என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கண்டெய்னர் லாரியும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
    • இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி 4 வழிச்சாலையில் கண்டெய்னர் லாரியும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய மூவரின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    விபத்து குறித்து அருப்புக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மிரட்டலை அடுத்து, ஆளுநர் மாளிகை வளாகத்தில் போலீசார் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இதனால் இந்த மிரட்டல் புரளி என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    • முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளித்தது.
    • சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளித்தது.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் 23-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர்.

    இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இம்மனுக்கள் மீதான விசாரணையின்போது இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    இதை தொடர்ந்து, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணை நடைபெற்றது.

    விசாரணை நிறைவு பெற்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளித்தது.

    இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஜாமினில் வெளியே வந்தனர்.

    • தொலைதூர மலைப்பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
    • தருமபுரி மன்னூர் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும், இதற்காக 7 தலைமையாசிரியர்.

    7 பழங்குடியின உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், 1 பழங்குடியின உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தி ரூ.38.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தொலைதூர மலைப் பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு குறிப்பாக பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கத்தோடு மாணவர்கள் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே உயர்கல்வியை தொடர்ந்து பயின்றிட அரசு தொடர்முயற்சிகளை எடுத்து வருகிறது.

    அந்த வகையில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் கல்வராயன் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தனி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உள்ளிட்ட இடங்களிலுள்ள தொலைதூர மலைப்பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.

    2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட பழங்குடியினர் நல இயக்குநரின் கடிதத்தில், மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்துதல் தொடர்பாக விரிவான கருத்துருவினை அனுப்பியிருந்தார்.

    -அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரை பயின்று 11-ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணாக்கர் தங்களது இருப்பிடத்திற்கு அருகே மேல்நிலைக் கல்வி பயிலவும், இடைநிற்றலைக் குறைத்து, உயர்கல்வி சேர்க்கை வீதத்தினை அதிகரித்திடும் பொருட்டும்.

    அருகாமையில் உள்ள பின்வரும் 7 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், தருமபுரி மன்னூர் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகவும், இதற்காக 7 தலைமையாசிரியர்.

    63 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் 7 கணினி பயிற்றுநர் உள்ளிட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களைத் தோற்றுவித்தும் இதற்கான மொத்த செலவினம் ரூ.38,98,61486/- (ரூபாய் முப்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று எட்டு இலட்சத்து அறுபத்தோராயிரத்து நானூற்று எண்பத்தாறு) மதிப்பிலான செலவினத்தில், கட்டுமானப் பணிகளை தாட்கோ மூலம் செயல்படுத்தவும். அதற்கான நிதி ஒதுக்கீடு வழங்குமாறு கோரியிருந்தார்.

    வ.எண்.1 முதல் 7 வரை உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் / வ.எண். 8 - நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துதல்,

    3. பழங்குடியினர் நல இயக்குநரின் கருத்துரு அரசால் கவனமுடன் ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் மேலே பத்தி 2ல் அட்டவணையில் உள்ள 7 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், தருமபுரி மாவட்டம் மன்னூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும் நிலை உயர்த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 31.07.2025 அன்று மாணாக்கர் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
    • ஆகஸ்டு 20 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட். முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 21.07.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-

    20.06.2025 அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26ஆம் ஆண்டிற்கான பி.எட். மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதால் மாணாக்கர்கள் நலன் கருதி 21.07.2025 வரை நீட்டிக்கப்படும்.

    அதன் விவரம் பின்வருமாறு:-

    அரசு கல்வியியல் மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரி (பி.எட்.) மாணாக்கர் சேர்க்கை

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 20.06.2025 முதல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இன்றுடன் கால அவகாசம் முடிவடைவதால் மாணாக்கர்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் தேதி 21.07.2025 வரை நீட்டிக்கப்படுகிறது. 31.07.2025 அன்று மாணாக்கர் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 04.08.2025 முதல் 09.08.2025-க்குள் மாணாக்கர்கள் தங்கள் விருப்ப கல்லூரியைத் தேர்வு செய்யலாம். 13.08.2025 அன்று மாணாக்கர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். மாணாக்கர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு ID மூலம் www.iwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம்.

    ஆகஸ்டு 20 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட். முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்.

    மாணாக்கர்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    • மக்களின் அளவற்ற அன்பும், பேராதரவும் என்னை, அவர்களில் ஒருவனாகவே எண்ணச் செய்தது!
    • பலதரப்பட்ட மக்கள் பல வகைகளிலும் படும் கஷ்டங்களை நேரில் சந்தித்தபொழுது எனது நெஞ்சம் கலங்கியது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் கோவையில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்தபோது ஏற்பட்ட மறக்க முடியாத தருணங்களில் ஒருசில 'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்கிற உயரிய லட்சியத்துடன் எனது எழுச்சிப் பயணத்தை கோவையில் 7.7.2025 அன்று துவங்கினேன்.

