என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சோளிபாளையம் மீனாநகர் அருகே ஒரு இடத்தில் 2 பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
- சோளிபாளையம் மீனாநகர் அருகே ஒரு இடத்தில் 2 பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சோளிபாளையம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசார கூட்டம் நடந்த இடத்தில் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி பல்வேறு கோஷங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. சோளிபாளையம் மீனாநகர் அருகே ஒரு இடத்தில் 2 பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
அதில் ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி 2 கைகளையும் சேர்த்து வணக்கம் கூறும் படமும், இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஒரு கையை பேண்ட் பாக்கெட்டில் வைத்து இன்னொரு கையை 'ஹாய்' என காட்டும் படமும் அச்சிடப்பட்டு இருந்தது.
2 பேனர்களிலும் விஜய் ரசிகர்கள்-தமிழக வெற்றி கழகம் மொடக்குறிச்சி தொகுதி என குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், பிளக்ஸ் வைக்கப்பட்டு இருந்த தகவல் அறிந்து அங்கு வந்த தமிழக வெற்றிக்கழகம் கட்சி நிர்வாகிகளிடம் பேனர் குறித்து கேட்டபோது, நாங்கள் வைக்கவில்லை என்று கூறினார்கள். இதேபோல் கூட்டத்திலும் சிலர் த.வெ.க. கொடிகளை கைகளில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.
- ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இந்த நீர்வரத்து நேற்று இரவு 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியில் இருந்து 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.
- 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பச்சை பொய் கூறுகிறார்.
- விலையேற்றத்தை கட்டுப்படுத்த திறமையில்லாத அரசு தி.மு.க. அரசு.
ஈரோடு:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி 5-வது கட்ட தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கி உள்ள அவர் நேற்று ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி மற்றும் வில்லசரம்பட்டியில் பிரசாரம் செய்தார்.
மொடக்குறிச்சி தொகுதிக்கான கூட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள சோளிபாளையம் பகுதியில் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி முன்னிலை வகித்தார்.
திரண்டிருந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசார பஸ்சில் நின்றவாறு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5-ம் ஆண்டு நடந்து வருகிறது. இந்த 4 ஆண்டுகளில் மொடக்குறிச்சி தொகுதியில் ஏதாவது திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதா? எதுவும் இல்லை. கடந்த தேர்தலின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 520 அறிவிப்புகள் அறிவித்தது. அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால் முதலமைச்சர் திட்டமிட்டு பொய்யை பரப்பி வருகிறார்.
98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பச்சை பொய் கூறுகிறார். தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றார். உயர்த்தினார்களா?. 100 நாள் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்றார்கள். உயர்த்தினார்களா?. அதுவும் இல்லை. ஏற்கனவே பணி செய்த நாட்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க முடியாத அவல நிலை இன்றைய தினம் தொடர்கிறது.
ஆனால், இந்த பணியாளர்களுக்காக அ.தி.மு.க. மத்திய அரசில் சம்பந்தப்பட்ட மந்திரியிடம் எடுத்துக்கூறி சம்பளம் முழுமையாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் பேரில் முதல்கட்டமாக ரூ.2 ஆயிரத்து 999 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உணவு பொருட்களின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அரிசி விலை உயர்ந்து விட்டது.
தமிழகத்தில் 65 சதவீதம் பேர் சாதாரண ஏழை மக்கள். விலை உயர்வால் இவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
பச்சரிசி கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.77 ஆக உயர்ந்துள்ளது. பொன்னி அரிசி ரூ.50-ல் இருந்து ரூ.72 ஆக உயர்ந்துள்ளது. இட்லி புழுங்கல் அரிசி ரூ.30 என்பது ரூ.48-க்கு உயர்ந்துள்ளது.
கடலை எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.130-ல் இருந்து ரூ.190 ஆகவும், நல்லெண்ணெய் ரூ.250-ல் இருந்து ரூ.400-க்கும், துவரம் பருப்பு ரூ.74-ல் இருந்து ரூ.130-க்கும், உளுந்தம்பருப்பு ரூ.79-ல் இருந்து ரூ.120-க்கும் உயர்ந்துள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வை தடுக்க கட்டுப்பாட்டு நிதி என்ற பெயரில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து கூட்டுறவுத்துறை மூலம் பொருட்கள் வாங்கி மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கினோம்.
