என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 11 ஆண்டுகள் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கிக் கிடந்தன.
- இத்திட்டத்தின் செலவு தற்போது ரூ.730 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நீட்டித்தால் புழுதிவாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஆகிய பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தத் திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. தூண்கள் அமைக்கப்பட்டு இந்த பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே 500 மீட்டர் பாதையை அமைக்கும் பணியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், நீதிமன்ற வழக்கு போன்றவற்றால் இந்த பணியில் தடை ஏற்பட்டது. இதனால் 11 ஆண்டுகள் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கிக் கிடந்தன.
பின்னர் 2020-ம் ஆண்டு மீண்டும் பணிகள் தொடங்கின. இத்திட்டத்தின் செலவு தற்போது ரூ.730 கோடியாக உயர்ந்துள்ளது. 17 ஆண்டுகள் கிடப்பில் கிடந்த இந்த பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜனவரி மாதத்தில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. ஜனவரி மாதம் இறுதியில் இந்தப் பாதையில் சேவை தொடங்கும். அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்த பின்னர் தேதி உறுதி செய்யப்படும் என்றனர்.
வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை விரைவில் தொடங்க இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட கால தடைக்கு பிறகு இந்தத் திட்டம் பயன்பாட்டிற்கு வருகிறது. இது லட்சக்கணக்கான மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஜனவரி மாதத்தில் ரெயில் சேவை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரெயில்வேதுறை தற்போது செய்து வருகிறது.
- ஆளுநரை தமிழ் கற்க வைத்ததே தமிழ்நாட்டின் போராட்டம் தான்.
- எத்தனை கூட்டணி அமைத்து வந்தாலும் 2026-ம் ஆண்டு தேர்தலில் சங்கிகளை மீண்டும் விரட்டி அடிப்போம்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வே.ஆனைமுத்து நூற்றாண்டு நிறைவு விழா, நூல் வெளியீட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
* நமது நண்பரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேர்தல் பிரசாரத்தை இப்போதே தொடங்கி விட்டார்.
* பாசிச பா.ஜ.க.வுக்கு பிரசாரம் செய்வதாக நினைத்துக்கொண்டு ஆளுநர் ரவி தி.மு.க.விற்கு பிரசாரம் செய்து வருகிறார்.
* தமிழ்நாடு யாருடன் போராடும் என கேள்வி எழுப்பி உள்ளார் ஆளுநர்.
* தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தொடர்ந்து போராடும் என ஏற்கனவே கூறிவிட்டேன்.
* தமிழை பயின்று வருவதாக கூறி இருக்கிறார் ஆளுநர்.
* ஆளுநரை தமிழ் கற்க வைத்ததே தமிழ்நாட்டின் போராட்டம் தான்.
* நேரடியாக தமிழகத்தில் நுழைய முடியாமல் அ.தி.மு.க. தோள் மீது பா.ஜ.க. ஏறி வருகிறது. புதிதாக பலரையும் தேடிக் கொண்டுள்ளது.
* எத்தனை கூட்டணி அமைத்து வந்தாலும் 2026-ம் ஆண்டு தேர்தலில் சங்கிகளை மீண்டும் விரட்டி அடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்வித் தகுதியை பொறுத்தவரை 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க விரும்புவர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை உள்ளாட்சித் துறை வெளியிட்டுள்ளது.
கிராம ஊராட்சிச் செயலர் பணி என்பது, கிராம ஊராட்சி மன்றத்தின் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது, கிராம ஊராட்சிக்கு வரும் அரசாணைகளையும், திட்டங்களையும் செயல்படுத்துவது, கிராம வளர்ச்சித் திட்டங்களை மேற்பார்வையிடுவது போன்ற பொறுப்புகளை உள்ளடக்கியது.
