என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வாக்குப்பதிவின்போது முதியவர்கள் அதிகமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்
    • தேர்தல் அலுவலர்களின் உதவியுடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

    மதுரை:

    தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளுக்கு நேற்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. மதுரையில் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்றது. மதுரையை பொருத்தவரையில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது முதியவர்கள் அதிகமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

    இந்த நிலையில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர் லீலா (வயது 99). இவரது 2 மகள்கள் வெளிநாட்டில் உள்ளனர். இவரது மற்றொரு மகள் வீடு தவிட்டுசந்தை பகுதியில் உள்ளது. இவர் அப்பகுதியில் மகளுடன் வசித்து வருகிறார்.

    இவருக்கு மதுரைவடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே.கே.நகர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தது. இதற்கான வாக்குச்சாவடி கே.கே.நகர் மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. தபால் மூலம் வாக்களிக்கும் முதியவர்களுக்கான உரிமைக்கு விண்ணப்பிக்க காலம் கடந்ததாக கூறப்படுகிறது. எனவே நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க விரும்பினார். 99 வயதான இவர் நடக்க முடியாத முதுமையான நிலையில் காணப்பட்டதால் வாக்களிக்க உதவுமாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கோரிக்கை விடுத்தார்.

    இவரது கோரிக்கையை ஏற்று மூதாட்டி லீலா ஆம்புலன்சில் சென்று வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு தனது உதவியாளருக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதன் பேரில் ஆம்புலன்சு ஏற்பாடு செய்யப்பட்டு தவிட்டுசந்தையில் உள்ள அவரது மகள் இல்லத்தில் இருந்து மூதாட்டியை வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிக்கு ஆம்புலன்சு மூலம் தன்னார்வலர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவர் தேர்தல் அலுவலர்களின் உதவியுடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். 99 வயது மூதாட்டி லீலா தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு அமைச்சர் உதவிய சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • நேற்று 2-வது நாளாக வனப்பகுதியில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்தது.
    • வனப்பகுதி முழுவதும் எரிந்து விடுமோ என வனத்துறையினர் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது.இங்கு தாளவாடி, ஆசனூர், தலமலை, ஜீர்கள்ளி, கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம் பவானிசாகர், சத்தியமங்கலம், விளாமூண்டி என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இந்த வனப்பகுதிகளில் யானைகள், சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, குரங்கு ஆகிய வன விலங்குகள் வசித்து வருகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த புலிகள் காப்பக பகுதிகள் தற்போது கடும் வறட்சி நிறைந்த பகுதியாக மாறி உள்ளது. வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது.

    இதனால் வனவிலங்குகள் போதிய அளவு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் ஊருக்குள் புகுவது தொடர்கதை ஆகி வருகிறது வனவிலங்குகள் தண்ணீர் இருக்கும் பகுதியான மாயாறு பகுதிக்கு செல்ல தொடங்கி விட்டன.

    இந்நிலையில் தலமலை வனச்சரகத்திக்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதை வனப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீர் என காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டு தீயால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் பற்றி எரிந்தது. பல அபூர்வ மூலிகை செடிகளும் எரிந்து நாசமானது.

    அடர்ந்த வனப்பகுதி என்பதால் மலை உச்சியில் இருப்பதாலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமலும் சம்பவ இடத்துக்கு இடத்துக்கு செல்ல முடியாமல் வனத்துறையினர் திணறினர். இந்த காட்டு தீயால் பல ஏக்கர் பரப்பளவு உள்ள மரம், செடிகள், கொடிகள் எரிந்து நாசமானது.

    இந்நிலையில் நேற்று 2-வது நாளாக வனப்பகுதியில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் வனப்பகுதி முழுவதும் எரிந்து விடுமோ என வனத்துறையினர் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    ஆனால் நேற்று மாலை ஒரு மணி நேரம் தாளவாடி மலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக தாளவாடி மலைப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த காட்டுத்தீ தானாகவே அணைந்தது. இதனால் வனத்துறையினர், அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனால் பல ஏக்கர் பரப்பிலான செடி, கொடிகள் தப்பியது.

    • ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம்
    • "மக்கள் தீர்ப்பே மகேசன் நீர்ப்பு" என்ற வகையில், மக்கள் நல்ல தீர்ப்பு அதிமுக தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று நம்புவோம்

    மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற மனதார எனது வாழ்த்துக்களை தேரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலுக்காக கூட்டணி சார்பாக களத்தில் இணைந்து கூட்டணி வேட்பாளர்களுக்காக அரும்பாடு பட்டு உழைத்த அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். கூட்டணி தர்மத்தோடு வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு களத்தில் இறங்கி உழைத்த அனைத்து வெற்றி வீரர்களுக்கும், களப்பணி ஆற்றிய கழக வீரர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மீண்டும் பாராட்டுக்களை தெரிவித்தும் கொள்கிறேன்.

    ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம். வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். "மக்கள் தீர்ப்பே மகேசன் நீர்ப்பு" என்ற வகையில், மக்கள் நல்ல தீர்ப்பு அதிமுக தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று நம்புவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது தி.மு.க.வின் வழக்கம்.
    • காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தி.மு.க. அரசு அடகு வைத்து விடக்கூடாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதல்-அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையாவும், துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமாரும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக்கொள்ள முடியாது.

    கர்நாடக முதல்- அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதுகுறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

    எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது தி.மு.க.வின் வழக்கம். இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தி.மு.க. அரசு அடகு வைத்து விடக்கூடாது.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதை உணர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதல்-அமைச்சர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஏப்.24-ந்தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆக இருக்கக்கூடும்.
    • தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஏப்.23 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

    மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வியர்வை மழையில் நனைந்தபடியே கொளுத்தும் வெயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி பகலில் அதிகரித்து காணப்படும் வெயிலால் இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகரித்து அனல் காற்றே வீசுகிறது.

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில், அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 3-5 செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஏப்.21-ந்தேதி முதல் ஏப்.24-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    ஏப்.24-ந்தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆக இருக்கக்கூடும்.

    மற்ற நேரங்களில் 40-75% ஆகவும், கடலோரப் பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஏப்.23 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அனைத்து கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி
    • வாக்களித்த வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

    அனைவருக்கும் வணக்கம்

    எனக்காக இரவு பகல் பாராமல் உழைத்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, அமமுக, தமாகா, சகோதரர் OPS அணி, பாமக, தமிழர் தேசம் கட்சி, தமமுக, புதிய நீதி கட்சி, தமகமுக, காமராஜர் மக்கள் கட்சி மற்றும் மக்கள் ராஜ்ஜியம் கட்சி என அனைத்து கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி.

    குறிப்பாக இந்த மக்களவை தேர்தலை ஒருங்கிணைத்து நடத்திய இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் ஆதரவளித்த பார்க்கவகுல முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். வாக்களித்த வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்

    டாக்டர் பாரிவேந்தர்

    நிறுவனர் , IJK

    • தேவையான மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைக்க மது பிரியர்கள் ஆர்வம் காட்டினர்.
    • இன்று ஒரே நாளில் மட்டும் வழக்கமான விற்பனையை விட கூடுதலாக மது விற்பனை நடந்தது.

    வேலூர்:

    வேலூரில் பாராளுமன்ற தேர்தலையொட்டி கடந்த 17-ந்தேதி முதல் நேற்று 19-ந்தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நாளையும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    அனைத்து மதுபான கடைகளிலும் குடிமகன்கள் மது குடிப்பதற்காக குவிந்தனர். பலர் கூடுதல் மதுபாட்டில்களை வாங்கி வயிறு முட்ட குடித்தனர். மேலும் பலர் நன்றாக மது குடித்துவிட்டு தங்களது தேவைக்காக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். பல்வேறு இடங்களில் கூட்டம் கூட்டமாக வந்து மது வகைகளை வாங்கிச்சென்றனர்.

    தேவையான மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைக்க மது பிரியர்கள் ஆர்வம் காட்டினர்.

    ஆனால் டாஸ்மாக் கடைகளில் இன்று குவிந்த மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கி குவித்து மொத்தமாக மறைத்து அள்ளிச் சென்றுள்ளனர்.