எனவே விலையேற்றத்தை தடுத்து நிறுத்தியது அ.தி.மு.க. அரசு. விலையேற்றத்தை கட்டுப்படுத்த திறமையில்லாத அரசு தி.மு.க. அரசு. ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் செய்யும் அரசு. விடியா தி.மு.க. அரசு.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை தடையின்றி நடந்து கொண்டு இருக்கிறது. மாணவர்கள், பொதுமக்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சீரழிவுக்கு தி.மு.க. அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். திறமையற்ற முதலமைச்சர், பொம்மை முதலமைச்சர். என்ன செய்வதென்றே அறியாமல் ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டிலேயே கஞ்சா விற்பனை குறித்து எச்சரித்தோம். பிரதான எதிர்க்கட்சி சொல்வதை கேட்டு நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி இருக்கலாம்.
அதை கேட்காததால் இன்று இந்தியாவிலேயே அதிகமாக போதைப்பொருட்கள் நடமாடும் மாநிலமாக தமிழகம் உருவாகிவிட்டது.
எல்லா துறைகளிலும் ஊழல். ஊழல் இல்லாத துறைகளே இல்லை. தி.மு.க. என்றால் ஊழல். ஊழல் என்றால் தி.மு.க. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்ட வரலாறு கிடையாது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. அரசு.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. பாட்டிலுக்கு ரூ.10 என்றால் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 500 கோடி. 4 ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இதை மறுக்க முடியுமா?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறுகளை பரப்புகிறார். நீங்கள் எங்கள் அ.தி.மு.க. ஆட்சி குறித்து பேசுங்கள் பதில் சொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமுமில்லை. ஆனால், மு.க.ஸ்டாலிலுக்கு பயம் வந்துவிட்டது. எப்போது பா.ஜ.க. கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததோ அப்போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது.
இது எங்கள் கட்சி. நாங்கள் யாருடனும் கூட்டணி வைப்போம். நீங்கள் ஏன் பதறுகிறீர்கள். உங்களுக்கு ஏன் கவலை. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். தி.மு.க. கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதாக கூறுகிறார்கள். இருந்துவிட்டு போகட்டும். ஓட்டுபோடுவது கூட்டணி அல்ல. மக்கள் தான். மக்கள் தான் நீதிபதி. மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் தான் ஆட்சிக்கு வரமுடியும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் குடிமராமத்து திட்டம் நிறைவேற்றப்படும். விவசாயிகளுக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். ஏழை பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
அருந்ததியர், பட்டியலினத்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். நெசவாளர்களுக்கு இலவச வீடு கட்டித்தரப்படும். கட்சிக்கு உழைக்கிறவர்கள் உயர்பதவிக்கு வரக்கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க. ஆனால் தி.மு.க. குடும்ப கட்சி. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லரசம்பட்டியில் பிரசாரம் செய்தார்.
- புரோ கபடி லீக் ஆட்டங்கள் இந்தியாவில் நடந்து வருகிறது.
- புள்ளிப்பட்டியலில் தபாங் டெல்லி அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
சென்னை:
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மூன்றாவது கட்டமாக சென்னையில் நடைபெற்றது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்றிரவு நடந்த 75-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான தபாங் டெல்லி, குஜராத் ஜெயண்ட்சை எதிர்கொண்டது.
திரில்லிங்கான இந்த மோதலில் டெல்லி அணி 39-33 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, 12-வது வெற்றியை ருசித்தது. அத்துடன், நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இத்துடன் சென்னையில் லீக் சுற்று முடிவுக்கு வந்தன. அடுத்தகட்ட ஆட்டங்கள் டெல்லியில் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில், பிளே-ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடக்கும் இடத்தை புரோ கபடி லீக் நிர்வாகம் நேற்று அறிவித்தது.
இதன்படி வரும் 25-ம் தேதி தொடங்கும் பிளே-ஆப் சுற்று மற்றும் 31-ம் தேதி அரங்கேறும் இறுதிப்போட்டி டெல்லியில் நடக்கிறது.
- புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை தபாங் டெல்லி அணி வீழ்த்தியது.
சென்னை:
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 39-33 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
மற்றொரு போட்டியில் யு மும்பா அணி அதிரடியாக ஆடி 48-29 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.