கிராம ஊராட்சி செயலர் பணிக்கு www.tnrd.tn.gov.in தளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் முதல் வாரத்தில் நேர்காணல் நடத்தி, அம்மாத இறுதிக்குள் பணி ஆணை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதியை பொறுத்தவரை 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பிக்க விரும்புவர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
வரும் நவம்பர் 9-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
வரும் நவம்பர் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். பிறகு டிசம்பர் 3-ந்தேதிக்குள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு, டிசம்பர் 4-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஊராட்சிகள் உதவி இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆகியோர் கொண்ட குழுவினர் நேர்காணல் நடத்துவர்.
இதன் முடிவுகள் வரும் டிசம்பர் 16-ந்தேதிக்குள் வெளியிடப்படும். தொடர்ந்து 17-ந்தேதி பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளுக்கு இயக்க ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
- ஒப்பந்தத்தில், கட்டுமானப் பணிகள், நிலையத்தின் வடிவமைப்பு அலங்கார வேலைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பணிகளும் அடங்கும்.
- நுழைவு/வெளியேறும் இடங்களில், பயணிகள் பயன்படுத்தும் வகையில் கடைகள், வணிக வளாகங்கள் உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ரெயில் நிலையங்களில் 17 நுழைவு/வெளியேறும் கட்டமைப்புகளை உருவாக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், இரண்டாம் கட்டத்தின் வழித்தடம் 3-இல் உள்ள நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், PTC காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் 17 நுழைவு/வெளியேறும் கட்டமைப்புகளை (Entry/Exit Structures) வடிவமைத்து கட்டுவதற்கான ஒப்பந்தத்தை Bridge and Roof Company (India) Limited நிறுவனத்திற்கு ரூ.250.47 கோடி (ஜிஎஸ்டி உட்பட) மதிப்பில் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், கட்டுமானப் பணிகள் (civil works), நிலையத்தின் வடிவமைப்பு அலங்கார வேலைகள் (architectural finishes), மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பணிகளும் அடங்கும். மேலும், மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெரும்பாலான நுழைவு/வெளியேறும் இடங்களில், பயணிகள் பயன்படுத்தும் வகையில் கடைகள், வணிக வளாகங்கள் போன்ற போக்குவரத்தை மையப்படுத்திய பிரத்யேக சொத்து மேம்பாட்டு இடங்களை (Transit Oriented Property Development - TOD) உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணச்சீட்டு வருவாயை தவிர்த்து, கூடுதல் வருவாயை (Non-Farebox Revenue) ஈட்ட முடியும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் இ.ஆ.ப., முன்னிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பாக திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன் மற்றும் Bridge and Roof Company (India) நிறுவனத்தின் சார்பாக பொது மேலாளர் திரு.T.ரவி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் திரு.டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), டாக்டர். டி. ஜெபசெல்வின் கிளாட்சன் (ஒப்பந்தம் கொள்முதல்), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தில் சில நாட்களாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அதிலும் பெரும்பாலும் இரவு வேளைகளில் மழை பெய்ததால் உஷ்ணம் குறைந்து இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனிடையே, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில், அக்டோபர் மாதம் தொடங்கி 10 நாட்களாகியும் வடகிழக்கு பருவமழைக்கான எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதிக்குள் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
- அரசு போக்குவரத்துக்கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- மாதவரத்தில் இருந்து இன்றும், நாளையும் 20 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
வார விடுமுறை நாட்களையொட்டி சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்துக்கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 315 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 310 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 55 பஸ்களும் நாளை 55 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
மாதவரத்தில் இருந்து இன்றும், நாளையும் 20 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
- மிரட்டல் விடுத்த நபர் எங்கிருந்து மிரட்டல் விடுக்கிறார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
- நேற்றும் ஒரே நேரத்தில் பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்துக் கொண்டே இருக்கிறார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யின் நீலாங்கரை வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீடு, சென்னை ஐகோர்ட்டு, விமான நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் என பிரபலங்களின் வீடுகளுக்கும், முக்கிய இடங்களுக்கும் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டலை விடுத்துக் கொண்டே இருக்கிறார்.