    இது போன்று வாங்கிச் சென்ற மதுபாட்டில்களை திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கும் அவர்கள் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இதைத் தொடர்ந்து அதுபோன்ற மது விற்பனையை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இன்று ஒரே நாளில் மட்டும் வழக்கமான விற்பனையை விட கூடுதலாக மது விற்பனை நடந்தது. இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்து விற்பனை களைகட்டியது.

    • சாந்தி திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
    • குழந்தைகளுக்கு அரசு உதவி வழங்கி வேலை வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த குஞ்சார்வலசை பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 10 மற்றும் 11 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீன்பிடி தொழிலுக்காக வெளிநாட்டிற்கு சென்ற சங்கர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகள்களுடன் குஞ்சார்வலசையில் சாந்தி தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்காக வேதாளை அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்தல் பணிகள் உதவிக்காக ஊராட்சி மன்றம் சார்பில் சாந்தி தன்னார்வலராக நியமிக்கப்பட்டு நேற்று காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்ந்து வேதாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்கு பதிவு மையம் ஒன்றில் பணி செய்து வந்தார்.

    இந்நிலையில் மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவடைய இருந்த நிலையில் தனது வாக்கை பதிவு செய்வதற்காக அதே பள்ளியில் உள்ள மற்றொரு வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு அறைக்கு வெளியே வந்தபோது சாந்தி திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனையடுத்து வாக்குச்சாவடி மையத்தில் இருந்த மருத்துவர்கள் சாந்தியை பரிசோதனை செய்து பார்த்தபோது சாந்தி உயிரிழந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து உடலை கைப்பற்றிய மண்டபம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    கணவரை இழந்து தனியாக தனது குழந்தைகளுடன் வாழ்ந்து உயிரிழந்ததால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளது. எனவே குழந்தைகளுக்கு அரசு உதவி வழங்கி வேலை வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டன.
    • கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் 8 லட்சத்து 14 ஆயிரத்து 76 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 8 ஆயிரத்து 798 பெண் வாக்காளர்களும், 305 திருநங்கைகளும் என மொத்தம் 16 லட்சத்து 23 ஆயிரத்து 179 வாக்காளர்கள் உள்ளனர். கிருஷ்ணகிரி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத், அ.தி.மு.க. சார்பில் ஜெயபிரகாஷ், பா.ஜனதா சார்பில் நரசிம்மன், நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யாராணி, சுயேச்சைகள் உட்பட 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேலும், நேற்று காலை 7 மணியளவில் 1,888 வாக்குச்சாவடிகளில் (கருக்கனஹள்ளி தவிர்த்து) வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. காலையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு, காலை 9 மணிக்கு பிறகு விறுவிறுப்பாக நடந்தது.

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் காலை 9 மணியளவில் 8.78 சதவீத வாக்குகளும், காலை 11 மணியளவில் 23.97 சதவீத வாக்குகளும், பகல் 1 மணியளவில் 39.78 சதவீத வாக்குகளும், மாலை 3 மணியளவில் 51.60 சதவீத வாக்குகளும், மாலை 5 மணியளவில் 64.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டன.

    மேலும், மாலை 6 மணி நிலவரப்படி இறுதியாக கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் 71.31 சதவீத வாக்குகள் பதிவானது.

    இதற்கிடையே ஆந்திர மற்றும் கர்நாடக மாநில எல்லையோரம் அமைந்துள்ள தொகுதி என்பதால் எல்லையோர வாக்குச்சாவடிகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டிய வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மேற்பார்வையில் உள்ளூர் போலீசார், தமிழ்நாடு சிறப்பு போலீசார் ஆந்திரா, கேரளா போலீசார், முன்னாள் படைவீரர்கள், ஊர்க்காவல் படை, துணை ராணுவப்படையினர் உட்பட 3,722 பேர் ஈடுபட்டனர்.

