 10 ஆண்டுகள் வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கும்போது எட்ட முடியாத வளர்ச்சி.
தமிழ்நாட்டின் வளர்ச்சி 9.69 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. 9.69 சதவீதம் என்பது கடந்த 10 ஆண்டுகள் வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கும்போது எட்ட முடியாத வளர்ச்சி" என்றார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 9.69% என்ற குறிப்பிடத்தக்க உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளது.
இது அனைத்து மாநிலங்களைவிட மிக உயர்ந்தது. கடந்த 10 ஆண்டுகளில் வலிமையானது .
மாநிலத்தின் பொருளாதாரம் நிலையான விலையில் ரூ. 14.53 லட்சம் கோடியாகவும், தற்போதைய விலையில் ரூ. 23.64 லட்சம் கோடியாகவும் விரிவடைந்துள்ளது - இது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த அளவைக் குறிக்கிறது.
இந்த சிறந்த சாதனை, மக்கள் நலன், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக் கதையை முன்னெடுத்துச் சென்ற நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குத் தலைமைக்கு ஒரு சான்றாகும்.
அவரது வழிகாட்டுதலின் கீழ், சேவைகள் துறை 12.7% மற்றும் தொழில்துறை 9% வளர்ச்சியுடன், பல்வேறு துறைகளில் விதிவிலக்கான வேகத்தைக் கண்டுள்ளோம்.
தமிழ்நாடு வேகமாக வளரும் பொருளாதாரத்தை மட்டுமல்ல, நோக்கம், மீள்தன்மை மற்றும் கூட்டு முயற்சியுடன் வளரும் பொருளாதாரத்தையும் உருவாக்கி வருகிறது.
1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான எங்கள் லட்சிய இலக்கை நோக்கி நாங்கள் உறுதியாகப் பயணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
- எவ்வித முகாந்திரமும் இல்லாமல் அவசர அவசரமாக சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக ஞானசேகரன் தெரிவித்து உள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், கடந்தாண்டு டிச. 25-ந்தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.
தொடர் விசாரணையில், திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. அவருக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வை சேர்ந்த வக்கீல் ஏ.மோகன்தாஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தி.மு.க. நிர்வாகியாக இருந்த ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழ்நாடு போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. இந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கோ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கோ மாற்ற வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி ஞானசேகரன் மனுத்தாக்கல் செய்து இருந்தார். மனுவில், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் அவசர அவசரமாக சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார்.
அல்லிகுளம் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணைக்காக ஞானசேகரன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஞானசேகரன் மனு மீது 7-ந்தேதி அரசு தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
- சம்பந்தப்பட்ட மரம் கோவிலின் மதில் சுவரில் ஊடுருவி உள்ளதால் புதிய கோவிலைக் கட்டுவதற்கு மரத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே அகற்றப்படும்.
- மரம் அழியாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினர்.
சென்னை:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, மணிகண்டன் 3-வது தெருவில் உள்ள பார்வதி அம்மன் கோவிலில், 17.30 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்ய உள்ளதாக அறநிலையத்துறை அறிவித்தது.
திருப்பணியில் ஒரு பகுதியாக கோவிலில் உள்ள 150 ஆண்டு பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், திருப்பணி என்ற பெயரில் கோவிலின் தல விருட்சமான 150 ஆண்டு பழமையான ஆலமரத்தை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.கே. ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெகநாதன், அரச மரத்தை அப்பகுதி மக்கள் புனிதமாக கருதுவதால், அதை அகற்றக்கூடாது என்று வாதிட்டார்.
இந்து அறநிலையத்துறை சார்பில், சம்பந்தப்பட்ட மரம் கோவிலின் மதில் சுவரில் ஊடுருவி உள்ளதால் புதிய கோவிலைக் கட்டுவதற்கு மரத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே அகற்றப்படும். பசுமையான சூழலைப் பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விழிப்புடன் உள்ளனர். மரம் அழியாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினர்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
- கோவிலை சுத்தம் செய்யும் பணியில் 16 பெண் பணியாளர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர்.
- பெண் ஊழியர் ஒருவர் ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு பணிகளில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பொறியியல் துறையில் வரைவாளராக சதீஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் பல்வேறு பொறுப்புகளில் உள்ளார்.
