என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திருவண்ணாமலையில் நாளை மாலை தி.மு.க. வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது.
- நாளை திருவண்ணாமலைக்கு வரும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டலத்தின் New Dravidian Stock, you are welcome!
திருவண்ணாமலையில் நாளை மாலை தி.மு.க. வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
தமிழ்நாட்டின் தலைமகன், நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசும்போது, "I belong to the Dravidian Stock" என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார்.
நாளை திருவண்ணாமலைக்கு வரும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டலத்தின் New Dravidian Stock, you are welcome!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாவரத்தில் 2 மொட்டுக்கள் வந்தது.
- நள்ளிரவு 2 மணியளவில் பிரம்ம கமலம் மலரின் இதழ்கள் சிறிது சிறிதாக சுருங்கி பின்னர் உதிர்ந்தது.
சீர்காழி:
உத்தரகாண்ட் மாநிலத்தின் மாநில மலராகவும், இமயமலைப் பகுதிகளில் மட்டுமே பெரும்பாலும் காணப்படும் அதிசய மலராகவும் பிரம்ம கமலம் மலர் உள்ளது.
பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படும் இந்த மலர், இளவேனில் காலத்தில் இரவுநேரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய மலராகும். இந்த பூ மலர தொடங்கிய நேரத்தில் இருந்து 2 மணி நேரத்துக்கு பிறகே முழுமையாக மலர்ந்திருக்கும். அதேபோல் அதிகாலைக்குள் உதிர்ந்துவிடும் என்றாலும், இந்த பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் வீசும்.
இந்த மலரின் செடி கள்ளிச்செடி வகையை சேர்ந்தது என கூறப்படுகிறது.
உலக வெப்பநிலை மாறுபாட்டால் அழிந்துவரும் இந்த தாவரத்தை காப்பாற்ற உத்தரகாண்ட் மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்த மலர் மலரும்போது அருகிலிருந்து நாம் நினைத்து வேண்டியது வரமாக கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இத்தகைய அதிசய பிரம்ம கமலம் தாவரம் சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மெட்ரிக் பள்ளியில் வளர்க்கப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாவரத்தில் 2 மொட்டுக்கள் வந்தது. இந்தநிலையில் நேற்று இரவு இந்த தாவரத்தில் 2 மலர்கள் பூத்தது. இரவு 11 மணிக்கு மேல் அந்த மொட்டு மலர்ந்து வெண்ணிலவை போல அழகாக காட்சி அளித்தது.
இதுகுறித்து தகவலறிந்த அப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் நள்ளிரவிலும் வந்து பிரம்ம கமலம் மலரை பார்த்து வணங்கி சென்றனர்.
மேலும் அவர்கள் தங்கள் செல்போனில் பிரம்ம கமலம் மலருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதையடுத்து நள்ளிரவு 2 மணியளவில் பிரம்ம கமலம் மலரின் இதழ்கள் சிறிது சிறிதாக சுருங்கி பின்னர் உதிர்ந்தது.
- பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக ஜே.சி.பி. மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
- கட்டிடங்களை இடிக்கும்போது சுவர் சரிந்து விழுந்ததில் சீனப்பா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக ஜே.சி.பி. மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
இதையடுத்து இன்று காலை அந்த கட்டிடங்களை இடிக்கும்போது சுவர் சரிந்து விழுந்ததில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீனப்பா (வயது55) என்பவர் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்த சீனப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை என்றால் முதலமைச்சருக்கு நேரம் போகாது, தூக்கம் வராது.
- தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தி.மு.க.வின் அடிமைகளாக செயல்படுகிறது.
மதுரை:
மதுரையில் நடந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் ஊழல் நடைபெற்றுள்ளது, நகரமைப்பு பிரிவின் ஊழலுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி போராட்டம் நடத்த உள்ளோம். அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்க உள்ளோம். அனுமதி பெற்று குடியிருப்புகள் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் கட்டப்படுகிறது.
மதுரை மாநகராட்சி நிர்வாகம் மிக மோசமாக நடைபெறுகிறது. மக்களின் பிரச்சனைகளை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை, மாநகராட்சிக்கு மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் நியமிக்க வேண்டும். தி.மு.க. தங்கத்தை அள்ளி கொடுத்தாலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
தி.மு.க. அரசு நான்கே முக்கால் வருடத்தில் மதுரை மக்களுக்கு என்ன செய்தது?, அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. திறந்து வைக்கிறது. தி.மு.க. ஆட்சி வந்தவுடன் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 2 மாதங்களில் முடிவடையும் என சொன்னார்கள்.