தொடர்ச்சியாக டி.ஜி.பி. அலுவலகத்தின் இ-மெயில் முகவரிக்கு மிரட்டல் கடிதம் வந்து கொண்டே இருக்கிறது.
இது தொடர்பாக சென்னை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இருப்பினும் மிரட்டல் விடுத்த நபர் எங்கிருந்து மிரட்டல் விடுக்கிறார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
இப்படி ஒரு மாதத்துக்கும் மேலாக முக்கிய இடங்களில் குண்டு வைத்திருப்பதாக கூறிவரும் வாலிபர் எங்கிருந்து மிரட்டல் விடுகிறார் என்பது தெரியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
இ-மெயில் மூலமாக இதுபோன்ற மிரட்டல்களை விடுக்கும் மர்மநபர்கள் தங்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு இமெயில் ஐ.பி. முகவரி உடனடியாக மாறும் வகையில் அதனை தயார் செய்து வைத்துக் கொண்டே மிரட்டல் விடுப்பது வழக்கம்.
இப்படி மிரட்டல் விடும் நபர் எங்கிருக்கிறார் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. எந்த முகவரியில் இருந்து மிரட்டல் வந்துள்ளது என்று போலீசார் ஆராய்ந்து பார்த்தால் அது வெளிநாடுகளில் இருந்து வந்தது போன்று காட்டி விடும்.
இதன் காரணமாகவே மிரட்டல் ஆசாமி எங்கிருக்கிறார் என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற ஒரு டெக்னிக்கை பயன்படுத்தி தான் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபரும் தொடர்ச்சியாக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இ-மெயில் மிரட்டலை அனுப்பி கொண்டே இருக்கிறார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக இதுவரையில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தீவிரவாத தடுப்பு பிரிவு செல்போன் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வெடிகுண்டு மிரட்டல் கிடைத்தால் உடனடியாக அதனை போலீசார் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆனால் இ-மெயில் மூலம் விடுக்கப்படும் மிரட்டல்களை போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்கவே முடியவில்லை. இதன்மூலம் வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கும் மர்மநபர் போலீசுருக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறார்.
இப்படி சென்னை போலீசை அலறவிடும் வெடிகுண்டு மிரட்டல் ஆசாமியை கண்டுபிடிப்பதற்காக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
வெடிகுண்டு மிரட்டல் ஆசாமியை கண்டுபிடிப்பதற்காக சைபர் கிரைம் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியையும் போலீசார் நாடி உள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகர சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கும் நபர் போலீசை குழப்ப வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் செயல்பட்டு வருகிறார்.
இருப்பினும் அவரது மிரட்டல்களை நாங்கள் ஒருபோதும் அலட்சியமாக கருதாமலேயே செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு முறை மிரட்டல் வரும் போதும் வெடிகுண்டு நிபுணர்களோடு சென்று உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தவறுவதில்லை.
தினம்தோறும் வரும் வெடிகுண்டு மிரட்டல்களால் சென்னை போலீசாருக்கு தேவையற்ற பணிச்சுமையும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எனவே ஏதாவது ஒரு வழியில் மிரட்டல் ஆசாமியை கண்டு பிடித்து விட வேண்டும் என்கிற எண்ணத்துடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
இப்படி மிரட்டல் ஆசாமியை பிடிப்பதற்கு போலீசார் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்றும் ஒரே நேரத்தில் பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம், மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம், அசோக் நகரில் உள்ள கிஷோர் கே.சாமி, கோடம்பாக்கத்தில் உள்ள செய்தி ஏஜென்சி நிறுவனம் அலுவலகம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் உள்பட ஒரே நாளில் சுமார் 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
இப்படி வெடிகுண்டு மிரட்டல்களால் சென்னை போலீசை திணறடிக்கும் நபர் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு போலீசார் எடுத்து வரும் நடவடிக்கைகள் பலனளிக்குமா?