- இத்தனை ஆம்பளைங்க நிற்கிறீங்க... யாராவது போய் தடுங்க... என்று ஒரு பெண் கதறும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
- பொதுமக்களில் யாராவது ஒருவர் துணிச்சலுடன் சென்று பாரதியை தடுத்து இருந்தால் பரிதாபமாக ஒரு உயிர் போய் இருக்காது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதி(வயது27). பெயிண்டர். இவருடைய மனைவி சுவேதா(26). தனியார் கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பாரதியும், சுவேதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கிரேஷ்(9), கேப்ரியல்(7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். 2 குழந்தைகளுடன் அழகாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சந்தேக புயல் அடிக்க தொடங்கியது.
சுவேதாவின் நடத்தையில் பாரதிக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதையடுத்து சுவேதா, ஏ.பி.டி. ரோட்டில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை தனது குழந்தைகளை அருகே உள்ள பள்ளியில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து வேலைக்கு புறப்பட்டார்.
பழனியப்பன் வீதியில் சுவேதா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த பாரதி அவரை வழிமறித்து, தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். அதற்கு சுவேதா மறுக்கவே அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
சுவேதா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் பாரதி விடாமல் பின்தொடர்ந்து சென்று பாரதியுடன் நடுரோட்டில் அவருடன் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த பாரதி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவை குத்த முயன்றார். இதனால் அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு அவரை காப்பாற்ற முயன்றனர்.
அப்போது பாரதி அருகே வந்தால் கத்தியால் குத்தி விடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன மக்கள் யாரும் அருகே செல்லாமல் உடனடியாக பொள்ளாச்சி கிழக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் ஆத்திரத்தில் இருந்த பாரதி தான் கையில் வைத்திருந்த கத்தியால் சுவேதாவின் வயிறு உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் வலி தாங்க முடியாத சுவேதா ரத்த வெள்ளத்தில் சரிந்து, அப்படியே நடுரோட்டில் விழுந்து உயிருக்கு போராடினார். ஆனாலும் ஆத்திரம் தீராத பாரதி, சுவேதாவை தரதரவென இழுத்து அருகே உள்ள சாக்கடை கால்வாய்க்குள் தள்ளி கழுத்தை நெரித்தார். இதில் சிறிது நேரத்தில் சுவேதா உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடலை எடுத்து சாலையில் போட்டு விட்டு அதன் முன்பு அமர்ந்திருந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார் பாரதியை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை கொலை செய்ததாக பாரதி கூறினார். போலீசார் சுவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக பாரதியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இதற்கிடையே பாரதி நடுரோட்டில் சுவேதாவை குத்தி கொலை செய்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பார்ப்போருக்கு அதிர்ச்சியையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், கத்தியால் குத்தப்பட்ட சுவேதா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். அப்போது ஆத்திரம் தீராத பாரதி சுவேதாவை தர, தரவென இழுத்து அருகே உள்ள சாக்கடை கால்வாய்க்குள் தள்ளினார்.
சாக்கடை கால்வாய்க்குள் தள்ளி விட்டு, அவரது கழுத்தில், கால் மற்றும் கையை வைத்து நெரித்தபடி சாவு.. சாவு... என்று சொல்லியபடியே கொடூரமாக கொலை செய்தார். இதில் சுவேதா துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து போகிறார். சுவேதா இறந்ததை உறுதி செய்த பாரதி, நீ செத்தியா, செத்தியா என சத்தம் போட்டபடி, அவரது உடலை சாக்கடை கால்வாயில் இருந்து தூக்கி வெளியில் போட்டு விட்டு, அதன் முன்பு அமர்ந்து அவரது உடலை பார்த்தபடி இருக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
மேலும் இத்தனை ஆம்பளைங்க நிற்கிறீங்க... யாராவது போய் தடுங்க... என்று ஒரு பெண் கதறும் காட்சிகளும் பதிவாகி உள்ளது. பொதுமக்களில் யாராவது ஒருவர் துணிச்சலுடன் சென்று பாரதியை தடுத்து இருந்தால் பரிதாபமாக ஒரு உயிர் போய் இருக்காது. தற்போது தாயை இழந்து அவரது 2 குழந்தைகள் தவிக்கின்றன.
- உச்சநீதிமன்றத்தில் இரண்டு முறையீடு வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக உத்தரவு.
- ஒரே நாளில் டெல்லி முதல் மதுரை வரை திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன.
1) திமுக எம்எல்ஏ-வுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய சிறுநீரக திருட்டு குறித்து விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்த தமிழக அரசு ஏற்றுள்ளது, ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவில் உள்ள அதிகாரிகளை அரசு பரிந்துரைக்கும் என்ற நிபந்தனையை விதித்தது.
