என் மலர்
உள்ளூர் செய்திகள்
- டிராக்டரில் பார்த்தபோது தனது இளைய மகன் தேவவிருதனை காணவில்லை.
- குழந்தையை தேடிய போது, லாரியின் அடியில் சிக்கி பலத்த காயத்துடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த எடைபாலயம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 45). விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ராதிகா (35). இவர்களுக்கு மனுநீதி (6), தேவவிருதன் (3) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சிவா செங்கல்பட்டில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு ஹாலோபிளாக் கற்களை எடுத்துக்கொண்டு டிராக்டரில் புறப்பட்டார். அப்பொழுது அவரது குழந்தைகள், நாங்களும் வருவோம் என அடம் பிடித்ததால் குழந்தைகளையும் டிராக்டரில் அழைத்துக் கொண்டு சென்றார்.
இன்று காலை 7.30 மணிக்கு கூட்டேரிப்பட்டு மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கி வார சந்தையின் அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது டிராக்டரின் பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய டிராக்டர் சிறிது தூரம் வேகமாக சென்றது. அதிர்ச்சி அடைந்த சிவா டிராக்டரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார்.
டிராக்டரில் பார்த்தபோது தனது இளைய மகன் தேவவிருதனை காணவில்லை. குழந்தையை தேடிய போது, லாரியின் அடியில் சிக்கி பலத்த காயத்துடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து குழந்தையை மீட்ட சிவா, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.
அப்போது, அங்கு வந்த தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், தந்தை கண்முன்னே குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலம் போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
- தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்வரும் நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பின்பற்ற வேண்டும்.
- 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்வதுடன், பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும்.
சென்னை:
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ், அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடப்பு (2023-24) கல்வி ஆண் டில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் சுயநிதி பள்ளி, ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளி மற்றும் சிறப்பு பள்ளிகளில் 6, 7, 8, 9-ம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்வரும் நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பின்பற்ற வேண்டும்.
அதன்படி, 6, 7-ம் வகுப்பு களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையின்படி ஒருங்கிணைந்த பதிவேட்டில் 3-ம் பருவ தேர்வுக்குரிய மதிப் பெண்கள், கிரேடுகளை பதிவு செய்ய வேண்டும். 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்வதுடன், பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும்.
மாணவர்களின் இடை நிற்றலை தவிர்க்கவும், கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்துக்கு குறையாமலும் ஆசிரியர் குழுவின் ஒப்புதலுடன் 9-ம் வகுப்புக்கான தேர்ச்சி விதிகள் முடிவு செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும்.
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- அதிக அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பெருநகரமாக இருந்தாலும் கூட அதற்கான எந்திரங்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலையிலேயே திருப்பூர் இருக்கிறது.
- தொழிலை முன்னெடுத்து செல்லும் முயற்சியாக ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
திருப்பூா்:
பின்னலாடை உற்பத்தியில் பல்வேறு நிலைகளான நிட்டிங், சாய ஆலை, பதப்படுத்துதல், பினிஷிங், எம்ப்ராய்டரி, பிரிண்டிங், தையல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எந்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை களைய உள்நாட்டிலேயே பின்னலாடை எந்திர உதிரிபாகங்களை தயாரிக்க ஏற்றுமதியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறுகையில், திருப்பூரில் ரூ.34 ஆயிரத்து 350 கோடி பின்னலாடை ஏற்றுமதி, ரூ.30 ஆயிரம் கோடி அளவிலான உள்நாட்டு வர்த்தகம், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்பட அதிக அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பெருநகரமாக இருந்தாலும் கூட அதற்கான எந்திரங்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலையிலேயே திருப்பூர் இருக்கிறது.
பாதுகாப்புத்துறை மற்றும் சந்திராயன்-3 செயற்கைகோள் ஆகியவற்றின் பங்களிப்பிற்காக எந்திரங்களுக்கு தேவையான உபகரணங்கள் தயாரிப்பதற்காக, அரசு தேர்வு செய்த நகரம் கோவை ஆகும்.