ஆனால், கனிமொழி எம்.பி.யாக இருப்பதால் தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச தரத்துடன் செயல்பட தொடங்கி உள்ளது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என யார் என்ன பேசினாலும் அடுத்து ஆளப்போவது அ.தி.மு.க. மட்டுமே, அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை என்றால் முதலமைச்சருக்கு நேரம் போகாது, தூக்கம் வராது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தி.மு.க.வின் அடிமைகளாக செயல்படுகிறது. ஆனால் அ.தி.மு.க.வை அடிமை கட்சி என விமர்சனம் செய்கிறது. ஒரு அடிமை தான் இன்னொரு வரை அடிமை என சொல்லுவார்கள். அதனால் தான் தி.மு.க. கூட்டணி கட்சிகள் எங்களை அடிமை என விமர்சனம் செய்கிறது. அரிதாரம் பூசியவனால் ஆட்சி நடத்த முடியுமா? என எம்.ஜி.ஆரை தி.மு.க. விமர்சனம் செய்தது.
ஆனால், தி.மு.க.வை 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல செய்தவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் மறைந்தும் தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். எம்.ஜி.ஆரின் புகழை பாடாதோர் எவருமுண்டா?, முதலமைச்சர் கூட எம்.ஜி.ஆரை பெரியப்பா என கூறினார். முதலமைச்சரின் பெரியப்பாவை கேலி, கிண்டல் செய்யும் தி.மு.க.வினரை முதல்வர் கண்டிக்க வேண்டாமா? என்றார்.
- வரலாற்றில் இல்லாத அளவிற்கு தி.மு.க. அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் சாலை இல்லாத கிராமங்களுக்கு 23 ஆயிரம் கி.மீ. கிராமச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் 2-ம் கட்டமாக விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு அவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபோது கொரோனா தொற்று பரவல் காரணமாக கடும் நெருக்கடி இருந்தது. வருவாய் பற்றாக்குறையாக ரூ.60 ஆயிரம் கோடியை அ.தி.மு.க.வினர் விட்டுச் சென்றனர். அதன் காரணமாகவே மகளிர் உரிமைத்தொகை வழங்க சில மாதங்கள் தாமதமானது. இருந்தபோதும் ஒரு கோடிக்கும் அதிகமான மகளிர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் கூட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு முறையாக வழங்கப்படவில்லை. ஆனால் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றாமல் சொன்னதை சொன்னபடி நிறைவேற்றி வருகிறோம்.
வரலாற்றில் இல்லாத அளவிற்கு தி.மு.க. அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் எந்த திட்டத்தையும் ஒழுங்காக செயல்படுத்தவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதை மக்கள் நம்புவார்கள். ஆனால் பா.ஜ.க. குறைகூறுவதை அவர்கள் ஏற்கமாட்டார்கள். கடந்த 1½ ஆண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டது எந்த ஆட்சியிலாவது நடந்ததுண்டா. ரூ.2 ஆயிரம் கோடி செலவில் ஒருலட்சம் வீடுகள் பழுது நீக்கம் மற்றும் 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் சாலை இல்லாத கிராமங்களுக்கு 23 ஆயிரம் கி.மீ. கிராமச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வன்னியர் இட ஒதுக்கீடு1989-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் தீர்மானமாக வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தற்போது வன்னியர்கள் 10.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு வருகின்றனர். ஆனால் 20 சதவீத இடஒதுக்கீட்டில் 13 சதவீதம் பேர் பயன் அடைந்து வருகின்றனர். என்னிடம் புள்ளி விவரம் உள்ளது. இதில் தென்மாவட்டங்களில் முக்குலத்தோர், பிரமலைக்கள்ளர், மறவர் என 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் உள்ளனர். அவர்களுக்கு பெரிய அளவில் ஒதுக்கீடு போவதில்லை.
வன்னியர் சமுதாயத்திற்கே கேட்கும் அளவை விட கூடுதலாக இருக்கிறது. கேட்பது அவர்களின் உரிமை. தனியாக பிரித்து வன்னியர்களுக்கு என கேட்கின்றனர். பொதுவாகத்தான் அரசு முடிவு எடுக்க முடியும். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கொடுத்த இடஒதுக்கீட்டில் கன்னியாகுமரி கிறிஸ்தவர்கள் இடஒதுக்கீடு வேண்டாம் என பாதிரியாளர்கள் முதலமைச்சரிடம் கேட்டார்கள். அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். 69 சதவீத இடஒதுக்கீட்டில் அனைத்து சமுதாயத்திற்கும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் முடிவு செய்வார்.