இல்லை வெடிகுண்டு மிரட்டல்கள் தொடருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- காய்ச்சல் முகாம் நடத்தியபோது, அங்கு எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்த 7 மாணவர்களை தனிமைப்படுத்தி சோதனையை செய்தனர்.
- கல்லூரி மீது தொடர் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே உள்ள மேலத்திடியூரில் பி.எஸ்.என். என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நெல்லை, தென்காசி மாவட்டங்கள் மட்டும் அல்லாது கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.
இதனால் கல்லூரி வளாகத்திலேயே அவர்களுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இதுதவிர விடுமுறை காலங்களில் அரசு போட்டித்தேர்வுகள் பெரும்பாலானவை இந்த கல்லூரியில் தான் நடந்து வருகிறது.
இந்நிலையில் இங்கு என்ஜினீயரிங் படித்துவரும் உவரியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு சமீபத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவன் நாகர்கோவிலில் ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றபோது எடுத்த பரிசோதனையில், அந்த மாணவனுக்கு விலங்குகளின் சிறுநீர் மூலம் பரவக்கூடிய 'லெப்டோஸ்பை ரோசிஸ்' எனும் எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த தகவல் நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயசந்திரன் தலைமையில் மருத்துவக்குழுவினர் கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
மேலும் அங்கு காய்ச்சல் முகாம் நடத்தியபோது, அங்கு எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்த 7 மாணவர்களை தனிமைப்படுத்தி சோதனையை செய்தனர். அதில் அவர்களுக்கும் எலிக்காய்ச்சல் உறுதியானது. இதையடுத்து உடனடியாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்க கல்லூரி நிர்வாகத்திற்கு சுகாதார அலுவலர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கல்லூரியில் அதிரடி ஆய்வு நடத்தியதில், சுத்திகரிக்கப்படாத குடிநீர், சுகாதாரமற்ற வளாகம், சுத்தமில்லாத கழிப்பறைகள், உணவு பாதுகாப்பு கூடத்தில் பாதுகாப்பு இல்லாத முறையில் உணவு தயாரிப்பு உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அனைத்து சுகாதார பணிகளையும் மேற்கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டனர்.
இதனிடையே நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அலுவலர் புஷ்பராஜ் தலைமையிலான குழுவினர் கல்லூரி உணவு கூடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது சமையல் செய்யும் உபகரணங்களான மாவு அரைக்கும் எந்திரம் உள்ளிட்டவைகள் சுத்தமாக இல்லாததும் அதில் புஞ்சைகள் இருந்ததும், கல்லூரி சமையலறையில் இருந்து அழுகிய காய்கறிகள் இருந்ததும், கல்லூரி வளாகத்தில் முறையான வடிகால் அமைப்பு பின்பற்றப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து உணவுக்கூடத்துக்கான சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்து புஷ்பராஜ் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயசந்திரன் கூறியதாவது:-
கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமான செயல்பாட்டினால் 8 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கல்லூரி மீது தொடர் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது கல்லூரியில் சுகாதார பணிகள் மேற்கொண்டு முழுமையாக முடிந்த பின்னரே கல்லூரியை திறக்க அறிவுறுத்தி உள்ளேன்.
அதேநேரம் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்கள், பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இன்றும், நாளையும் மருத்துவ முகாம் நடத்தி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் மருத்துவக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். வருகிற புதன்கிழமை கல்லூரி திறக்கப்படும் என மாணவர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. முழுமையான சுகாதார பணிகள் முடிந்த பின்னரே திறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
கல்லூரியின் பின்புறம் உள்ள வெள்ளநீர் ஓடையில் இருந்து நீரை எடுத்து குடிக்க, உணவு சமைக்க பயன்படுத்தி வந்துள்ளனர். எவ்வித குளோரினேசனும் செய்யவில்லை. எனவே உடனடியாக வெளியில் இருந்து குடிநீர் விலைக்கு வாங்க வேண்டும். இல்லையெனில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து குளோரினேசன் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். கல்லூரிக்கு செல்லும் குடிநீர் பைப் இணைப்புகள் தாசில்தார் மேற்பார்வையில் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேதாரண்யத்தில் உற்பத்தி பணிகள் பலமுறை பாதிக்கப்பட்டது.