பின்னலாடை தொழில் துறைக்கு தேவையான நிட்டிங், சாய ஆலை, பதப்படுத்துதல், பினிஷிங், எம்பிராய்டரி, பிரிண்டிங், தையல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு தேவையான அனைத்து வகையான எந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளான எந்திரங்களின் விலை உயர்வு, அதற்கான அதிக முதலீடு, எந்திரங்கள் வந்து சேர்வதில் காலதாமதம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை நீக்கும் முயற்சியாகவும், முதல் கட்டமாக எந்திரங்களின் உதிரி பாகங்கள் தயாா் செய்ய கவனம் செலுத்துவதில் தொடங்கி அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
நிட்மா சங்கத்தின் தலைவர் அகில் எஸ்.ரத்தினசாமி பேசும்போது, தொழில்துறை உள்நாட்டு வர்த்தகத்தில் இருந்து ஏற்றுமதிக்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும் எந்திர உதிரி பாகங்கள் வாங்குவதிலும் அதற்கான செயல்பாடுகளும் நாம் வெளிநாட்டையே எதிர்நோக்கி இருக்கும் நிலை மாறி தொழிலை முன்னெடுத்து செல்லும் முயற்சியாக ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
- வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.
- தமிழகத்தில் வழக்கமாக கோடை காலத்தில் 54.7 மி.மீ மழை பதிவாக வேண்டும்.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் 1ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு கோடைகால பருவமழை தற்போது வரை இயல்பைவிட 83 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக கோடை காலத்தில் 54.7 மி.மீ மழை பதிவாக வேண்டும்.
தற்போது வரை 9.5 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது.
இதுவரை 16 மாவட்டங்களில் ஒரு சொட்டு கோடை மழை கூட பதிவாகவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
- சந்தையில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர்.
அரூர்:
கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு சந்தையில் நடைபெறும் ஆடு, கோழி உள்ளிட்ட வாங்க விவசாயிகளும், ஆடு வளர்ப்பவரும், விற்பனைக்கு கொண்டு வந்தனர்
ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
நேற்று நடந்த சந்தையில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர். ஒரு ஆடு விலை ரூ. 5,000 முதல் ரூ.9,500 வரையும் விற்பனையானது. சந்தையில் நேற்று ஆடுகள் மொத்தம் ரூ.23 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது வியாபாரிகள் தெரிவித்தனர்.
- தமிழகம் முழுவதுமே வெயில் தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே சுமார் ஒரு மாத காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அடிக்கடி வெப்ப அலையும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதற்கு ஏற்பவே வெயிலின் உக்கிரமும் தினமும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதமே வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. ஈரோடு, திருப்பத்தூர், சேலம் உள்பட சுமார் 12 மாவட்டங்களில் கடந்த மாதமே வெயில் 100 டிகிரியை தாண்டியது. கடந்த 22-ந்தேதி ஈரோடு மாவட்டத்தில் இந்தியாவிலேயே 3-வது அதிக அளவில் வெயில் பதிவாகியுள்ளது. அன்று ஈரோட்டில் 109.4 டிகிரி வெயில் கொளுத்தியது.
நேற்று ஈரோடு, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கரூர், திருத்தணி, வேலூர், திருச்சி, நாமக்கல், கோவை, மதுரை, தஞ்சாவூர், பாளையங்கோட்டை ஆகிய 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. ஈரோட்டில் அதிகபட்சமாக 107.6 டிகிரி வெயில் பதிவானது. திருப்பத்தூர், சேலத்தில் 106 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. ஈரோட்டை பொறுத்தவரை தொடர்ந்து 6-வது நாளாக 108 டிகிரியை நெருங்கி வெயில் பதிவாகி வருகிறது.
சென்னையில் வெயில் 100 டிகிரியை நெருங்கி பதிவாகி வருகிறது. இதனால் சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகம் முழுவதுமே வெயில் தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் வெளியே செல்ல முடிவதில்லை. இரவிலும் காற்று இல்லாததால் புழுக்கத்தின் காரணமாக பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இரவு நேரத்தில் மின் விசிறியில் இருந்து வெளியே வரும் காற்று அனலை கக்குவதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். சென்னை உள்பட தமிழகம் முழுவதுமே வெப்பம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும். மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவிலும் கடுமையான வெப்ப அலை தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்காளத்தில் வெப்ப அலைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வருகிற 30 மற்றும் 1-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி வரை படிப்படியாக உயரக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 102 டிகிரி முதல் 107 டிகிரி வரை பதிவாகும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 95 டிகிரி முதல் 102 டிகிரிவரை பதிவாகும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 முதல் 99 டிகிரியை ஒட்டி இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்கள் வெப்ப அலை தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கடுமையான வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் வருகிற 30-ந்தேதி கடுமையான வெப்ப அலை வீசும். அன்று வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வெப்ப அலை வீசும் என்பதால் அன்று நண்பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம். வெப்ப அலை வீசும் நேரங்களில் அசவுகரியமான சூழல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக்கூடும்.
- குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோடை காலமானது இரண்டு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அதிகப்படியான வெப்பம். இன்னொன்று குடிநீர் தேவை அதிகரிப்பு.

வெப்ப அலை பிரச்சனை குறித்து 2 நாட்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். விரிவான அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டேன். அடுத்து குடிநீர் தேவைகள் குறித்த ஆலோசனைக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும், மாநிலத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளாக விளங்கக்கூடிய தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் குறைந்த அளவு மழை பெய்தது. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறைச்சூழல் குறித்து, தலைமைச் செயலாளரும், பிற துறைச் செயலாளர்களும் விளக்கினார்கள்.

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போது அணைகளில் உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டிய கடினமான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.
இதனை கருத்தில் கொண்டு அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 150 கோடி ரூபாய் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையரைக் கேட்டுக் கொள்கின்றேன்.
குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களும், தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, தடைகளின்றி பராமரித்திட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும்போது, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று ஆணையர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.
இந்த கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, சீரான, தடை இல்லாத மின்சாரம் அவசியம். எனவே இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மின்வாரியத்தின் தலைவரை கேட்டுக் கொள்கிறேன்.
ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டு இருக்கின்றன. இவற்றுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்தோ அல்லது லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களை இப்பணிகளில் முழுமையாக ஊரக வளர்ச்சித் துறை செயலாளரும் இயக்குனரும் ஈடுபடுத்திட வேண்டும்.
நமது மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிந்தும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்க கூடிய நிலையில், இந்தப் முக்கியப் பணிகளில் எந்தவிதமான சுணக்கமும் ஏற்பட்டு விடாமல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் கண்காணித்து வருமாறு தலைமைச் செயலாளரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்பார்வை அலுவலர்கள் தொடர்ந்து நேரில் சென்று குடிநீர் விநியோகப் பணிகளை ஆய்வு செய்து, பற்றாக்குறை உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை பற்றி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.
நமது மாநிலம் இத்தகைய குடிநீர் பற்றாக்குறைச் சூழலை சந்திப்பதால், அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டு அடுத்த இரண்டு மாதங்களில் இந்த பற்றாக்குறையால் நமது மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம். கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ. பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைவர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி. வினய், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிருவாக இயக்குநர் எஸ். சிவராசு, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தூக்கி வீசப்பட்ட போது வத்தலக்குண்டுவில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற மற்றொரு காரும் அவர்கள் மீது மோதியது.
- விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகில் உள்ள போடிகாமன்வாடியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 47). இவர் விருவீடு அரசு மாணவர் விடுதியில் சமையலராக பணிபுரிந்து வந்தார். இவரது உறவினரான வீரக்கல் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (47) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் இன்று வத்தலக்குண்டு சாலை போடிகாமன்வாடிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற கார் இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட போது வத்தலக்குண்டுவில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற மற்றொரு காரும் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ராமகிருஷ்ணன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள்.
இதுகுறித்து செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களது உடல்களை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திரவ நைட்ரஜன் உட்கொள்ளப்படும் போது உதடு, நாக்கு, தொண்டை, நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியை சேதப்படுத்துகிறது.
- 6 மாதங்களுக்கு முன்பே திருச்சியில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் ஸ்மோக்கிங் பிஸ்கெட் விற்றவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை:
அமிலம் கலந்து உணவுப் பொருட்கள் வினியோகம் என்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாடிக்கையாளர்களை கவர ஐஸ்கிரீம், பிஸ்கெட் ஆகியவற்றின் மீது திரவ நைட்ரஜனை கலப்பது சாப்பிடும் போது புகையை வரவழைக்கும்.
இதனால் ஆர்வமுடன் அதை வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் இது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் ஸ்மோக் பிஸ்கெட், ஸ்மோக் பீடா, ஸ்மோக் ஐஸ்கிரீம் விற்பனைக்கு சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவு உட்கொள்ளும் தருணத்தில் திரவ நைட்ரஜனை அதன் மீது கலந்தால் வாயில் இருந்து புகை அதிக அளவில் வரும். இதை சுவாசிப்பதால் ஜீரண மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும்.