எவ்வளவு வெட்கக்கேடானது!
2) பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு ஏன் அஞ்சுகிறது?
3) விஜயின் கரூர் பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தமிழக அரசின் மீது உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதை எவ்வாறு விசாரித்தது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
4) திருப்பரங்குன்றம் வழக்கில் பின்பற்றப்பட வேண்டிய பழக்கவழக்கங்களில் பிளவுபட்ட தீர்ப்புக்குப் பிறகு, 3வது நீதிபதியான நீதிபதி விஜய் குமார், நீதிபதி ஸ்ரீமதியின் கருத்துக்களுடன் உடன்பட்டு, சிக்கந்தர் தர்காவில் விலங்குகளை பலியிடுவதை தடை செய்துள்ளார். இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்று அழைக்க வேண்டும்.
டெல்லி முதல் மதுரை வரை, நீதி அதன் சொந்த மனசாட்சியை விட வேகமாக திமுக அரசாங்கத்தைத் துரத்துவது போல் தெரிகிறது.
இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
- இதுகுறித்து சிவில் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
- இஸ்லாமியர்கள் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய உத்தரவை உறுதிப்படுத்தினார்.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் ஆடு, கோழி பலியிட தடைவிதித்து நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவை உறுதிப்படுத்தி, மூன்றாவது நீதிபதி ஆர். விஜயகுமார் இன்று தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் அவர் உறுதிப்படுத்தினார்.
திருப்பரங்குன்றம் மலையின் சில பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என்றும், சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட்டு மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதாகவும், இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
மேலும், இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் ஜெ. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமர்வு விசாரித்து மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
இதனால், வழக்கு மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக தனி நீதிபதி தனது விசாரணையைத் தொடர்ந்து நடத்தினார்.
இந்த நிலையில் இறுதியாக, தனி நீதிபதி ஆர். விஜயகுமார் ஆடு, கோழி பலியிட தடை விதித்து, இது குறித்து சிவில் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்ற நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தினார்.
மேலும், இஸ்லாமியர்கள் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் உறுதிப்படுத்தினார். இந்த தீர்ப்புகள் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான நீண்டகால பிரச்சனைகளுக்கு ஒரு முடிவை எட்டியுள்ளன.
- வியாசர்பாடி எஸ்.எம்.நகரில் உள்ள வீட்டுக்கு நாகேந்திரனின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
- வியாசர்பாடி பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நேற்று காலை உயிரிழந்தார்.
அவரது மரணம் தொடர்பாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இன்று காலை 11.30 மணியளவில் மாதவரம் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு தீபா விசாரணை நடத்தினார். இதன்பிறகு நாகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி எஸ்.எம்.நகரில் உள்ள வீட்டுக்கு நாகேந்திரனின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தியவுடன் கொடுங்கையூர் முல்லை நகர் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இதையொட்டி வியாசர்பாடி பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வியாசர்பாடி வீட்டிலிருந்து முல்லை நகர் மயானம் வரையில் நாகேந்திரனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் வழியிலும் இன்று மாலையில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக நாகேந்திரனின் மகன்கள் அஸ்வத்தாமன், அஜித் ஆகியோர் சிறையில் இருந்து பரோலில் வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் எனவே அவரது உடலை தங்கள் தரப்பு மருத்துவரை வைத்து பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் அவரது மனைவி சென்னை ஐகோர்ட்டில் இன்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த ஐகோர்ட்டு, அதற்கென நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பிரேத பரிசோதனை செய்வார்கள் என்று தெரிவித்தது. இருப்பினும் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் நீதிபதி சதிஷ்குமார் தெரிவித்தார்.
- மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் சந்திப்பில் இந்த நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
- தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்காக மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. காங்கிரஸ், த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரில் சென்று ஆதரவு திரட்டும் பணியில் மும்முரம் காட்டி வருகிறது.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் தீவிர சுற்றுப்பயணம் செய்து அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் தி.மு.க.வுக்கும் ஆதரவு திரட்டி வருகிறார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தொகுதி வாரியாக "தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம்" என்கிற பிரசார பயணத்தை நடத்தி வருகிறார்.
த.வெ.க. தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வந்த நிலையில் கரூர் சம்பவத்தை அடுத்து அவரது சுற்றுப்பயணம் சில வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும் தமிழகத்தில் மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களையும் மாநில அரசின் குறைபாடுகளையும், தி.மு.க.வுக்கு எதிரான விமர்சனங்களையும் முன்னெடுக்கும் வகையில் தேர்தல் பணியை தொடங்கி உள்ளன.