- மழைக்கால விற்பனைக்காக 15 ஆயிரம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே இருப்பு உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் இந்த ஆண்டு 2½ லட்சம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விபரம் வருமாறு:-
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய இடங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் உணவுக்கு தேவையான உப்பும், 6 ஆயிரம் ஏக்கரில் தொழிற்சாலைக்கு தேவையான உப்பும் என மொத்தம் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பணிகள் நடைபெறுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தினமும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திற்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் உப்பு உற்பத்தி பணிகள் ஜனவரியில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு வேதாரண்யம் பகுதியில் அடிக்கடி பெய்த மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் உற்பத்தி பணிகள் பலமுறை பாதிக்கப்பட்டது. மேலும், வழக்கம்போல் ஜனவரி மாதம் தொடங்கிய உற்பத்தி பணிகள் அக்டோபர் முதல் வாரத்திலேயே நிறுத்தப்பட்டது.
கடந்த 8 மாதங்களில் உணவு தேவைக்கான உப்பு 2 லட்சம் மெட்ரிக் டன், தொழிற்சாலைக்கு தேவையான உப்பு 4 லட்சம் மெட்ரிக் டன் என மொத்தம் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், எதிர்பாராத விதமாக அடிக்கடி பெய்த மழையால் உணவு தேவைக்கான உப்பு 50 ஆயிரம் மெட்ரிக் டன், தொழிற்சாலைக்கு தேவையான உப்பு 2 லட்சம் மெட்ரிக் டன் என மொத்தம் 2½ லட்சம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

அகஸ்தியன்பள்ளியில் இருப்பு உள்ள உப்பு பனை மட்டை தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ள காட்சி.
மழைக்கால விற்பனைக்காக 15 ஆயிரம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே இருப்பு உள்ளது. குறைந்த அளவு இருப்பு உள்ள உப்பை சேமித்து, உப்பு மழையில் கரைந்து விடாமல் இருக்க பனைமட்டை மற்றும் தார்ப்பாய் கொண்டு பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளது. இனி அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் தான் உப்பு எடுக்க இயலும். இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி நிறைவு பெற்றது. குறைந்த அளவே உணவுக்கு தேவையான உப்பு இருப்பு இருந்தாலும் தற்போது ஒரு டன் உப்பு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரை மட்டுமே விற்பனையாகிறது. உப்பு உற்பத்தியும் குறைந்து, உப்புக்கான விலையும் அதிகரிக்காதது மிகவும் கவலை அளிக்கிறது என்றனர்.
- குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைக்கு ரூ.1400 முதல் ரூ.1800 வரை வசூலிக்கிறார்கள்.
- தென் மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கும் பிற பகுதிகளில் இயக்கக்கூடிய ஆம்னி பஸ்களிலும் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை:
பண்டிகை காலம் என்றாலே ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. எத்தனை முறை அரசு எச்சரித்தாலும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதில் உறுதியாக உள்ளனர்.
தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அதன் தேவையை கருத்தில் கொண்டு கட்டணங்களை 3 மடங்கு உயர்த்தி விட்டனர்.
சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லக்கூடிய அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டன.
காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்ததால் முன்பதிவையும் நிறுத்தி விட்டனர். அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. இதனால் மக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நாடி செல்கிறார்கள்.
சொந்த ஊர் சொல்வதற்காக வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பொதுமக்கள் பெருமளவில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதை அறிந்த ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் தங்களது இணையதளத்தில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர். சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ஏ.சி. இருக்கைக்கு ரூ.600 முதல் ரூ.900 ரூபாய் வசூலிக்கப்படும்.