இதுதொடர்பாக சென்னை உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பால், தயிர், க்ரீம்கள், விப்பிங் க்ரீம்கள், கொழுப்பு குறைவான க்ரீம்கள், பதப்படுத்தப்பட்ட பழங்கள், பழ ரசங்கள், காய்கறிச் சாறுகள், காபி, தேநீர், மூலிகை பானங்கள் உள்ளிட்டவற்றை நுரைக்கச் செய்வதற்கும், கெட்டுப்போகாமல் பொட்டலமிடுவதற்கும் திரவ நைட்ரஜனை பயன்படுத்தலாம்.
அதே போல, திராட்சை ஒயினில் இருந்து ஆக்ஸிஜனை வெளியேற்றுவதற்கும் அதை பயன்படுத்தலாம். மற்றபடி வேறு எந்த வகையிலும் வணிகர்கள் திரவ நைட்ரஜனை உணவில் சேர்க்கக் கூடாது.
இந்த விதியை மீறினால் ரூ.2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். குற்றம் நிரூபணமானால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, திரவ நைட்ரஜன் கலந்த உணவுப் பொருளை உட்கொண்டு பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்தினருக்கு சம்பந்தப்பட்ட வணிகரிடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தரப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
திரவ நைட்ரஜன் உட்கொள்ளப்படும் போது உதடு, நாக்கு, தொண்டை, நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியை சேதப்படுத்துகிறது. நுரையீரலுக்குள் புகுந்தால் சுயநினைவும் இழக்க வாய்ப்பு உண்டு என்று எச்சரித்துள்ளார்கள்.
அதே நேரம் தொழில் துறை நோக்கங்களுக்காக திரவ நைட்ரஜன் பயன்பாட்டை அனுமதித்துள்ளார்கள். உணவுப் பொருட்களை உறைய வைக்க, குளிரூட்ட, பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அந்த உணவு பொருட்கள் பல மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்குமாம்.
6 மாதங்களுக்கு முன்பே திருச்சியில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் ஸ்மோக்கிங் பிஸ்கெட் விற்றவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல் சென்னையில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இப்போதுதான் தடை வந்துள்ளது.
உணவில் கலந்து பதப்படுத்தி வைத்திருந்தால் அதை சாப்பிடும் போது உடலை பதம் பார்க்காதாம். இதமாக இருக்குமாம். ஆனால் சாப்பிடும் போது அதன் மீது தெளித்து சாப்பிட்டால்தான் ஆபத்தாம்.
- கடந்த 3 மாதமாகவே வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக உச்ச நிலை அடைந்துள்ளது.
- தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
ஏற்காடு:
தமிழகம் முழுவதும் தற்போது வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் வீட்டில் இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக சோர்வடைந்து காணப்படுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் அதிகளவில் நீர், மோர், பழங்கள், கரும்பு பால், இளநீர், நுங்கு ஆகியவற்றை சாப்பிட்டு வெப்பத்தை தணித்து வருகிறார்கள்.
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த 3 மாதமாகவே வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக உச்ச நிலை அடைந்துள்ளது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பகலில் வெப்பம் நிலவி வந்தாலும், இரவிலும் அதன் தாக்கம் குறையவில்லை. இரவில் பேன், ஏர்கூலர் போட்டாலும் வெப்ப காற்றாகவே வருகிறது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக குளு குளு பிரதேசங்களை நோக்கி படையெடுகின்றனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இன்று ஏற்காட்டுக்கு வந்தனர். காலை நேரத்திலேயே சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்தும், பூங்காவில் உள்ள ஊஞ்சலில் விளையாடியும் மகிழ்ந்தனர். மேலும் தற்போது பூக்க தொடங்கியுள்ள டேலியா மலர்கள் முன்பு நின்றும் போட்டோ எடுத்து கொண்டனர். மலைப்பாதையில் கடுமையான வறட்சி நிலவினாலும் ஏற்காடு மலை பகுதியில் களை கட்டும் சீசனை அனுபவிக்க கூட்டம் அலைமோதியது. தற்போது தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்படும். இதனால் வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏற்காட்டில் கோடை மழை பெய்தால் சீசன் இன்னும் களை கட்டும் எனவே கோடை மழையை எதிர்நோக்கி வியாபாரிகள் உள்ளனர்.