கோவிலை சுத்தம் செய்யும் பணியில் 16 பெண் பணியாளர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். பெண் ஊழியர் ஒருவர் ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில் சதீஷ் பெண்களிடம் ஆபாசமாக பேசி மனரீதியாகவும் தொல்லை கொடுப்பதாக கூறியிருக்கிறார்.
மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை உள்ளது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து அதிகாரி சதீஷ் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டன.
- கோவை கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகிளா கோர்ட்டில் சிறப்பு நீதிபதி முன்பு 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி மாணவிகளை வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், அருண்குமார், ஹேரன்பால், பாபு ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குமூலம் கொடுத்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இதுவரை 50க்கும் மேற்பட்ட அரசு தரப்பு சாட்சியங்களிடம் விசாரணை நடந்துள்ளது. 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டன.
2 மாதத்திற்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
அரசு தரப்பு சாட்சியங்கள் முடிந்த நிலையில், இருதரப்பிடமும் கேள்விகள் கேட்டு பதில் பெறுவதற்காக இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதற்காக குற்றம் சாட்டப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், அருண்குமார், ஹேரன்பால், பாபு ஆகிய 9 பேரும் சேலம் மத்திய ஜெயிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் கோவை கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகிளா கோர்ட்டில் சிறப்பு நீதிபதி முன்பு 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.
இதையடுத்து வழக்கு விசாரணையை 9-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- தகுதிகளை நிர்ணயம் செய்ய என்.சி.டி.இ. கல்வி ஆணையமாக அரசாங்கம் நியமித்து உள்ளது.
- தற்போதைய வழக்கில், விண்ணப்பதாரர் டி.இ.டி. தகுதி இல்லாததால், நியமனத்திற்கான ஒப்புதலை வழங்க முடியாது.
மதுரை:
மதுரை மேலூர் அருகே உள்ள ஒரு சிறுபான்மையினர் அரசு உதவி பெறும் பள்ளியில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், டி.இ.டி. எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவை ரத்து செய்து தனக்கு பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என ஆசிரியர் பஷீர் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, டி.இ.டி.யில் தேர்ச்சி பெறாத சிறுபான்மை பள்ளி ஆசிரியரான பஷீருக்கு பணி வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, கல்வித்துறை சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சிறுபான்மை நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
தகுதிகளை நிர்ணயம் செய்ய என்.சி.டி.இ. கல்வி ஆணையமாக அரசாங்கம் நியமித்து உள்ளது. மற்றும் என்.சி.டி.இ., டி.இ.டி., ஐ தகுதிகளில் ஒன்றாக நிர்ணயித்துள்ளது.
எனவே, டி.இ.டி. தகுதி சிறுபான்மை நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
தற்போதைய வழக்கில், விண்ணப்பதாரர் டி.இ.டி. தகுதி இல்லாததால், நியமனத்திற்கான ஒப்புதலை வழங்க முடியாது. அனுமதி மறுத்து கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு டி.இ.டி. தகுதியைப் பொருத்தவரை செல்லுபடியாகும். எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டு உள்ளனர்.
- கம்பம் சுற்று வட்டார பகுதியிலும் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக இடைவிடாத மழை கொட்டி தீர்த்தது.
- வீடுகள் இடிந்த குடும்பத்தினரை பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக கனமழை பெய்தது. இதேபோல கம்பம் சுற்று வட்டார பகுதியிலும் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக இடைவிடாத மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் புகுந்து பெருக்கெடுத்து ஓடியது. கம்பம் நகராட்சி 26, 27, 28வது வார்டுகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் 29வது வார்டு ஆதிசக்தி விநாயகர் கோவில் தெருவுக்குள் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிர்த்தனர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூக்கமின்றி வேறு இடங்களுக்கு சென்றனர்.
இன்று அதிகாலை அப்பகுதியில் இருந்த அடுத்தடுத்த 5 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. அப்போது வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த பொருட்களை அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து சுவர் இடிந்து விழுந்ததால் ரேசன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி புத்தகம் மற்றும் பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் அனைத்தும் நீரில் நனைந்து சேதம் ஆகிவிட்டதாக வேதனையுடன் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு கம்பம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வீடுகள் இடிந்த குடும்பத்தினரை பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் புதிய மாற்றங்களை எதிர்நோக்கி ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.