பா.ஜ.க.விற்கு இருக்கும் ஆயுதம் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவை. வழக்கு போட்டு ஜனநாயக நாட்டில் ஒரு அரசை முடக்கலாம் என்று நினைத்தால் நடக்காது. எத்தனை வழக்கு போட்டாலும் நீதிமன்றத்தில் நிற்காது. பா.ஜ.க.விடம் உள்ள ஆயுதங்கள் பழுதடைந்தவை. ஆனால் எங்களின் ஆயுதம் வலிமையானவை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 15-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 15-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- மாணவிக்கு அதே பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் ஒரு மாணவிக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் பரவியதால் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பெருமாள் அந்த பள்ளியில் விசாரணை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து உறுதி செய்ய தொடர் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
- சுமார் நாற்பதாண்டுகளாக, தமிழக அரசியலில் முக்கியமான இடம் பெற்றவர்.
- அரசியல் வியூகங்களில் சிறந்தவராகத் திகழ்பவர்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், அன்பு அண்ணன் டி.டி.வி.தினகரன் அவர்களுக்கு, இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுமார் நாற்பதாண்டுகளாக, தமிழக அரசியலில் முக்கியமான இடம் பெற்றவர். மக்கள் பணிகளில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். அரசியல் வியூகங்களில் சிறந்தவராகத் திகழ்பவர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அவரது வலதுகரமாகத் திகழ்ந்தவர்.
அண்ணன் டி.டி.வி. தினகரன் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து தனது அரசியல் பணிகளிலும், சமூகப் பணிகளிலும் சிறந்து விளங்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- பாரதியை எங்கு வேண்டுமானாலும் பேசுவேன்.
- பாரதி என்றால் தமிழ். தமிழ் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 'விஜில்' என்ற பிரிவு நடத்திய விழாவில், பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழா, நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'பாரதி கண்ட வந்தே மாதரம்' எனும் தலைப்பில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், நான் பாரதியின் கொள்கை வாரிசு. பாரதியை நிராகரிக்கும் இடத்தில், என் தமிழ் நிராகரிக்கப்படுகிறது. பாரதியின் புகழைப் பாட, பாகிஸ்தானுக்கு வேண்டுமானாலும் செல்வேன் என்று கூறினார்.
இந்நிலையில் RSS நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பாரதியை எங்கு வேண்டுமானாலும் பேசுவேன்.
* பாரதி என்றால் தமிழ். தமிழ் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன்.
* எங்கு பேசினேன் என பார்க்காதே, என்ன பேசினேன் என பாருங்கள்.
* பா.ஜ.க. தலைவர்களை தி.மு.க.வினர் புகழ்ந்து பேசியதை சுட்டிக்காட்டி அவர் பதில் அளித்தார்.
- பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.
- 1.30 லட்சம் இளைஞர் அணியின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
தி.மு.க.வில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலையொட்டி பல்வேறு அணிகளின் செயல்பாடுகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தி.மு.க. இளைஞர் அணியில் தமிழகம் முழுவதும் 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறப்பினர்கள் உள்ளனர்.
இதில் உள்ள 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடத்த தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு திருவண்ணாமலையில் நாளை நடைபெறுகிறது.
இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞர் அணியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசுகிறார்.
இதற்காக திருவண்ணாமலை அருகே உள்ள வாணியந்தாங்கள் பகுதியில் பிரமாண்ட மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கலைஞர் திடல் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கலைஞர் திடலில் நாளை மாலை 4 மணிக்கு தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு தொடங்குகிறது.
நிகழ்ச்சிக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கின்றனர். இதில் 1.30 லட்சம் இளைஞர் அணியின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர் அணி நிர்வாகிகள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வருகையையொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. பிரமாண்ட வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலையில் நாளை நடைபெற உள்ள தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டுக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்க அனைவரும் அணி திரண்டு வாருங்கள் என அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- வழிபாடு செய்யும் தெய்வத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது.
- தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் என் சொந்தம்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முருகன் சைவக் கடவுளா, இந்து கடவுளா. முருகன் என் ரத்தம், என் இன கடவுள்.
சிவனும் முருகனும் இந்து கடவுளா என என்னுடன் விவாரம் செய்யத் தயாரா?
அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சனை தற்போது தீர்ந்துவிட்டதால் தமிழ்நாட்டில் முருகனை வைத்து அரசியல் செய்கின்றனர்.
முருகனை கும்பிட வேண்டாம் என யாராவது உங்களை எதிர்த்தார்களா? எதை வைத்து அரசியல் செய்வது என தெரிய வேண்டாமா?
வழிபாடு செய்யும் தெய்வத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்றும் விவகாரத்தை வைத்து திட்டமிட்டு பிரச்சனை உருவாக்குகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் என் சொந்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான்!
- தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை!
* பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் GSDP வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல்.
* கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான்! சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி!
* 2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்! மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி!
* நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம் – தமிழ்நாட்டுக்கே சொந்தம்!
* தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி!
* 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்! இது உறுதி! என்று கூறியுள்ளார்.