ஆனால் இப்போது ரூ.2000 முதல் ரூ.3000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஆம்னி பஸ்சில் இந்த கட்டணம் ரூ.3989 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைக்கு ரூ.1400 முதல் ரூ.1800 வரை வசூலிக்கிறார்கள்.
ஏ.சி. படுக்கை வசதிக்கு மதுரைக்கு ரூ.2000 முதல் ரூ.3200 வரை வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.2000 முதல் கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஏ.சி. படுக்கை வசதி கட்டணம் ரூ.3500. ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.2,700 கட்டணம் தற்போது நிர்ணயித்து உள்ளனர்.
இதே போல நாகர்கோவிலுக்கு குளிர்சாதன வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.2460 கட்டணம் அதிகபட்சமாக வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.3363 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தக் கட்டணம் தீபாவளி நெருங்கும் நேரத்தில் இன்னும் அதன் தேவையை பொருத்து உயர்த்தி கொள்வார்கள். அதிக கட்டணம் வசூலிப்பதால் நடுத்தர மக்கள் குடும்பமாக பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதே போல தென் மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கும் பிற பகுதிகளில் இயக்கக்கூடிய ஆம்னி பஸ்களிலும் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த போதிலும் தனியார் பஸ் ஆபரேட்டர்கள் வெளிப்படையாக தங்களது இணையதளத்தில் கூடுதல் கட்டணத்தை அறிவித்து முன்பதிவு செய்கிறார்கள். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் அரசு எச்சரிப்பதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
எனவே பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் மீது அரசு சரியான நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும். விசேஷ நாட்களை பயன்படுத்தி இதுபோன்ற கட்டண கொள்ளையில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள்.
மேலும் கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்கினால் ஆம்னி பஸ்களின் பயன்பாடு குறையும். கட்டணத்தையும் குறைக்க வழியுண்டு. எனவே தென் மாவட்டங்களுக்கு பகல் நேர ரெயில்களை கூடுதலாக இயக்க வேண்டும். முன்பதிவு இல்லாத ரெயில் சேவையை அதிகரித்தால் ஏழை, நடுத்தர மக்கள் பயணம் செய்ய உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.
- ஜனநாயகத்தை காக்க சர்வாதிகாரத்தை ஒழிக்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும்.
- அ.தி.மு.க. மாபெரும் கூட்டணியை அமைக்கும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., தமிழகத்தின் மக்கள் உரிமையை பெற்றுத்தரக்கூடிய கட்சி. கரூர் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டால் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தயக்கம். த.வெ.க., தொண்டர்களை பொய் வழக்குகளை போட்டு மிரட்டுகிற செயல்களில் மு.க.ஸ்டாலின், காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த வண்டி வெகுகாலம் ஓடாது.
த.வெ.க., தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டால் அதற்கு அ.தி.மு.க., குரல் கொடுக்கும். கோவையில் ரூ.1635 கோடியில் பெரிய பாலத்தை தொடங்கி வைத்துள்ளனர். 4 ஆண்டு காலத்துக்கு முன்னரே வேலை எல்லாம் முடிந்து விட்டது.
4 ஆண்டுகளாக இறங்குதளம் அமைக்கும் வேலையும், பெயிண்ட் அடிக்கும் வேலையும் தான் செய்திருக்கிறார்கள். இந்த பாலத்தை கொண்டு வந்தது அ.தி.மு.க., என்று மக்கள் அறிவார்கள். வழக்கம் போல மு.க.ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி, தான் செய்தது போல காட்டுவது வேடிக்கை, நகைச்சுவை.
ஜனநாயகத்தை காக்க சர்வாதிகாரத்தை ஒழிக்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும். மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்.
அ.தி.மு.க. மாபெரும் கூட்டணியை அமைக்கும். அ.தி.மு.க. கூட்டத்தில் த.வெ.க.வினர் வந்தது கூட்டணிக்கு பிள்ளையார் சுழி என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். அதில் இருந்து நீங்களே புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 6 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று கனமழை பெய்து உள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