- வருகிற 11-ந்தேதி சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த மாத இறுதியில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இந்த 2 சந்திப்புகளும் அடுத்தடுத்து நிகழ்ந்ததால் தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாக போவதாக பரபரப்பாக பேசப்பட்டது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டால் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன் என்று ஏற்கனவே அண்ணாமலை கூறி இருந்தார். இதை அமித்ஷாவை சந்தித்த போது சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி விரைவில் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்றினால்தான் கூட்டணி பற்றி அடுத்தகட்ட பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை விலக செய்து விட்டு வேறு ஒருவரை நியமிப்பது தொடர்பாக டெல்லியில் அமித்ஷா தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் அண்ணாமலை நேற்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, "தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை" என்று கூறினார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது, "போட்டியில்லாத ஒரு போட்டியில் நான் போட்டியிடவில்லை" என்று குறிப்பிட்டு இருந்தார். இது தமிழக அரசியல் களத்தில் அண்ணாமலை பதவி தொடர்பாக கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்ணாமலை பதவியில் நீடிப்பதை மனதில் வைத்து சூசகமாக இப்படி பேசியிருக்கலாம் என்று தமிழக பா.ஜ.க.வினரிடம் தகவல் பரவி உள்ளது. தமிழக பா.ஜ.க. நிலவரம் பற்றி சமீபத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, சந்தோஷ் ஆகிய மூவரும் தீவிர ஆய்வு செய்தனர். அப்போது கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய செல்வாக்கை அண்ணாமலை ஏற்படுத்தி தருவார் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடனும் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை விலக்கும் பட்சத்தில் அவருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்று ஒருசாரார் வலியுறுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் புதிய மாற்றங்களை எதிர்நோக்கி ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் வருகிற 11-ந்தேதி சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய மந்திரி கிஷண்ரெட்டி இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வர உள்ளார்.
அந்த கூட்டத்தில் புதிய மாநில, மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களிடம் புதிய மாநில தலைவராக யாரை தேர்வு செய்வது என்பது பற்றி கலந்துரையாடல் நடத்தப்படும்.
இதன் அடிப்படையில் 11-ந்தேதி அல்லது 12-ந் தேதி தமிழக பா.ஜ.க. தலைவர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
அண்ணாமலைக்கு பதில் வேறு ஒருவர்தான் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி உள்ளது.
- சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கனமழையின் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரம் மதிய வேளைகளில் 34 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகக்கூடும்.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இன்று முதல் 11-ந்தேதி வரை சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
- இங்குள்ள கட்சிகள் தேர்தல் நேரம் வரும் போதெல்லாம் புதிய நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள்.
- இவ்வளவு நாள் இருந்துவிட்டு கச்சத்தீவு மீட்க தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார்.
நீட் தேர்வு ஒழிப்பு சம்பந்தமாக நடத்தப்படும் அனைத்து கட்சி கூட்டம் திட்டமிட்டு ஏமாற்றும் வேலை. இது ஒரு நாடகம். நீட் கொண்டு வந்தது காங்கிரஸ். அவர்கள் கூட இருந்தது தி.மு.க.
அப்போதெல்லாம் எதிர்க்கவில்லை இப்போது தேர்தல் வரும் நேரத்தில் நீட் தேர்வை ஒழிக்க போவதாக நாடகமாடுகிறார்கள். நீட் தேர்வை ஒழிக்க முடியாது எனக் கூறியவர்களும் அவர்கள்தான். இது அவர்களுக்கு உறுதியாக தெரியும். இதற்கு மாற்று வழி தான் யோசிக்க வேண்டும்.
ஒரு தேர்வை கொண்டு வரும் போதே மாணவர்கள் பாதிக்கப்படுவார்களா? என யோசித்து இருக்க வேண்டும்.ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு எரிந்து விடும். நாசமாகிவிடும் என்பது குறித்து எல்லாம் யோசித்திருக்க வேண்டும். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் நம்முடைய மாநிலத்தில் அதிக மாணவ மாணவர்கள் நீட் தேர்வால் இறக்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்கு தெரியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ஒழித்து விடுவோம் என்றார்கள்.
4 வருடம் எந்த வித தீர்மானமும் கொண்டு வரவில்லை. தற்போது தேர்தல் நெருங்குவதால் நீட் தேர்வு குறித்து பேசுகிறார்கள். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்திருப்போம் என்கிறார்கள். இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்கிறார்கள்.
