என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல்லையில் சுகாதாரத்துறை சோதனை: தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு
    X

    நெல்லையில் சுகாதாரத்துறை சோதனை: தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு

    • காய்ச்சல் முகாம் நடத்தியபோது, அங்கு எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்த 7 மாணவர்களை தனிமைப்படுத்தி சோதனையை செய்தனர்.
    • கல்லூரி மீது தொடர் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே உள்ள மேலத்திடியூரில் பி.எஸ்.என். என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நெல்லை, தென்காசி மாவட்டங்கள் மட்டும் அல்லாது கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.

    இதனால் கல்லூரி வளாகத்திலேயே அவர்களுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இதுதவிர விடுமுறை காலங்களில் அரசு போட்டித்தேர்வுகள் பெரும்பாலானவை இந்த கல்லூரியில் தான் நடந்து வருகிறது.

    இந்நிலையில் இங்கு என்ஜினீயரிங் படித்துவரும் உவரியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு சமீபத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவன் நாகர்கோவிலில் ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றபோது எடுத்த பரிசோதனையில், அந்த மாணவனுக்கு விலங்குகளின் சிறுநீர் மூலம் பரவக்கூடிய 'லெப்டோஸ்பை ரோசிஸ்' எனும் எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த தகவல் நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயசந்திரன் தலைமையில் மருத்துவக்குழுவினர் கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் அங்கு காய்ச்சல் முகாம் நடத்தியபோது, அங்கு எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்த 7 மாணவர்களை தனிமைப்படுத்தி சோதனையை செய்தனர். அதில் அவர்களுக்கும் எலிக்காய்ச்சல் உறுதியானது. இதையடுத்து உடனடியாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்க கல்லூரி நிர்வாகத்திற்கு சுகாதார அலுவலர் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கல்லூரியில் அதிரடி ஆய்வு நடத்தியதில், சுத்திகரிக்கப்படாத குடிநீர், சுகாதாரமற்ற வளாகம், சுத்தமில்லாத கழிப்பறைகள், உணவு பாதுகாப்பு கூடத்தில் பாதுகாப்பு இல்லாத முறையில் உணவு தயாரிப்பு உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அனைத்து சுகாதார பணிகளையும் மேற்கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டனர்.

    இதனிடையே நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அலுவலர் புஷ்பராஜ் தலைமையிலான குழுவினர் கல்லூரி உணவு கூடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது சமையல் செய்யும் உபகரணங்களான மாவு அரைக்கும் எந்திரம் உள்ளிட்டவைகள் சுத்தமாக இல்லாததும் அதில் புஞ்சைகள் இருந்ததும், கல்லூரி சமையலறையில் இருந்து அழுகிய காய்கறிகள் இருந்ததும், கல்லூரி வளாகத்தில் முறையான வடிகால் அமைப்பு பின்பற்றப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து உணவுக்கூடத்துக்கான சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்து புஷ்பராஜ் உத்தரவிட்டார்.

    இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயசந்திரன் கூறியதாவது:-

    கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமான செயல்பாட்டினால் 8 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கல்லூரி மீது தொடர் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது கல்லூரியில் சுகாதார பணிகள் மேற்கொண்டு முழுமையாக முடிந்த பின்னரே கல்லூரியை திறக்க அறிவுறுத்தி உள்ளேன்.

    அதேநேரம் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்கள், பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இன்றும், நாளையும் மருத்துவ முகாம் நடத்தி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் மருத்துவக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். வருகிற புதன்கிழமை கல்லூரி திறக்கப்படும் என மாணவர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. முழுமையான சுகாதார பணிகள் முடிந்த பின்னரே திறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    கல்லூரியின் பின்புறம் உள்ள வெள்ளநீர் ஓடையில் இருந்து நீரை எடுத்து குடிக்க, உணவு சமைக்க பயன்படுத்தி வந்துள்ளனர். எவ்வித குளோரினேசனும் செய்யவில்லை. எனவே உடனடியாக வெளியில் இருந்து குடிநீர் விலைக்கு வாங்க வேண்டும். இல்லையெனில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து குளோரினேசன் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். கல்லூரிக்கு செல்லும் குடிநீர் பைப் இணைப்புகள் தாசில்தார் மேற்பார்வையில் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×