    மக்களின் அளவற்ற அன்பும், பேராதரவும் என்னை, அவர்களில் ஒருவனாகவே எண்ணச் செய்தது! ஆனால், மக்கள் என்னிடம் சொல்லிய விஷயங்கள், கவலைகள், வேதனைகள், அவர்கள் படும் அல்லல்கள், சோகங்கள் சொல்லொண்ணாதவை!

    ஸ்டாலின் மாடல் அரசின் அக்கிரமங்களினாலும், அட்டூழியங்களினாலும், செயலற்ற தன்மையாலும் நம் மக்கள், எதிர்பார்த்ததைவிட அதிகமாக பாதிக்கப்பட்டிருகின்றார்கள் என்பதை நான் பார்த்து மனம் நொந்தேன்!

    திரு. ஸ்டாலின் அவர்களே! உங்களின் காட்டாட்சியும், கொடுங்கோல் ஆட்சி பற்றியும் எனக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், விவசாயிகள், நெசவாளர்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், செங்கல் சூளை உற்பத்தியாளர்கள், நகைத் தொழில் செய்பவர்கள், சிறு, குறு தொழில் நிறுவனத்தினர், பஞ்சாலை உரிமையாளர்கள் என்று எண்ணற்றோரை எனது எழுச்சிப் பயணத்தில் சந்தித்தேன்.

    பலதரப்பட்ட மக்கள் பல வகைகளிலும் படும் கஷ்டங்களை நேரில் சந்தித்தபொழுது எனது நெஞ்சம் கலங்கியது. மன வேதனை அடைந்தேன்.

    மின் கட்டண உயர்வால் பொதுமக்களும், மின் நிலைக் கட்டண உயர்வால் தொழில் நிறுவனத்தினரும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

    வரி உயர்வாலும், விளைச்சலுக்கு சரியான விலை இல்லாமலும், வரிச் சுமையாலும் சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டாலும், நிர்வாகச் சீர்கேட்டாலும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் ஆளும் உங்கள் அரசின் மீது கடுங்கோபத்தில் இருக்கின்றனர்.

    இவற்றையெல்லாம் என்னிடம் சொல்லி, இதற்கெல்லாம் முடிவாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான் வரவேண்டும் என்று எனது கரங்களைப் பிடித்துக் கவலைகளை தெரிவித்தனர்!

    உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் ஸ்டாலின் அவர்களே! தமிழகத்தில் இப்போது இருக்கும் இருண்ட காலத்தை மாற்றி, இழந்த பொற்காலத்தை நான் மீட்டுத் தருவேன் என்று உறுதி அளித்திருக்கிறேன்.

    திமுக-வின் விடியாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழ் நாட்டுக்கு விரைவில் விடிவுகாலம் வரவேண்டும் என்கின்ற மக்களின் கூக்குரலை நானறிவேன்; ஏன் இந்த நாடே அறியும்!

    மு.க. ஸ்டாலின் அவர்களே, உங்கள் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த 50 மாதங்களில், தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? கிட்டத்தட்ட ரூ. 4 லட்சம் கோடி கடனை அவர்கள் தலையில் சுமத்தியதுதான்.

    திமுக ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைத் தருவோம் எனச் சொன்னீர்களே… செய்தீர்களா?

    அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3.50 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும், மேலும் 2 லட்சம் பணியிடங்கள் என்று மொத்தம் 5.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள்.

    அரசுத் துறைகளில் கடந்த 50 மாத காலத்தில் உங்களின் விடியா அரசு உருவாக்கிய வேலைவாய்ப்புகள் வெறும் ஐம்பதாயிரத்தைக் கூட தாண்டவில்லை என்பதுதானே உண்மை. (அதுவும் கடந்த 4 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களின் காலிப் பணியிடங்களே 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது). எத்தனை நாளைக்குத்தான் இந்த உண்மையை மறைப்பீர்கள்.

    அரசாங்க ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவருவேன் எனச் சொன்னீர்களே? கொண்டுவந்தீர்களா?

    பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக உரிய தேதியில் சம்பளம் தரவில்லையே.

    சில கல்விக் கூடங்களில் அரங்கேறிய பாலியல் வன்முறைகளை நினைத்து மக்கள் மன வேதனையில் இருக்கிறார்களே....

    ஒடுக்கப்பட்டோரும், பாட்டாளி வர்க்கமும் உங்கள் ஆட்சியில் மகிழ்ச்சியாய் இல்லை.

    முதியோர் கொலைகள், திட்டமிட்ட தொடர்ச்சியாக அரங்கேறிக்கொண்டே இருக்கின்றதே.