கடந்த தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்றார்கள். அதற்கு பிறகு தகுதி உடைய பெண்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்று கூறி விட்டனர். தேர்தல் நேரத்திலேயே ஏன் இதனை கூறவில்லை.
தமிழகத்தில் பள்ளிகளில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. புதுக்கோட்டை அருகே பொன் நகரம் என்ற இடத்தில் 300 மாணவிகள் படித்து வரும் பள்ளியில் கழிவறை வசதி இல்லை. மரத்தடியில் படிக்கிறார்கள். அரசு பள்ளிகளை மேம்படுத்தாமல் ரூ.200 கோடி 300 கோடியில் நூலகம் கட்டி எந்த பயனும் இல்லை.
மதுரையில் உள்ள நூலகத்தில் காவலாளி தவிர வேறு யாரும் இல்லை. காதல் ஜோடிகள் அமர்ந்து பேசும் பாதுகாப்பான இடமாக அது மாறி உள்ளது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் சோகமாக உள்ளது. இதற்கு அழுவது புலம்புவது போராடுவதை தவிர வேறு வழியில்லை. உரிமை இழப்பது உயிரை இழப்பது தமிழர். இதில் நமக்கான ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. இதற்கான மாற்றம் வரத்தான் செய்யும்.
ஒருவன் தண்ணியடிப்பான், சலம்புவான். ஆடு, மாடுகளை திருடுவான். பெண்களை கையை பிடித்து இழுப்பான். திடீரென கோவிலில் திருவிழா வந்துவிட்டால் காப்பு கட்டிக் கொள்வான்.
அவனும் சாமி ஆடி நல்லவனாக நடந்து கொள்வான். அது போல தான் இங்குள்ள கட்சிகள் தேர்தல் நேரம் வரும் போதெல்லாம் புதிய நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள். இவ்வளவு நாள் இருந்துவிட்டு கச்சத்தீவு மீட்க தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். இது திட்டமிட்ட நாடகம் என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதால் மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
- இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர்.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே தமிழகத்தில் முன்எப்போதும் இல்லாத வகையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை பல்வேறு தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் களம் காண உள்ளனர். இதில் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கிட்டத்தட்ட கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகளுடனும் போட்டியிட உள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அரசியலில் களம் கண்டு முதல் தேர்தலை எதிர்கொள்ள விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் தற்போது வரை தனித்து போட்டியிடும் சூழலில் தான் உள்ளது. இருப்பினும் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதால் இவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில், சட்டசபையில் தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி, வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்தி போட்டியிடுகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர். நாளைய தினம் நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டத்தில் இடும்பாவனம் கார்த்தி அறிமுகப்படுத்தப்படுகிறார்.
- கோபாலகிருஷ்ணன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.
- கேரளாவில் இருந்து வந்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான 'எம்புரான்' திரைப்படம் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து சர்ச்சை வசனம் இடம் பெற்றதால் இந்த படத்துக்கு தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை நினைவு கூரும் வகையிலும், இந்துக்கள் குறித்தும் இந்த திரைப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றதற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து கண்டன குரல்கள் எழுந்துள்ளன.
இந்த திரைப்படத்தை 4 தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் கோகுலம் நிதி நிறுவன அதிபர் கோகுலம் கோபாலகிருஷ்ணனும் ஒரு தயாரிப்பாளர் ஆவார். இவருடைய கோகுலம் நிதி நிறுவனத்தின் கிளைகள் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியது.
அதன்பேரில் அப்போது இந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,100 கோடி வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர். இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக முகாந்திரம் இருப்பதாக அமலாக்கத்துறைக்கு வருமான வரித்துறை சார்பில் தகவல் பரிமாறப்பட்டதாக தெரிகிறது.
கோபாலகிருஷ்ணன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இந்த புகாரின் அடிப்படையில் அவருடைய கொச்சி வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வரும் கோகுலம் நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நீலாங்கரையில் உள்ள கோபாலகிருஷ்ணனின் இல்லமும் அமலாக்கத்துறை சோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.
கேரளாவில் இருந்து வந்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.
இந்த நிலையில் கோகுலம் நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.