    இதே போல் வாக்குச்சாவடி மையங்களில் 9,281 பணியாற்றினார்கள். ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு, தேர்தல் புறக்கணிப்பு, கட்சியினரிடையே வாக்குவாதம் என இருந்த போதிலும், கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

    • 2 வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது.
    • வீடியோக்களை பார்க்கும் பக்தர்களும், பொதுமக்களும் அவர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தற்போது கும்பாபிஷேகம் செய்வதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில் வளாகத்துக்குள் பெண் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து கருமாரி அம்மன் படத்திற்கு கீழே நாற்காலி போட்டு அமர்ந்துகொண்டு சமூக வலைத்தளங்களில் வரும் மீம்ஸ் ரீல்ஸ் போல வடிவேலு நடித்த படத்தின் காமெடி காட்சிக்கு நடித்துள்ளனர். அங்கிருந்த பக்தர்கள் வேடிக்கை பார்த்ததை கூட அவர்கள் பொருட்படுத்தாமல், நடிகர் வடிவேலு, கோவிலில் தான் பார்த்த வேலையை ராஜினாமா செய்வதுபோல் வசனம் பேசி கோவில் பணியாளர்கள் நடித்தனர்.

    மேலும் அதே கோவில் வளாகத்தில் மற்றொரு வீடியோவில் 'இது போல சொந்தம் தந்ததால், இறைவா வா நன்றி சொல்கிறோம், உனக்கேனும் சோகம் தோன்றினால், இங்கே வா இன்பம் தருகிறோம்' என்ற பாடலுக்கு கோவில் பணியாளர்கள் நடனம் ஆடியுள்ளனர். கோவில் வளாகத்திற்குள் கருவறை அருகே இத்தகைய காட்சிகளில் நடித்துள்ளனர்.

    இந்த 2 வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோக்களை பார்க்கும் பக்தர்களும், பொதுமக்களும் அவர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பக்தர்கள் புனிதமாக கருதும் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் கருவறை அருகே இதுபோன்ற அநாகரிகமாக நடந்து கொண்ட இவர்கள் மீது அறநிலையத்துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
    • கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதளா கிராமங்களில் உள்ள சில கோழி பண்ணைகளில் வாத்துகள் அடுத்தடுத்து இறந்தது. இறந்த வாத்துகளை ஆய்வு செய்ததில் எச்5என்1 என்ற பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது.

    இதையடுத்து கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி தமிழக கேரள எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்ப கவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன் காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 12 சோதனை சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்புத்துறையின் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா? என்பதை கண்காணித்து வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இதையடுத்து தமிழக, கேரள எல்லையான வாளையார் உள்பட 12 சோதனை சாவடிகளிலும் சிறப்பு கால்நடை குழுவினர் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த குழுவில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், 2 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளனர்.

    கேரளாவில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்படும் கறிக்கோழிகள், கோழிகளின் எரு, கோழி முட்டைகள், கோழிக்குஞ்சுகள், வாத்துகள், வாத்து முட்டைகள் உள்ளிட்ட பறவைகள் தொடர்பாக பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை எல்லையிலேயே நிறுத்தி கேரளாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தவிர மாவட்டத்தில் 1252 கோழிப்பண்ணைகள் உள்ளது. இந்த பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக கண்காணித்து வருகிறோம்.

    மேலும் பண்ணைகளில் திடீர் கோழி உயிரிழப்புகள், பறவை காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கால்நடை துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீர் நிலைகளில் உள்ள பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    தவிர கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய 432 மாதிரிகள் எடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் தென்படவில்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க..
    • இரவு, பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் தனி முகவர்கள்; கழக உடன்பிறப்புகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அன்பு வேண்டுகோள்!

    அ.தி.மு.க. 1972-ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே பாராளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

    இந்த இயக்கத்தின் பாராளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, அம்மாவின் காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் 3-வது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு பாராளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு; அம்மாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க..

    ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், 3-வது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அ.தி.மு.க., அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, நேற்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளுக்கும், கோடானு கோடி கழக உடன்பிறப்புகளுக்கும், முகவர்களுக்கும், அதேபோல், கூட்டணி மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற ஜூன் மாதம் 4-ந்தேதி அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும்; கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும்; கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×