    இதுபற்றியெல்லாம், உங்களையும், உங்கள் ஆட்சியையும் நோக்கி சாமானிய மக்கள் தினமும் கேள்வி எழுப்புவதும், உங்களிடம் பதில் இல்லாததை நினைத்து உங்களுக்கு

    ஜூரம் வந்துவிட்டதா ஸ்டாலின் அவர்களே!

    சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரைக்கும் யாருக்குமே பாதுகாப்பில்லை. நாளுக்குநாள் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்; மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும் போதைப் பொருள் புழக்கம்; கள்ளச் சாராய மரணங்கள்; 25-க்கும் அதிகமான காவல் நிலைய மரணங்கள்; கனிம வளக் கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர்கள் விபத்தில் மரணிப்பது; கல்குவாரிகளை திமுக-வினர்களே விதிகளை மீறி ஏலத்தில் எடுத்து சுரண்டுவது; வேங்கைவயலில் பாதிக்கப்பட்டவர் மீதே குற்றம்சாட்டியது; போலீஸ் விசாரணயில் உயிரிழந்தவரின் தாயாரிடம் கைபேசி மூலம் பேசும்போது, பொறுப்பற்றத்தனமாக ளுடீசுசுலு எனச் சொல்லி பொறுப்பைத் தட்டிக் கழித்தது என்று, தமிழக மக்கள் உங்கள் மீதும், உங்கள் ஆட்சியின் மீதும் வஞ்சினம் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்து தான் உங்களுக்கு ஜூரம் வந்துவிட்டதா ஸ்டாலின் அவர்களே...!

    வெற்று விளம்பரங்கள் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஆரம்பிக்கபபட்ட திட்டங்களுக்கு புகைப்படம் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்பவர் யார் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்துவிட்டது; புரிந்துவிட்டது. அதைத் தான் எனது இந்த எழுச்சிப் பயணத்தில் மக்கள் என்னிடம் கோரிக்கையாக வைத்தார்கள்.

    நீங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்போது இதை உணர்வீர்கள். மக்கள் கோபத்தை நேரில் எதிர்கொள்ள இயலாமல் பரிதவிப்பதை யாராலும் மாற்ற முடியாது. வாக்கு செலுத்தி உங்களை முதலமைச்சராக்கிய மக்களின் கேள்விக்கு உங்கள் பதில்தான் என்ன? அந்த பதில் தெரியாமல் தான் உங்களுக்கு ஜூரம் வந்துவிட்டது போலும்!

    2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.

    அனைத்துத் தரப்பு மக்களின் பேராதரவுடன் மீண்டும் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதற்கு, கடந்த இரண்டு நாட்கள் நான் சென்ற பிரச்சார சுற்றுப் பயணத்தின்போது

    திரண்டு வந்த மக்களின் எழுச்சியும், அவர்கள் கொடுத்திட்ட பேராதரவுமே சாட்சி!

    மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்! விடியா ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஜெயலலிதா தம்பி என்று அழைக்கும் அளவிற்கு அரசியல் செய்தவன் நான்.
    • அதிமுக எடுத்த கூட்டணி முடிவில் அவர்களுக்கே சந்தேகம் உள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியபோது என்னை வாழ்த்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

    ஜெயலலிதாவின் தம்பியாக நான் அரசியல் செய்தவன் என்பது அதிமுகவினருக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை.

    ஜெயலலிதா தம்பி என்று அழைக்கும் அளவிற்கு அரசியல் செய்தவன் நான்.

    திராவிட இயக்கமாக நாம் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிற அதிமுக பா.ஜ.க.வால் பாதிக்கப்பட்டு விட கூடாது. பாஜக காலூன்றிய இடங்களில் எல்லாம் என்ன நடந்தது என்பதை பார்த்திருக்கிறோம்.

    அதிமுக தனது செல்வாக்கை இழந்து விட கூடாது என்பதை தோழமையுடன் சுட்டி காட்டுகிறேன்.

    பாஜகவால் அதிமுகவிற்கு ஏற்படும் பாதிப்பை அறியாமல் இருக்கிறார் இபிஎஸ்.

    அதிமுக தோழமை கட்சி என கருதுவதால்தான் கூட்டணி குறித்து விமர்சிக்கிறோம்.

    அதிமுக எடுத்த கூட்டணி முடிவில் அவர்களுக்கே சந்தேகம் உள்ளது.

    திமுகவுக்கு எதிராக அணி திரள்பவர்கள் கூட்டணி ஆட்சி முழுக்கத்தை வைத்துள்ளனர்.

    சாதி ஒழிய வேண்டும் என்பது நோக்கம், தற்போதைக்கு அது முழுமையாக சாத்தியமில்லை.

    இந்து சமய அறவிலையத்துறை கல்லூரிகள் கட்டுவது நல்ல பணிதான்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை சிவானந்தா சாலையில் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தனர்.
    • தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற இருக்கிறது.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார்.

    இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும், கொலை வழக்கை உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் த.வெ.க. சார்பில் கடந்த 6-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி த.வெ.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    மனுவை விசாரித்த நீதிமன்றம் த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போலீசார் சென்னை சிவானந்தா சாலையில் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தனர்.

    இதையடுத்து காவலாளி அஜித்குமார் கொலைக்கு நீதி விசாரணை கேட்டு பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் த.வெ.க. சார்பில் சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 13-ந்தேதி காலை நடைபெற இருக்கிறது.

    இந்த போராட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டப்பயன்படுத்துகிறார்கள்.
    • ஏன் அரசு பணத்தில் இருந்து கல்லூரி கட்ட வேண்டியது தானே.

    கோவையில் நடைபெற்ற 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பயணத்தின்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

    கோவிலை கண்டாலே தி.மு.க.வுக்கு கண்ணு உறுத்துகிறது. அதிலிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். இது எப்படி நியாயம், தெய்வபக்தி படைத்த நீங்கள் எதற்காக கோவில் உண்டியலில் பணத்தை போடுகிறீர்கள், கோவிலை மேம்படுத்த தானே, ஆனால் அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டப்பயன்படுத்துகிறார்கள். ஏன் அரசு பணத்தில் இருந்து கல்லூரி கட்ட வேண்டியது தானே. அ.தி.மு.க. ஆட்சியில் அப்படித்தானே செய்தோம். இதை மக்கள் ஒரு சதிச்செயலாகத்தான் பார்க்கிறார்கள் என்று பேசி இருந்தார்.

    இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி முன்பு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.

    கோவில் வருமானத்தில் தி.மு.க. அரசு கல்லூரிகளைக் கட்டுவது நியாயமா என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

    • இன்று காலை யாரும் பணியில் ஈடுபடாததால் அதிர்ஷ்டவசமாக விவசாயிகள் உயிர் தப்பினர்.
    • காற்றாலை எந்திரங்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சீலநாயக்கன்பட்டி செரியன்காடு தோட்டம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான காற்றாலை எந்திரங்கள் நிறுவப்பட்டு மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இன்று காலை காற்றின் வேகம் காரணமாக காற்றாலையில் அமைக்கப்பட்டு இருந்த காற்றாடி எந்திரம் உடைந்து விழுந்தது. மேலும் 6 துண்டுகளாக சிதறியது. காற்றாலை அமைந்துள்ள பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளது. இன்று காலை யாரும் பணியில் ஈடுபடாததால் அதிர்ஷ்டவசமாக விவசாயிகள் உயிர் தப்பினர்.

    சேதமடைந்த காற்றாலை எந்திரத்தின் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும். காற்றாலை எந்திரம் அருகே உள்ள மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி கிராமமக்கள் அவதிக்கு உள்ளாகினர். எனவே காற்றாலை எந்திரங்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருமணம் முடிந்த பிறகும் அஜித் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
    • தாய் சத்தம் போட்டதால் மனமுடைந்த அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் மாரியம்மன் குரும்பன்தெருவை சேர்ந்தவர் அரசன் மகன் அஜித் (வயது26). கூலித்தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வந்து விட்டார்.

    அதன்பிறகு ராஜபாளையத்தை சேர்ந்த சினேகா என்பவரை கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்தார். திருமணம் முடிந்த பிறகும் அஜித் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    இதனை அவரது தாய் விக்டோரியா கண்டித்தார். மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினர் முன்பு தனது தாய் சத்தம் போட்டதால் மனமுடைந்த அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் விக்டோரியா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் முடிந்து 40வது நாளில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
    • போக்குவரத்து போலீசார் நிற்காமல் சென்ற வாகனத்தை கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்டுபிடித்தனர்.

    சென்னை:

    சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள நெடுஞ்சாலை இன்று காலை பரபரப்பாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.

    அப்போது சென்ட்ரல் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். கமிஷனர் அலுவலகம் அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தை தாண்டி பெண் சென்றபோது பின்னால் வந்த சரக்கு வாகனம் மின்னல் வேகத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த போலீசார் உடனடியாக ஓடி சென்று பார்த்தனர். அதற்குள் சரக்கு வாகனம் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் விபத்தில் பலியான பெண் அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் ஸ்ரீதேவி. 42 வயதான இவர் புதுப்பேட்டை ஷேஷாத்திரி தெருவை சேர்ந்தவர் ஆவார். புரசைவாக்கம் பகுதிக்கு சென்று விட்டு புதுப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றபோது தான் இவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் நிற்காமல் சென்ற வாகனத்தை கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்டுபிடித்தனர்.

    அதன் பிறகே விபத்தை ஏற்படுத்தியது சரக்கு வாகனம் என்பது தெரிய வந்தது. விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது தொடர்பாக டிரைவரிடம் விசாரணை நடத்திய போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    ×