- பல்வேறு கோணங்களில் தளி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பலியான சதீஷிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தை உள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:
ஒசூர் அருகே உள்ள தளியில் ஜெயந்தி காலனி அருகே பிரபல ரடிவுயான தளி சதீஷ் என்பவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தளி ஜெயந்தி காலனியில் உள்ள ஒரு எஸ்டேட் முன்பு நேற்று இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே தளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தளி போலீசார் மற்றும் தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் இறந்தவர் யார்? என்ற விவரம் குறித்து விசாரித்தனர்.
இதில் தளி அருகே குனிக்கல் பகுதியைச் சேர்ந்த சந்திரப்பா மகன் சதீஷ் என்கிற குனிக்கல் சதீஷ் (வயது34) என்பவர் தெரியவந்தது.
பிரபல ரவுடியான இவர் கஞ்சா கடத்தல், கொலை வழக்கு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
வீட்டில் இருந்த சதீஷை நேற்று இரவு சில மர்ம நபர்கள் மதுகுடிப்பதற்காக ஜெயந்தி காலனியில் உள்ள எஸ்டேட்டிற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷை தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.
பலியான சதீஷிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தை உள்ளனர். இதில் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து வாங்கி கொண்டு அவர் குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் 2-வதாக வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. சதீஷின் உடலை போலீசார் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்து போன சதீஷ் மீது ஒரு கொலை வழக்கு, 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை வழக்கில் சிக்கியுள்ள சதீஷை யாராவது பழிவாங்குதற்காக வெட்டி கொலை செய்தனரா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது வெட்டி கொலை செய்துள்ளனரா? அல்லது குடிபோதை தகராறில் நண்பர் வெட்டி கொலை செய்தனரா? என்று பல்வேறு கோணங்களில் தளி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குடி பராமரித்து திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டது.
- நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.
எடப்பாடி:
முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு தற்போது நிஜாம் புயல் பாதிப்புக்காக குறிப்பிட்ட நிதியை ஒதுக்கியுள்ளது. இது போதுமான நிதியா என கருத்து கூற இயலாது. காரணம் புயல் பாதிப்பு குறித்த புள்ளி விபரங்கள் தமிழக அரசின் கையில் உள்ளது. இதை அவர்கள் தான் கேட்டு பெற வேண்டும். இதே போல் கடந்த காலங்களில் தமிழகத்தில் பேரிடர் ஏற்பட்டபோது மத்திய அரசு உரிய நிவாரண நிதியை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அந்த காலக்கட்டங்களில் மத்திய ஆட்சி பொறுப்பில் இருந்த தி.மு.க.வும், இது குறித்து எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. எப்போதுமே தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்கியது இல்லை. தற்போது தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் மேட்டூர் அணை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகள் தூர்வாரபடாத காரணத்தினால் கடந்த காலங்களில் பெய்த மழைநீரின் பெரும் பகுதி வீணாக கடலில் கலந்தது.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குடி பராமரித்து திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. இந்த திட்டத்தை நிறுத்திவிட்டது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் அரசு மீதமுள்ள 8000 ஏரிகளை தூர்வாரி இருந்தால் கோடையை சமாளித்து இருக்கலாம்.
தற்போது தமிழக்தில் பல்வேறு இடங்களில் போதை பொருட்களின் புழக்கம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இதை நான் பல முறை சட்டமன்றத்திலும், பொது வெளிகளிலும் வலியுறுத்தியும் தி.மு.க. அரசு இதை கண்டு கொள்ளாததால் தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட விரும்பதகாத நிகழ்வுகள் தொடர்கதையாகி உள்ளது.
இதற்கு உதாரணமாக அண்மையில் சென்னையில் உள்ள கணபதி நகர் என்ற பகுதியில் போதை ஆசாமிகள் 3 பேர் வெறியாட்டத்தில் ஈடுபட்டதையும், அதை தடுக்க இயலாத காவல்துறையின் செயல்பாடுகளும் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து தி.மு.க. ஆட்சியின் மெத்தன போக்கால் தமிழகம் பின்நோக்கி செல்கிறது. மேலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.
இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பிரதமர் மோடி, ராகுல் காந்தி மற்றும் தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி விவகாரம் குறித்த கேள்விகளுக்கு தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கருத்து கூற இயலாது என்று பதில் அளித்தார்.
மேலும் மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க. ஏதேனும் தேசிய கட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமா என்ற கேள்விக்கு தேர்தல் முடிவு வந்த பிறகே முடிவு எடுக்கப்படும். மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க.வின் கட்சி நிர்வாகத்தில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, முடிவு வந்த பின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.