பா.ஜ.க. மதுரையில் நாளை மறுநாள் 12-ந்தேதி முதல் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" என்ற பெயரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளது. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த பிரசார சுற்றுப்பயணத்தை மதுரையில் இருந்து தொடங்க திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் சந்திப்பில் இந்த நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். அங்கு தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்காக மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த முதல் கட்ட பிரசார சுற்றுப்பயண தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பங்கேற்பதாக இருந்த நிலையில் அவரது வருகை திடீரென ரத்து செய்யப்பட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடக்க விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வின் பிரசார சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
அந்த வகையில், பா.ஜ.க. பிரசார பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் பங்கேற்க இருக்கிறார்கள். இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாநகர், மதுரை புறநகர், மதுரை புறநகர் மேற்கு, மதுரை புறநகர் மேற்கு மற்றும் அண்டை மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து 12-ந் தேதி நடைபெறும் பா.ஜ.க. பிரசார பயண தொடக்க விழாவில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
விழாவில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அ.தி.மு.க.வின் முக்கிய கூட்டணி கட்சியான பா.ஜ.க. பிரசார பயணத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சியினரும் பங்கேற்க ஆர்வம் காட்டி வருவதால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- பரிசோதனையை வைத்துக் கொண்டு அய்யாவுக்கு உடல்நிலை சரியில்லை வந்து பாருங்கள் என போன்மேல் போன் போட்டு அழைப்பு.
- ஐயாவுக்கு ஏதாவது ஒன்று ஆட்சினா., தொலைச்சிப் போட்டுருவேன். சும்மா விடமாட்டேன்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை உத்தண்டியில் பேசும்போது தெரிவித்ததாவது:-
* மருத்துவர் ஐயா அவர்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளார்.
* ஐயா அவர்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். இது ஏற்கனவே திட்டமிட்ட ஒரு மருத்துவ பரிசோதனைதான். பரிசோதனை முடிந்து நல்ல உடல் நலத்துடன் உள்ளார்.
* பரிசோதனையை வைத்துக் கொண்டு அய்யாவுக்கு உடல்நிலை சரியில்லை வந்து பாருங்கள் என போன்மேல் போன் போட்டு., இதெல்லாம் அசிங்கமாக உள்ளது.
* யார் யாரோ வந்து பார்த்துக் கொண்டு போய் கொண்டிருந்தார்கள். வந்து பாருங்க., வந்து பாருங்க.. எனச் சொல்லிக்கிட்டு.., அவர் என எக்சிபிஷனா?
* ஐயா பாதுகாப்பிற்கான, அருகில் யாரையும் விடமாட்டேன். இவர்கள் கதவை தட்டி நேராக சென்று., ஐயாவை தூங்க விடவில்லை.
* ஐயாவுக்கு ஏதாவது ஒன்று ஆட்சினா., தொலைச்சிப் போட்டுருவேன். சும்மா விடமாட்டேன்.
* வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ற நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?.
* ஐயாவை வைத்து டிராமா செய்து, நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
- 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.
- விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந்தேதி நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.
அதில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா வருகிற 22-ந்தேதி அதிகாலையில் யாக பூஜையுடன் தொடங்குகிறது.
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணிக்கு யாக பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் மண்டபம் வந்து சேர்கிறார். அங்கு தீபாராதனை நடைபெற்று மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் மாலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க நேரில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந்தேதி நடக்கிறது. அன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு தீபாராதனை நடைபெறுகிறது.
பின்னர் மதியம் 3 மணிக்கு அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் மாலை 4 மணிக்கு கடற்கரையில் எழுந்தருளி அங்கு தன்னை எதிர்த்து வரும் சூரபத்மனிடம் போரிட்டு சூரனை சம்சாரம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்று பின்னர் கிரி பிரகாரம் வழியாக வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான 28-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தெய்வானை அம்மாள் தவசு காட்சிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் அருகில் வந்து சேர்தல் நடக்கிறது. அங்கு மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் அம்பாளுக்கு காட்சி கொடுத்து அங்கு தோல் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது அன்று இரவு 11 மணிக்கு ராஜ கோபுரம் அருகில் திருக்கல்யாணம் நடக்கிறது. விழா நாட்களில் கோவில் கலையரங்கில் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






